இன்றைய தேதிக்கு பெத்த அப்பனுக்குக் கூட ஒண்ட இடம் கொடுக்காத மகன்களும், பெத்த மகன்களுக்குக் கூட அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் தகப்பன்களுக்கு மத்தியில் இவர்கள் மட்டும் ஒரு புது விதமாக வட்டி இல்லாக் கடன்களை வழங்க முன் வந்திருக்கிறார்கள்.
யார்
பார்ஸி இனத்தவர்கள். இந்தியாவிலேயே தனி நபர் வருமானத்தில் முன்னிலையில் இருக்கும் சமூகம் இவர்களுடையது. எண்ணிக்கையில் குறைவான இவர்கள் இந்தியாவின் உச்ச பதவிகளிலும், தொழில்துறையில் முக்கிய இடங்களிலும் இருக்கிறார்கள். ரத்தன் டாடா, ஆதி கோத்ரெஜ், நுஸ்லி வாடியா, நடிகர் ஜான் ஆப்ரகம், பொம்மன் இரானி போன்றவர்கள் எல்லாம் இந்தியாவில் ஆழமாக தங்கள் துறைகளில் கால் ஊன்றி நிற்கும் பார்சிகள்.
குழு
இந்தியாவில் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு World Zaruthusthi Chamber of Commerce என்கிற அமைப்பு World Zoroastrian Organisation Trust Fund-ல் இருந்து பணத்தைக் கொடுக்க இருக்கிறார்கள். அதுவும் வட்டி இல்லாமல், ஐந்து ஆண்டு காலத்துக்கு கடனாகக் கொடுக்கிறார்கள்.
எவ்வளவு தொகை? எப்படி..?
ஒரு நபருக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் மூன்று பேருக்கு வழங்க இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வட்டி இன்றி திரும்பக் கொடுத்தால் போதுமாம். இந்த ஐந்து ஆண்டு காலம் என்பது பிசினஸைப் பொறுத்து நீட்டிக்கக் கூட வாய்ப்பு இருக்கிறதாம்.
எப்படி தேர்வு செய்தார்கள்?
கடந்த ஐந்து மாத காலமாக நடத்தப்பட்ட பலகட்ட பேச்சு வார்த்தைகள், நேர்முகத் தேர்வுகள், தொழில் பகுப்பாய்வுகள், செய்யவிருக்கும் தொழிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் பிசினஸ் எதிர்காலம் என அனைத்தையும் பரிசீலித்து இந்த தொகையை வழங்க இருக்கிறார்கள்.
யார் தீர்மானிப்பார்கள்?
பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது தொழிலதிபர்கள் தேர்வுக் குழுவில் இடம் வகித்தார்களாம். இந்த ஒன்பது பேரின் தேர்வின் அடிப்படையில் தான் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் உதவித் தொகை கொடுத்திருக்கிறார்களாம்.
ஏன் செய்கிறார்கள்?
எங்களுக்கு எப்போதுமே இட ஒதுக்கீட்டில் நம்பிக்கை இருந்ததில்லை. எனவே எங்கள் இளைஞர்களை ஊக்குவிக்க, எங்கள் சமூகத்துக்கு தேவையானவைகளைச் செய்ய இதை ஒரு வாய்ப்பாக பார்க்கிறோம். என்கிறார் World Zaruthusthi Chamber of Commerce அமைப்பின் தலைவர் கேப்டன் பெர்சி மாஸ்டர். இனி தேர்வானவர்கள் விவரம்...
சிப்ரஸ் பிதவாலா
2017-ல் சூரத்தில் ஷிப்பிங் துறை சார்ந்த நிறுவனத்தைத் தொடங்கியவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. "எனக்கு தேவையான பணம் கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அதோடு என் பிசினஸுக்கு அவசியமான அட்வைஸ்களும், தொழிலதிபர்களிடம் இருந்து கிடைப்பது தான் பெரிய விஷயமாகக் கருதுகிறேன்" என்கிறார் இந்த 41 வயது வெற்றியாளர் சிப்ரஸ் பிதவாலா.
முர்சன் கரை
51 வயது பிசினஸ் இளைஞர். 2005-ல் இருந்து தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் லேசர் ரக சாயங்கள் மற்றும் சில ஸ்பெஷல் ரசாயனங்களை உற்பத்தி செய்து வருகிறார். "எனக்கு இந்த 25 லட்சம் ரூபாய், பிசினஸை விரிவாக்கம் செய்யத் தேவைப்படுகிறது. காசு கிடைத்திருப்பதால், இப்போது இந்த பணத்துக்கு, வட்டி கட்டத் தேவை இல்லை. அதோடு ஐந்து ஆண்டுகாலத்துக்கு இந்த கமிட்மெண்டை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். சுருக்கமாக என் பிசினஸில் இப்போது பணப் புழக்கம் அதிகரித்திருக்கிறது" என குதூகலிக்கிறார்.
ஊர்வக்ஷ் தவாடியா
கடன் தொகையை வென்ற 3 பேரில் இவர் தான் வயதில் சிறியவர். வெறும் 26 வயது க்காரர். "எனக்கு கல்லூரியில் படிக்கும் போதிருந்தே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என ஆசை இருந்தது. எனவே 2016-லேயே சொந்தமாக வாகனங்களுக்கான லித்தியம் ஐஆன் ரக பேட்டரிகளை தயாரிக்கத் தொடங்கினேன். aதுவும் அப்பாவின் உதவியோடு. இன்று என் பிசினஸுக்கு என்னால், சொந்தமாக 25 லட்சம் ரூபாய் வட்டியே இல்லாமல் கொண்டு வர முடிந்திருக்கிறது" என கொண்டாடுகிறார்.
ஒரு சின்ன வருத்தம்
ஆனால் பார்சிக்கள் உதவுவது மற்ற சமூகத்தினருக்கு அல்ல. தங்கள் சமூகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே... என்பது கொஞ்சம் உறுத்தலாகத் தான் இருக்கிறது. எப்படியோ சமூகத்தில் தொழில் செய்ய விரும்பும் தங்கள் சமூகத்தினரையாவது மேலே கொண்டு வருகிறார்களே என சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.