இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சிறு தொழில்நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் இருத்து விலக்கு பெறும் உச்சவரம்பை இருமடங்காக்கி ரூ40 லட்சமாக நிர்ணயித்து ஆறுதலை அளித்துள்ளது நிதி அமைச்சகம். மேலும் 1% வரி செலுத்தும் தொகுப்பு திட்டத்தை பெற அதிகபட்ச விற்று முதல் வரம்பாக ரூ1.5 கோடி என்பது ஏப்ரல்1 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. எனினும், இன்னும் ஏராளமான கோரிக்கைகள் கவனிக்கப்படாமலேயே உள்ளன.
எதிர்பார்ப்பு
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கோரிக்கைகள் மற்றும் சாதனைகளை எடுத்துக்கூறும் பிரத்தியேக இணையதள ஊடகமான கேஎன்என் அறிக்கையின் படி, பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இத்துறைக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இத்துறையில் ஏற்கனவே பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எளிதாக தொழில் செய்தல் மற்றும் பொருளாதார சவால்கள் போன்றவை இன்னும் பிரச்சனையாகவே உள்ளன.
மோடி அரசிடம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் எதிர்பார்ப்புகளின் பட்டியல் இதோ.
கடன் கிடைத்தல்:
உலகவங்கியின் தரவுகளின் படி, இந்திய சிறுகுறு நடுத்தர தொழில்துறையில் கடன் தேவை மற்றும் வழங்களுக்கான இடைவெளி 230 பில்லியன் டாலர். சிறுதொழில் நிறுவன முதலாளிகள் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் பெற முடியாமல் இத்துறையை விட்டு வெளியேறுவதால், நாட்டின் 40% ஜிடிபி மூலதனம் குறைகிறது.
வரிகள்:
ஈவுத்தொகை வரியை குறைத்தல் உள்ளிட்ட வரி முன்னெடுப்புகளை சிறுகுறு நடுத்தர தொழில்துறை முன்வைக்கிறது.மேலும் தொழில்துறையில் பின்தங்கியுள்ள பகுதிகளில் திறன்மேம்பாட்டுடன் இணைந்த பெருநிறுவன சமூக சேவைகளுக்கு 100% வரி சலுகை வழங்குதல் போன்றவையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் மேம்பாடு:
சிறுதொழில்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்துவதாக இருந்தாலும், மிகவும் குறைவாகவே நடைபெறுகிறது. டிஜிட்டல் முறையை ஏற்றுக்கொள்ள அரசின் முன்னெடுப்புகள் பெரிதும் உதவும்.
புதுமைகள்:
புதுமைகளை ஊக்குவிக்க அரசு கடந்த காலங்களில் முயற்சி எடுத்த போதிலும், அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் கவனம் செலுத்தவில்லை. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஆண்டு முழுமைக்குமான நிதி ஒழுக்கீடு இருக்காது. மே மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் நிலையில், இது தான் இந்த அரசின் கடைசி நிதிநிலை அறிக்கையாக இருக்கும்.