இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு இணையாக ஆன்லைன் டாக்ஸி நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக உபர் இந்தியாவில் தனது சேவையை அறிமுகப்படுத்திய பின்பு ஓலா நிறுவனம் டாக்ஸி பார் ஸ்யூர் நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது சேவையை இந்தியா முழுவதும் அதிரடியாக விரிவாக்கம் செய்து இப்பிரிவில் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் உபர் நிறுவனம் சமீபத்தில் உணவு டெலிவரி சேவையான உபர்ஈட்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்தது. அதையே தான் ஓலா காப்பி அடித்துள்ளது, ஆனால் கொஞ்சம் பெரிய சைஸ்.
ஓலா நிறுவனம்
உபர்ஈட்ஸ் சேவைக்குப் போட்டியாக ஓலா நிறுவனம் உணவு டெலிவரியில் களமிறங்க முயற்சித்துத் துவண்டுபோன நிலையில், டாக்சி பார் ஸ்யூர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பாணியில், புட் பாண்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
ஸ்வீக்கி
உணவு டெலிவரி துறையில் ஸ்வீக்கி நிறுவனத்திற்குக் கடுமையான போட்டி அளித்துக்கொண்டு இருந்த புட் பாண்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை இதன் தாய் நிறுவனமான டெலிவரி ஹீரோ குரூப் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியுள்ளது.
பங்கு கைப்பற்றுதல்
இரு நிறுவனங்கள் மத்தியிலான நிதி பரிமாற்றங்கள் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், டெலிவரி ஹீரோ குரூப் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்திற்கு ஈடான பங்குகளை ஓலா சுமார் 50 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியிருக்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.
3வது பெரிய நிறுவனம்
இந்தியாவில் உணவு டெலிவரி பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் புட் பாண்டா 3வது இடத்தில் உள்ளது.
சோமேட்டோ, ஸ்வீக்கி ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்துப் புட் பாண்டா பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓலா கேப்
2015ஆம் ஆண்டில் ஓலா நிறுவனம் உணவு டெலிவரி சேவைக்காக ஓலே கேப் என்ற பிரத்தியேக பிரிவைத் துவங்கியது, ஆனால் அது வெற்றிகரமாகத் துவங்கப்படாத நிலையில் உபர் இத்துறையில் முந்திக்கொண்டது.
புட் பாண்டா
இந்நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் சீஇஓ சவ்ராச் கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது ஓலா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரானாய் ஜிவ்ராஜ்கா புட் பாண்டா இந்திய வர்த்தகத்தில் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய முதலீடு
ஓலா நிறுவனம் புட் பாண்டாவின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் உபர்ஈட்ஸ், சோமேட்டோ, ஸ்வீக்கி ஆகிய நிறுவனங்களை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெரும் வகையில் சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது
இதற்காகப் புட் பாண்டாவில் 200 மில்லயன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.