இந்தியாவில் மிக அதிகளவில் கடன் அளித்துள்ள ஒரு நிறுவனம் என்றால் அது கண்டிப்பாகப் பாரத ஸ்டேட் வங்கியே ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தினால் ஃபின்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாமல் இருந்த நிலையில் அதற்கான விதிகளை மாற்றி அமைக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பொதுத் துறை நிறுவனம்
பொதுத் துறை நிறுவனம் என்பதால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பது மிகப் பெரிய ரிஸ்க் ஆக உள்ளது. ஆனால் பாரம்பரிய முதலீட்டு முறை மட்டுமே பயன் அளிக்காது என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றும் எஸ்பிஐ வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முதலீடு
எஸ்பிஐ வங்கி ஃபின் - டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்றும் அதற்காக விதிமுறைகள் மாற்றப்பட உள்ளது என்றும் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட் - ஓலா
பிளிப்கார்ட், ஓலா போன்று நாட்டின் வலிமையை அதிகரிக்கக் கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு என்றே நிதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் அதற்காக வங்கி பேர்டு உறுப்பினர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொள்முதல்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது மட்டும் இல்லாமல் இது போன்ற நிறுவனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை, தொழில்நுட்பங்களைக் கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
கூட்டுக் கண்டுபிடிப்பு மையம்
சமீபத்திய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக நவி மும்பை பகுதியில் 25 கோடி முதலீட்டில் கூட்டுக் கண்டுபிடிப்பு மையம் ஒன்றை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள்
எஸ்பிஐ வங்கியில் 430 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் 150 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உதவியில் சாட் பாட், டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற பல் தொழில்நுட்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல சேவைகளை எளிமையாக்கும் வகையில் சிறந்த தீர்வுகளும் வழங்கப்பட உள்ளது.
எஸ்பிஐ வங்கி
தற்போது எஸ்பிஐ வங்கி நவி மும்பை பெலப்பூரில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப மையத்தில் இருந்து இயங்கி வருகிறது.