பொதுவாக, கொரோனா வைரஸ் போல எந்த மாதிரியான சூழலிலும், தங்கள் வியாபாரத்தை சரியாக செய்ய முடிந்தவர்கள் பெரிய கம்பெனிகள் தான்.
உதாரணத்துக்கு ரிலையன்ஸ், டாடா, பிர்லா போன்ற குழுமங்களைச் சொல்வார்கள். ஆனால், இங்கு பல குட்டி கம்பெனிகள், கொரோனா போன்ற மிக கொடிய நோய் பரவும் இந்த காலத்திலும் பல வழிகளில் தங்கள் கம்பெனியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி என்ன செய்துவிட்டார்கள்? கொரோனா காலத்தில் என்ன வியாபாரம் செய்கிறார்கள்? வாங்க பார்ப்போம்.
கொரோனா லாக் டவுன்
இந்த கொரோனா வைரஸ் லாக் டவுன் அறிவித்ததில் இருந்து, வழக்கம் போல தங்கள் வியாபாரங்களைப் பார்க்க முடியவில்லை. அலுவலகத்துக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் மருத்துவத் துறை, மின்சாரத் துறை... போன்ற வெகு சில துறைகளுக்கு மட்டும் தங்கள் உற்பத்தி வேலைகளைத் தொடர அரசு அனுமதி கொடுத்து இருக்கிறது.
எலெக்ட்ரானிக்ஸ் டூ சர்ஜிக்கல் மாஸ்க்
ரஷ்மி ரேர் எர்த் (Rashmi Rare Earth) என்கிற கம்பெனி கொரோனாவுக்கு முன்பு வரை செட் டாப் பாக்ஸ் போன்ற எலெக்ட்ரானிக் ஐட்டங்களைத் தயாரிக்கும் கம்பெனி. ஆனால் கொரோனாவால் இன்று சர்ஜிக்கல் மாஸ்குகளைத் தயாரிக்கத் தொடங்கி இருக்கிறது. காரணம் சிம்பில் "சந்தையில் டிமாண்ட் இருக்கு, தயரிச்சா சம்பாதிக்கலாம் + மக்களுக்கு ரொம்ப அவசியம்".
மாஸ்குகள்
அவ்வளவு தான் களத்தில் இறங்கிவிட்டார்கள். இன்று ரஷ்மி கம்பெனி சுமாராக நாள் ஒன்றுக்கு 1.2 லட்சம் மாஸ்குகளை தயாரித்துக் கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் வெறும் 1 மாஸ்க் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்து, மணிக்கு 6,000 சர்ஜிக்கல் மாஸ்க் தயாரிப்பது தான் கணக்கு. ஆனால் சந்தையில் டிமாண்ட் இருபப்தால், 3 இயந்திரங்களை வைத்து மணிக்கு 18,000 மாஸ்குகளை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். செம இல்ல..!
செம பார்ட்னர்ஷிப்
அதே போல வாவ் மோமோ ஃபுட்ஸ் என்கிற கம்பெனியும் ஒரு சூப்பர் விஷயத்தைச் செய்து இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் இந்த கம்பெனி நஷ்டம் கண்டதில்லை. ஆனால் ஏப்ரல் 2020-ல் நஷ்டம் கண்டது. எல்லாம் இந்த கொரோனா வைரஸால் வந்த வினை.
துணை நிறுவனம்
ஆனால் வாவ் மோமோ கம்பெனி தளரவில்லை. இந்த நஷ்டத்துக்கு மத்தியிலும் ITC, Nestle, P&G போன்ற FMCG (Fast Moving Consumer Goods) கம்பெனிகளுடன் டீல் போட்டு வாவ் மோமோ அத்தியாவசியச் சேவைகள் (Wow Momo Essential Serives) என ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்கி வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறது. லாக் டவுனின் போது அரிசி பருப்பு எல்லாம் தேவை தானே..! காசு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
Turms
நாற்றம் எடுக்காத மற்றும் கரைகள் எளிதில் போக்கக் கூடிய ஆடைகளைத் தயாரிக்கும் டெக்ஸ்டைல் கம்பெனி Turms. வியாபாரம் முடங்கும் என்கிற செய்தி வந்த பின், 3-ply mask தயாரிக்கத் தொடங்கியது. இப்போது, தங்கள் மாஸ்கில் 3 லேயர் கொண்ட பாதுகாப்பு, எளிதாக சுவாசிப்பது... என சமூக வலைதளங்களில் மாஸ்கை ப்ரொமோட் செய்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.
கொரோனாவில் சிரோனா
சிரோனா ஹைஜீன் என்கிற கம்பெனியின் பிராண்டுகள் தான் Pee buddy, Sirona, Bodyguard போன்றவைகள் எல்லாம். இதில் பீ பட்டி பெண்களுக்கு தகுந்தாற் போல வடிவமைக்கப்படாத கழிவறைகளில் கூட சிறுநீர் போக உதவியாக இருக்கும் சாதனம் விற்கிறது. சிரோனா பெண்களின் மாதவிடாய்-க்கான பல பொருட்களை விற்கிறது. பாடிகார்ட் என்கிற பிராண்டில் மாஸ்க் விற்கிறது.
சானிட்டைசர்
ஆனால் இப்போது பாடிகார்ட் என்கிற பிராண்டின் கீழ் சானிட்டைசர்களை, எல்லாம் தயாரித்து விற்கிறார்கள். அதோடு multipurpose disinfectants-களையும் தயாரித்து விற்கிறார்களாம். இந்த சானிட்டைசர் எல்லாம் பல நாட்களாக பேசிக் கொண்டிருந்த ஐடியா தானாம். ஆனால் இப்போது கொரோனா காலத்தில், சட்டென அதிகம் பேசாமல், களத்தில் இறங்கி செய்ய வைத்திருக்கிறது. அந்த வாய்ப்பையும் சரியாக இப்போது பயன்படுத்தி கல்லா கட்டிக் கொண்டு இருக்கிறது சிரோனா.
பிச்சிக்கிட்டு போகுது
சிரோனா கம்பெனி பொருட்களுக்கான தேவை, சந்தையில் சுமார் 4 - 5 மடங்கு அதிகரித்து இருக்கிறதாம். இப்போது சந்தையில் இருக்கும் டிமாண்டுக்கு தங்களால் பொருட்களை சப்ளை செய்ய முடியவில்லை என மகிழ்ச்சியாகப் புலம்புகிறார்கள். பின்ன 5 மடங்கு டிமாண்ட் அதிகரித்து உற்பத்தி ஆன பொருள் எல்லாம் பஞ்சாய் பறந்தால் மகிழ்ச்சியாகத் தானே இருக்கும். கொரோனா - சிரோனா மார்க பந்து முதல் சந்து... மாதிரி இருக்கே..!
கொரோனாவுக்குப் பின்
"இப்போதைக்கு, மாஸ்க், சானிட்டைசர் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு சந்தையில் அதிக தேவை இருக்கிறது. இதை யாராவது நிரப்ப வேண்டும். கம்பெனிகள், இந்த அத்தியாவசியப் பொருட்களை தயாரிப்பது, தங்கள் வழக்கமான வியாபாரத்துடன் (Core Business) இணைத்துக் கொள்ள முடியுமானால், இந்த புதிய பொருட்களையும், ஒரு அங்கமாக தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் சந்தையில் டிமாண்ட் இருக்கும் வரை தயாரித்து லாபம் பார்த்துவிட்டு கிளம்பலாம்." என்கிறார்கள் வியாபார ஆலோசகர்கள்.