கோயமுத்தூர்: நாளுக்கு நாள் நம் இளைஞர்கள் மத்தியில் தொழில் செய்ய வேண்டும் என்ற மோகம் அதிகரித்து வரும் இந்த நிலையில், பலர் தொழில் ஆரம்பித்த சில நாட்களிலேயே முடங்கி விடுகிறார்கள்?
ஏன் இதற்கு என்ன காரணம்? தொழிலில் உள்ள வளைவு சுழிவுகள் தெரியாதது தான். மற்றொன்று அதிகரித்தும் வரும் போட்டிகள் தான். ஆனால் பலரும் செய்யாத ஒரு விஷயம் இது தான். நவீன தொழில் யுகத்திற்கு ஏற்றவாறு தொழிலில் புதுமையை புகுத்த வேண்டும். ஆனால் இதை பலர் செய்வதே இல்லை.
இதனால் தானோ என்னவோ பலரும் தொழிலில் தோல்வியடைகிறார்கள். ஆனால் கோயமுத்தூரைச் சேர்ந்த நம்ம கொங்கு நாட்டு அண்ணன் பெரியசாமி, கடந்த 19 வருடங்களுக்கு முன்னரே இந்த வேலையைச் செய்துள்ளார். ஆமாங்க.. தொழிலில் எப்படி புதுமையை புகுத்தினால் மக்களுக்கு பிடிக்கும், எந்த தொழிலை செய்தால் மக்களுக்கு பிடிக்கும் என்றும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
என்ன தொழில்?
வழக்கமாக இந்த சிறு தொழில் வர்த்தகத்தில் பல துறைகளில் மாற்றம் வந்து கொண்டிருந்தாலும், உணவு துறையில் பெரிய மாற்றத்தை கண்டு வருகிறது. அதிலும் நம்ம அண்ணன் பெரியசாமி எந்தவித டெக்னாலஜியும் உபயோகிக்காமல் 19 வருடங்களாக இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தோசையில் இத்தனை வகையான வெரைட்டிகளை கொடுக்க முடியுமா? என்றால் முடியும் என்கிறார், அதிலும் வெஜ்டேரியனில் என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா? ஆனால் அண்ணன் அதை வெற்றிகரமாக 19 வருடங்களாக செய்து வருகிறார்.
எப்படி இந்த ஐடியா?
தோசை என்றால் எல்லாக்கடைகளிலும் கிடைப்பது தான். ஆனால் இப்படி ஒரு வித்தியாசமான ருசியான ஹெல்தியான தோசை என்றால் அது நம்ம கோயமுத்தூர் செட்டி நாடு தோசை கடையில்தான் என்கிறார். ஆமாங்க.. இங்கு பீட்ரூட் தோசை, காரட் தோசை, காளான் தோசை, பூண்டு தோசை, தக்காளி தோசை, மசாலா தோசை, கார்ன் தோசை, பட்டர் தோசை, பொடி தோசை, ஆனியன் தோசை, பன்னீர் தோசை, அடை தோசை என இன்னும் பல வித தோசைகளுடனும் கலக்குகிறார். , அனைத்து டிபன் வகைகளை உண்டு என்றாலும் தோசை இங்கு மிகப் பிரபலம் என்றும் கூறுகிறார்கள்.
தோசை விலை எப்படி?
தோசை விலை மற்ற கடைகளுடன் ஒப்பிடும்போது விலை சாதரணமாகத் தான் இருக்கிறது. ஆமாங்க.. இந்த வித விதமான தோசைகள் சாதாராண எண்ணெய்யில் செய்தால் அது 30 ரூபாய் என்றும், இதுவே பட்டரில் செய்தால் 40 ரூபாய் என்றும் கூறுகிறார். விலை எப்படி இருந்தாலும் அதன் தரமும் சுவையும் நிறைவாக இருப்பதால் விலையை பற்றி யாரும் யோசிப்பதில்லை. அதோடு எங்களுக்கு என்று தனியான ரெகுலரான வாடிக்கையாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். அதிலும் நாளுக்கு நாள் எங்களுக்கு என்றும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர் என்கிறார்.
கோயமுத்தூரில் கடை எங்கு உள்ளது?
இங்கு எல்லா வகை தோசைகளும் மிகப் பிரபலம் என்றாகும், பூண்டு தோசை, பொடி தோசை, காளான் தோசை தான் வாடிக்கையாளர்களால் அதிகளவில் விரும்ப படுகிறதாம். கோயமுத்தூர், புருக் பீல்டு மால் அருகில் உள்ள செந்தில் ஹாஸ்பிட்டல் அருகில் உள்ளது எங்களது இந்த சிறிய உணவகம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தக் கடையின் வாடகையே 30,000 ரூபாயாம். அதோடு இந்த கடையில் வேலை செய்யும் ஆட்கள் இவருடன் சேர்த்து 6 பேராம்.
வருமானம் எவ்வளவு?
இந்த கடையில் சாராசரியாக வருமானம் மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரையில் இருந்தாலும், மாத வாடகை 30 ஆயிரம் ரூபாய் போய் விடுகிறது. இதில் 5 பேருக்கு சம்பளம், மாதம் 10 ஆயிரம் என்றாலும் கூட 50,000 ஆயிரம் இதற்கே போய்விடும். மேலும் மூலதன செலவு பொருட்கள் விலை என கொஞ்சம் இருக்கிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பளம் தொகையே தனக்கும் நின்றால் கூட போதும் என்கிறார் அண்ணன் பெரியசாமி.
வெற்றி எப்படி?
இந்த நிலையில் தொடர்ந்து 19 வருடமாக எப்படி வெற்றி காண முடிகிறது எப்படி? எனில் இவரின் கடையில் உபயோகப்படுத்தும் அனைத்து மசாலாக்களும், பாரம்பரிய முறைப்படி, பாட்டி கையால் செய்வதை போல செய்வதே என்றும், அதோடு கலர் கலாராய் கலக்கும் தோசைகளில் செயற்கையான நிறம் எதுவும் கிடையாது. இவை அனைத்துமே நேச்சரான கலர்கள் மட்டுமே உபயோகப்படுத்துகின்றனராம். இதை நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்வதை விட நீங்கள் ஒரு முறையேனும் எங்கள் கடையில் வந்து சாப்பிட்டு பாருங்கள் என்றும் கூறுகிறார் பெரியசாமி.
கடை திறக்கும் நேரம்?
சில சமயங்களில் மாலை 6 மணிக்கெல்லாம் டிபன் கிடைக்கும் என்றும் கூறும் அண்ணன், மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை இருக்கும், சில சமயங்களில் 11 மணி வரை கூட இருக்கும். என்ன லீவு நாட்களில் கூட்டம் சற்று கூடுதலாக இருக்கும் என்றும் கூறுகிறார். தான் மட்டும் தான் இந்தத் தொழில் என்று இல்லை. தற்போது தனது மகனுக்கும் மற்றொரு கடையை ஆரம்பித்துக் கொடுத்துள்ளாராம். ஆமாங்க.. இப்பவே தனது மகனுக்கும் தொழில் இரகசியங்களை கற்று தருகிறார் போலும்...