இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வந்த பின்பு தலைகீழாக மாறியதைப் போலவே, ஈகாமர்ஸ் துறையில் அமேசான் வந்த பின்பு தடம்புரண்டது.
அமேசான் வந்த பின்பும் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான தள்ளுபடிகளை அறிவித்து முதலீட்டாளர்களைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. இந்தத் தள்ளுபடி விற்பனை கைமீறி சென்ற காரணத்தால் பல முன்னணி நிறுவனங்களும் பல நூறு கோடி நஷ்டத்தில் மூழ்கியது.
புதிய போட்டி துவங்கியது..
அமேசான் தனது உலகளாவிய வர்த்தகத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்தியாவிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய 2 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதனைச் சமாளிக்கப் பிளிப்கார்ட் அடுத்து என்ன செய்யப்போகிறது எனக் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில் புதிய முடிவை எடுத்துள்ளது.
வால்மார்ட்
இந்தியாவில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகத்தைத் துவங்க பல்வேறு எதிர்ப்புகள் இருந்த நிலையில், அனைத்தையும் சமாளித்து வால்மார்ட் மும்பை, கூர்கான் போன்ற பெரு நகரங்களில் தனது வர்த்தகத்தைத் துவங்கியது.
பேச்சுவார்த்தை
இந்நிலையில் இந்திய வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வால்மார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
இதன் காரணமாக ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் கூட்டணி வைக்க முடிவு செய்யுள்ளது.
40 சதவீத பங்குகள்
அமெரிக்காவின் வால்மார்ட் இன்க் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் சிங்கப்பூர் நிறுவனமான பிளிப்கார்ட்-இல் 40 சதவீ பங்குகளைக் கைப்பற்ற தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சாப்ட்பேங்க்
சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் முதலீட்டு நிறுவனமாகச் சாப்ட்பேங்க் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு செய்த போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 12 பில்லியன் டாலராக இருந்தது.
5 பில்லியன் டாலர்
தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யும்.
ஆதிக்கம்..
இந்த முதலீடு மூலம் அமெரிக்க நிறுவனமான வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் நுகர்வோர் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.