மங்களூரூ, கர்நாடகா: Cafe Coffee Day V G Siddhartha Hegde, பரம்பரை பரம்பரையாக காபி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தில், கர்நாடகத்தின் சிக்மகளூர் பகுதியில் பிறக்கிறார்.
100 வருடங்களாக சுமார் 12,000 ஏக்கர் நிலப் பரப்பில் காபி விவசாயம் செய்து, காபி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தில் பிறக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..! இன்று வரை ஆசியாவிலேயே மிகப் பெரிய காபி தோட்டம் இருப்பதும் இவர்களிடம் தான் என்பதும் கவனிக்கத்தக்கது. சரி V G Siddhartha விஷயத்துக்கு வருவோம்.
V G Siddhartha மங்களூரூ பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பொருளாதாரம் படித்தவர். படித்து முடித்த கையோடு தன் 24-வது வயதில், 1983 - 84 காலங்களில் உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான ஜே எம் ஃபனான்ஷியல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் தொடர்பாக வேலையில் சேர்ந்தார். இரண்டு வருட பணி காலத்தில் நிறைய கற்றுக் கொண்டார்.
காபி வியாபாரம்
அதன் பின் பெங்களூரு திரும்பிய உடன் வீட்டில் கொடுத்த பணத்தை வைத்து சிவன் செக்யூரிட்டீஸ் என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்த்தார். அதன் பிறகு தான் குடும்ப காபி வியாபாரத்தில் களம் இறங்குகிறார். V G Siddhartha கடந்த 1993-ம் ஆண்டு காபியை வளர்ப்பதற்கும், காபியை பதப்படுத்துவதற்கு, காபியை வர்த்தகம் செய்வதற்கு ஒரு கம்பெனியைத் தொடங்கினார். அந்த கம்பெனியின் பெயர் Amalgamated Bean Company சுருக்கமாக ABC. 1990-களில், இந்தியாவில், காபி வர்த்தகம் தாராளமயப்படுத்திய பின் காபி விவசாயத்தில் கூடுதல் பணத்தை முதலீடு செய்தாராம்.
இன்றைய நிலை
இந்த கம்பெனி தான் இன்று Coffee Day Global என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கம்பெனிக்கு 1993-ல் மொத்த டேர்ன் ஓவரே ஆறு கோடி ரூபாய் தான். ஆனால் இன்று சுமார் 2,500 கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் செய்து வருகிறதாம். ஆண்டுக்கு சுமார் 28,000 டன் காபியை ஏற்றுமதி மட்டும் செய்கிறார். 2,000 டன் காபியைத் தான் உள்நாட்டில் விற்கிறார்களாம். குறிப்பு: V G Siddhartha-க்கு தங்கள் காபி தோட்டத்தில் மணி கணக்கில் நடப்பது தான் அவருடைய ஓய்வு நேர வேலையாம்.
முதல் கடை
1990-களில் பெங்களூரில் ஐடி தொழில் தலை எடுக்கத் தொடங்கிய காலத்தில் பெருவாரியான மக்கள் முதியவர்கள் தான். சுருக்கமாக பென்ஷனர்களின் சொர்க்கபுரி தான் பெங்களூரு. எனவே பெங்களூரில் காபி டே அவுட் லெட்டுகள் வேண்டாம் என V G Siddhartha-யிடம் பலர் சொன்னதாகச் சில செய்திகள் இருக்கின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூரில் ஐடி தொழிலால், நவ நாகரீக இளைஞர் பட்டாளம் அதிகமாகிவிடும். அப்போது அவர்களுக்கான இடமாக நாம் இருக்க வேண்டும் என, ஆகஸ்ட் 1996-ம் ஆண்டு பெங்களூரு பிரிகேட் பகுதியில், தன் முதல் Cafe ரக Cafe Coffee Day கடையைப் போட்டு கல்லா கட்டத் தொடங்கியவர் நம் V G Siddhartha தான்.
கடைகள்
இன்றைய நிலவரப்படி இந்தியா முழுக்க சுமார் 1,700 Cafe Coffee Day அவுட் லெட்டுகள் இருக்கிறதாம். இத்தனை கடைகளில் சுமார் 60,000 காபி தயாரிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதோடு Cafe Coffee Day நிறுவனத்துக்கு வியென்னா, செக் குடியரசு, மலேசியா, நேபாள், எகிப்து போன்ற வெளிநாடுகளிலும் கடை இருக்கிறதாம். V G Siddhartha காபி டே நடத்துவது தவிர Serai என்கிற பெயரிலும், Cicada என்கிற பெயரிலும் சில ஏழு நட்சத்திர ரிசார்ட்களை நடத்தி வருகிறாராம். 2015 ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் நம் V G Siddhartha 1.2 பில்லியன் டாலர் மதிப்போடு பட்டியலில் இடம் பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிதி நிலை
Cafe Coffee Day நிறுவனத்தின் நிதி நிலையும் கடந்த சில ஆண்டுகளாக நன்றாகத் தான் இருக்கிறதாம். இதை நிறுவனம் சார்பாக யாரும் சொல்லத் தேவை இல்லை. அவர்களின் லாப நஷ்ட கணக்கு வழக்குகளே சொல்கின்றன. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் சுமார் 1,777 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருந்தார்களாம். 2018 - 19 நிதி ஆண்டில் சுமார் 1,814 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருந்தார்களாம். இந்த 2019 - 20 நிதி ஆண்டில் சுமார் 2,250 கோடி ரூபாயை வருவாயாக ஈட்ட இலக்கு நிணயித்திருந்தார்களாம்.
அரசியல் தொடர்புகள்
இதற்கு நடுவில் தான், இன்றைய மூத்த அரசியல் தலைவர், முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் மற்றும் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் மகளை திருமணம் செய்து கொண்டு பெரிய இடத்து மாப்பிள்ளை ஆன கதை எல்லாம். V G Siddhartha காணாமல் போன செய்தி சூடு பிடித்து பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை தன் மாமனார் பெயரைச் சொல்லி பிசினஸ் டீல்களை வளைத்தது, அரசாங்கத்தை ஏமாற்றியது என யாரும் ஒரு புரளி கூட பேசவில்லை என்பது ஆச்சர்யத்துக்குறியது.
முதலீடு
1999 காலங்களில் தான் இந்தியாவின் ஐடி துறை ஜாம்பவான்களில் ஒருவரான அசோக் சூதா, நம் V G Siddhartha-வை மைண்ட் ட்ரீ நிறுவனத்துக்குள் இழுக்கிறார். 1999-ல் சுமார் 44 கோடி ரூபாய் முதலீடு செய்து 6.6 சதவிகித பங்குகளை வாங்கி, மைண்ட் ட்ரீயில் தன் இன்னிங்ஸைத் தொடங்கினார். இப்படி 1999 முதல் 2012 வரை பல தவணைகளில் சுமார் 340 கோடி ரூபாயை மைண்ட் ட்ரீ பங்குகளில் முதலீடு செய்கிறார். மொத்தமாக சுமார் 21 சதவிகித பங்குகளை தன் கையில் வைத்துக் கொள்கிறார்.
விற்பனை
இந்த மார்ச் 2019-ல் தான் மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் வைத்திருந்த அனைத்து பங்குகளையும் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு கடையை கட்டினார். V G Siddhartha-த்தின் காபி டே நிறுவனத்தின் இருந்த நிதி நெருக்கடியை எல் அண்ட் டி பயன்படுத்திக் கொண்டு தான் இந்த பெரிய டீலை முடித்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாயின. இவரிடம் தான் சுமார் 21 சதவிகித மைண்ட் ட்ரீ நிறுவனப் பங்குகள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருமான வரி சோதனை
2017 செப்டம்பர் காலத்தில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டால் V G Siddhartha-க்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதோடு காபி டே ரீடெயில் அவுட் லெட்களில் நடத்திய சோதனையில் சுமார் 650 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்து வைத்திருந்ததற்கான டாக்குமெண்ட்களைக் கைப்பற்றினார்களாம். அன்றில் இருந்து இன்று வரை, இவர் காணாமல் போவதற்கு முன் இவர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் கூட வருமான வரித் துறையினர் கொடுத்த அழுத்தம் குறித்து பேசப்பட்டிருக்கிறது.
கோக கோலா
சமீபத்தில் தான், உலக குளிர் பான நிறுவனங்களில் ஜாம்பவானான கோக கோலா, V G Siddhartha-வின் காபி டே நிறுவனத்தில் ஒரு கணிசமான பங்குகளை வாங்கி, இந்தியாவின் காபி வியாபாரத்தில் அழுத்தமாக கால் பதிக்க பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. காபி டே நிறுவனமும் கோக கோலாவிடம் இருந்து சுமார் 8,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை மதிப்பீடுகள் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம். இப்போது இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை என்ன ஆனது என்று தெரியவில்லை.
அரசு என்ன..?
இவ்வளவு பெரிய திறமைசாலி தான், இப்போது ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இப்போது வரை இவரைப் பற்றிய அதிகாரபூர்வமான செய்திகள் கிடைக்கவில்லை. பெங்களூரூ ஒரு ஓய்வூதியதாரர்களின் சொர்க்க புரியாக இருந்த போது ஐடி நிறுவனங்களால், அசாத்திய வளர்ச்சி கண்டு கொண்டிருந்த கர்நாடக பொருளாதாரத்தை, வளர்த்து எடுத்த அல்லது பயன்படுத்திக் கொண்ட தொழிலபதிபர்களில் இவரும் ஒருவர். போதாக்குறைக்கு பெரிய அரசியல் தலைவரின் மருமகன் வேறு...! ஆகையால் தான் கர்நாடக அரசு V G Siddhartha-வை வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது.