அமெரிக்கா, தங்கள் நாட்டில் முறைப்படி வீசா, வொர்க் பர்மிட், பாஸ்போர்ட் போன்ற சட்ட ரீதியிலான குடியிருப்பு அனுமதி இல்லாதவர்களை வெளியேற்ற தனிப் படையை அமைத்திருக்கிறது. வரும் திங்கட்கிழமையில் இருந்து இந்த தனிப்படை செயல்பட இருக்கிறது.
இந்தியாவுக்கு என்ன
US Citizenship and Immigration Services (USCIS)-தான் அமெரிக்காவில் வீசா வழங்குவது, நீட்டிப்பது, மறுப்பது போன்றவைகளை செய்து வருகிறார்கள். ஹெச் 1 பி விசாவில் அமெரிக்காவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று அமெரிக்காவே சொல்லி இருக்கிறது. இப்போது இவர்கள் கொண்டு வந்திருக்கும் சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட இருப்பது, ஹெச் பி விசாதாரர்களான இந்தியர்கள் தான். இந்தியர்கள் தொடர்ந்து யூ.எஸ்.சி.ஐ.எஸ் அமைப்பிடம் தங்கள் விசாவை நீட்டிக்க கேட்டும் நீட்டிப்பு கொடுக்க மறுத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் கவலை.
விலக்கு
தற்போதைக்கு ஹெச் 1பி வீசா வைத்திருப்பவர்களில் மனித உரிமை ஆர்வலர்கள் தலையிட்டிருக்கும் நபர்களுக்கு மற்றும் வேலை தொடர்பான வீசாவுக்காக அமெரிக்க நீதிமன்றங்களில் பெட்டிஷன் போட்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை எல்லாம் வழி அனுப்பக் காத்திருக்கிறது யூ.எஸ்.சி.ஐ.எஸ். இந்த விலக்குகள் கூட தற்காலிகமானதே. வரும் நாட்களில் இந்த புதிய சட்டப்படி முறையான அனுமதி இல்லாதவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
என்.டி.ஏ
யூ.எஸ்.சி.ஐ.எஸ் அமைப்பு முதலில் விசா மறுக்கப்பட்டவர்கள் மற்றும் நீட்டிக்க இயலாதவர்களுக்கு நோட்டீஸ் டு அப்பியர் (Notice to Appear) கொடுப்பார்கள். இதோடு யூ.எஸ்.சி.ஐ.எஸ்-ன் இமிக்ரேஷன் நீதிபதிக்கு முன் ஆஜராக வேண்டும். நீதிபதி சில பல கேள்விகளைக் கேட்டு "இவர்களிடம் முறையான அனுமதிகள் இல்லை அல்லது கொடுக்கப்பட்ட அனுமதி காலம் முடிந்துவிட்டது. எனவே இவர்களை அமெரிக்காவை விட்டு அனுப்ப உரிய நடவடிக்கைகளை எடுக்கவும்" என்று அதே யூ.எஸ்.சி.ஐ.எஸ் அமைப்புக்கு பரிந்துரைத்துவிடுவார். நீதிபதிகளே பார்த்து சில கேஸுக்கு, உண்மையாகவே இவர்களுக்கு காலக் கெடு கொடுக்கலாம் என்று தோன்றினால் மீண்டும் அதே யூ.எஸ்.சி.ஐ.எஸ் அமைப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி கொடுக்கலாம்.
இவங்க தான் மொதல்ல
க்ரிமினல் பின் புலம் கொண்டவர்கள், அமெரிக்காவின் தேச பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்குபவர்கள், மோசடி பேர்விழிகள் போன்றவர்களைத் தான் முதலில் அட்டவணை போட்டு தூக்க இருக்கிறோம். அதன் பிறகு தான் சாதாரணக் குடிமகன்கள் எல்லாம் என்று கூலாக அமெரிக்க யூ.எஸ்.சி.ஐ.எஸ் அமைப்பு அறிக்கை விட்டு இருக்கிறது.