பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் பல்வேறு வகையில் வளர்ந்துள்ள ஆஸ்திரேலியாவில் கடைசி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோல்டென் முழுமையாக மூடப்பட்டது.
ஹோல்டன் நிறுவனம் அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும், இந்தத் தொழிற்சாலை தென் ஆஸ்திரேலியா பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசி நிறுவனம்
கடந்த வருடம் டோயோட்டா மற்றும் போர்டு நிறுவனங்கள் தங்களசு தொழிற்சாலை மூடிய நிலையில், தற்போது இந்நாட்டில் இருந்த கடைசி ஆட்டோமொபைல் தொழிற்சாலையான ஹோல்டனும் முடப்பட்டது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மொத்த ஆட்டோமொபைல் சகாப்தமும் இதனுடன் முடிந்துள்ளது.
1948இல் முதல் கார்
ஆஸ்திரேலிய அரசு முதலீட்டில் உருவான ஹோல்டன் நிறுவனம் தனது முதல் காரை 1948ஆம் ஆண்டுச் சுயமாக வடிவமைத்துத் தயாரித்துச் சந்தைக்குக் கொண்டு வந்தது.
2வது உலகப்போருக்குப் பின் இந்நாட்டு அரசு இத்தொழிற்சாலை மூலம் உள்நாட்டுத் தேவை மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
போர்டு உடன் போட்டி..
60 மற்றும் 70களில் ஹோல்டன் நிறுவனம் ஆஸ்திரேலிய ஆட்டோமொபைல் வர்த்தகத்தில் போர்டு நிறுவனத்திற்குக் கடுமையான போட்டியை அளித்தது.
ஆனால் 2013ஆம் ஆண்டு அறிக்கையின் படி, இந்நிறுவனம் சுயமாகக் காரை தயாரிக்க முடியாத நிதி மற்றும் வர்த்தக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி
இந்நாட்டின் கடைசிக் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோல்டன் மூடப்பட்ட நிலையில், இதன் ஆஸ்திரேலியா ஆட்டோமொபைல் சந்தை முழுமையாக இறக்குமதி மூலம் இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
50,000 ஊழியர்கள்
இந்த நிறுவனத்தின் மூடப்பட்டதன் மூலம் சுமார் 50,000 ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க உள்ளனர். இதில் 5,000 பேரை நிறுவனமே நேரடியாகப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது ஹோல்டன் நிர்வாகம்.
தென் ஆஸ்திரேலியா
ஹோல்டன் நிறுவனம் இருக்கும் தென் ஆஸ்திரேலியா பகுதியில் ஆஸ்திரேலிய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள், போர் கருவிகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் 2022ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியா தனது ராணுவ மேம்பாட்டுக்காகச் சுமார் 23.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையைச் செலவிட முடிவு செய்துள்ளது.
பாதிப்பு இல்லை..
இந்நிலையில் ஹோல்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு, சிறு பயிற்சி அளிப்பதன் மூலம் பாதுகாப்பு, சுரங்கம், ஏரோஸ்பேஸ், கப்பல் கட்டுமானம் ஆகியவற்றில் பணியாற்ற முடியும் என இந்நாட்டின் உற்பத்தி தொழிலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் உருவான வேலைவாய்ப்பு பற்றாக்குறையைப் போல் ஆஸ்திரேலியாவில் உருவாகாது.