டொனால்ட் ட்ரம்பின் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கை வேலைகளை தற்போது அமெரிக்கர்களே கையில் எடுத்திருக்கிறார்கள். இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமான (பங்குச் சந்தையின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படையில்) TCS நிறுவனம் இந்திய மற்றும் இன உணர்வுடன் இந்தியர்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்கர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக முன்னாள் டிசிஎஸ் அமெரிக்க ஊழியர்கள் வழக்கு தொடுத்தனர்.
பாரபட்சம்
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் ‘‘அமெரிக்காவில் டிசிஎஸ் அலுவலகங்களில் இன ரீதியான பாகுபாடு பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இரண்டாந்தரமாக நடத்தப்படுகின்றனர். சம்பளம், சம்பள உயர்வு, போனஸ் தொகை, பணி அமர்த்தல், வேலையில் இருந்து நீக்குதல் என அனைத்திலும் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது அல்லது பாரபட்சம் காட்டப்படுகிறது.
அமெரிக்க பணி நீக்கம்
பணியாளர்கள் குறைப்பு, பணிநீக்கம் போன்ற கடுமையான நிறுவன நடவடிக்கைக்கு அதிகமாக அமெரிக்கர்கள் ஆளாகின்றனர். அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் அலுவலகங்களில் 80 சதவீதம் பேர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் தான். 20 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்கர்கள் 12 சதவீதம் பேர்.
தெற்கு ஆசியர்கள்
இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் வெறும் 1 சதவீதம் மட்டுமே பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் இயங்கி வரும் டிசிஎஸ், அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், ‘‘டிசிஎஸ் நிறுவனம் இன ரீதியாகவும், அமெரிக்கர்களிடம் பாகுபாட்டுடனும் நடந்து கொள்வதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை" என வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தை மட்டும் கணக்கில் கொண்டு இந்த வழக்கை அணுக முடியாது. எனவே அவர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
வேறு யார் எல்லாம்
டிசிஎஸ் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது போல விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜீச் போன்ற இந்திய ஐடி நிறுவனங்கள் மீது இதே போன்ற பாரபட்ச புகார்கள் எழுந்த வண்ணமே இருப்பது குறிப்பிடத்தக்கது.