ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரிகளாக உள்ளவர்களுக்கு வேலை செய்யும் போது நிறுவனம் சம்பளம், இதர சலுகைகள் என்று அள்ளி தருவதைப் பார்த்திருப்போம்.
நிறுவனத்தை விட்டு வெளியேறும் பொது தலைமை பொறுப்பில் இருந்த சிலர் பெற்ற பே-அவுட் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
பே-அவுட் என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது அந்த நிறுவனம் அளிக்கும் சம்பளமே பே-அவுட் என்று வழங்கப்படுகிறது.
அதே போன்று ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை பணியை விட்டு நீக்கும் போது அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
சில சமயங்களில் ஒருவர் வேலை பார்க்கும் நிறுவனம் மூடப்படும் போது அந்த நிறுவனம் ஒரு பெரும் தொகையை இழப்பீடாக வழங்கும்
நாம் இங்குப் பார்க்க இருக்கும் இந்த பே-அவுட்களும் அது போன்றவையே. ஆனால் இவர்கள் பெற்ற தொகையைக் கண்டு வர்த்தக உலகமே அதிர்ந்தது.
வையாகாம் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் டாவ்மேன் பிஸ்
வையாகாம் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் டாவ்மேன் பிஸ், ஒரு சில கசப்பான நிகழ்வுகளுக்குப் பின்னர் தன்னுடைய தலைமைப் பொறுப்பில் இருந்து விலக உள்ளார்.
அவருடைய விலகலுக்கு இழப்பீடாக யாரும் எதிர்பாராத மிக அதிக தொகையான சுமார் 72 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது. இது வர்த்தக உலகில் உள்ள அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வர்த்தக உலகில் இதுவரை நடந்த ஐந்து விலையுயர்ந்த பே அவுட்களை நாம் பார்க்க உள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.
நிகேஷ் அரோரா, முன்னாள் தலைவர், சாப்ட் பேங்க்
கடந்த மாதம் சாப்ட் பேங்க், தலைவர் நிகேஷ் அரோரா, தான் சாப்ட் வங்கில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்தது, வர்த்தக உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எனினும் அவருடைய முடிவு ஒன்றும் மலிவானதல்ல. நிகேஷ் அரோரா வெளியேறும் பொழுது அவருக்கு ஜப்பனீஸ் தொழில்நுட்ப நிறுவனமான சாப்ட் பேங்க், சுமார் 6.8 பில்லியன் யென் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு தற்பொழுது வழங்கப்பட்ட இந்த தொகை, அவர் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் பெற்ற சுமார் 24.6 பில்லியன் யென்னின் கணக்கில் சேராதது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனினும் சாப்ட் பேங்க் நிறுவனம், அரோரா தலைவராக பணியாற்றிய காலத்தில் அவருக்கு வழங்கிய சுமார் 10.7 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற்றுள்ளது.
அரோரா, சாப்ட் பேங்க் நிறுவனத்தை விட்டு விலகிய பின்னர், அந்த நிறுவனத்தை நிறுவிய மயோசி சென், அதே நிறுவனத்தில் தொடர்வதாக அறிவித்துள்ளார்.
ஜெஃப் சிம்செக், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, யுனைடெட் ஏர்லைன்ஸ்
பெடரல் ஊழல் விசாரணையின் காரணமாக 2015ல் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தார் ஜெஃப் சிம்செக்.
அப்பொழுது அவருக்கு சுமார் 37 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கியது யுனெய்டெட் ஏர்லென்ஸ் நிறுவனம். அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு கார், இலவச விமானப் பயணம் மற்றும் அமெரிக்கவில் உள்ள இரண்டு முக்கிய விமான நிலையங்களில் வாழ்நாள் பார்க்கிங் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.
சிம்செக் பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கான பணம் சுமார் 5 மில்லியன் டாலர் ரொக்கமாக வழங்கப்பட்டது.
நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக ஆணையர்களுக்குச் சாதகமாக விமான நிறுவன வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் திரு சிம்செக் பதவி விலகினார்.
மார்ட்டின் வின்டர்காம், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, வோக்ஸ்வாகன்
மாசு பரிசோதனைகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக செப்டம்பர் 2015 ல் வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்து மார்ட்டின் வின்டர்காம் விலகினார். அப்பொழுது அவருக்கு சுமார் 60 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு மிகப்பெரிய நிதிக்கான உத்திரவாதம் அளிக்கப்பட்டது.
அவருக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகை இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை என்றாலும் வின்டர்காம் தற்பொழுது தலைமைப்பொறுப்புக்கு உரியச் சம்பளத்தை பெற்று வருகின்றார்.
நிறுவனத்தின் கொள்கை ரீதியாக அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினாலும், அவருக்குத் தலைமை நிர்வாக அதிகாரிக்கு உரிய மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. அதோடு மட்டுமல்லாமல் அவர் சுமார் 28 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஓய்வூதிய பலன்களுக்கு சொந்தக்காரராகத் திகழ்கின்றார்.
மிகப் பெரிய ஜெர்மன் ஆட்டோ நிறுவனமான வோக்ஸ்வாகனை ஊழல் முகங்கள் சூழ்ந்துள்ள போதும் திரு மார்ட்டின் வின்டர்காம் தனக்கு உறுதியளிக்கப்பட்ட இழப்பீடு தொகையை கண்டிப்பாகப் பெறுவார் என இழப்பீடு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஸ்டீபன் எலோப், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, நோக்கியா
பின்னிஷ் நிறுவனமான நோக்கியாவை 2014 ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பற்றிய பொழுது, எலோப் தன்னுடைய கனவிலும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய தொகையை இழப்பீடாகப் பெற்றார். எலோப், தனக்கு ஆரம்பத்தில் உறுதி அளிக்கப்பட்ட தொகையை விட சுமார் 30 சதவீதம் அதிகமாக 24.2 மில்லியன் டாலர்களை இழப்பீடாகப் பெற்றார்.
நோக்கிய நிறுவனத்தின் செய்திக் குறிப்புகள் படி திரு எலோப்பிற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டில் சுமார் 70 சதவீதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும் அவற்றில் பெரும் பகுதி நோக்கியா நிறுவனத்தின் பங்குகளாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தை விற்பனை செய்ததன் நோக்கியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிக அளவில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இது பின்லாந்து மக்களிடம் கடும் எதிர்வினைகளை உருவாக்கியது. இது சம்பந்தமாக பின்லாந்து நாட்டின் பொருளாதார அமைச்சர் திரு ஜான் வப்பொவ்ரி "இந்த போனஸ் சார்ந்த நன்மைகளைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கின்றது ", எனத் தெரிவித்தார்.
மரிசா மேயர், தலைமை நிர்வாக அதிகாரி, யாஹூ
யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மரிசா மேயரின் கடினமான நான்கு வருட கால ஒப்பந்தம் இன்னும் முடியவில்லை, எனினும் அவருக்கு ஒரு மிகப்பெரிய இழப்பீடு தொகை கிடைக்கவுள்ளது. யாஹூ நிறுவனத்தை மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசோன் நிறுவனம் 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் கையகப்படுத்தும் பொழுது அவருக்கு மிகப் பெரிய இழப்பீடு தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேயர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவாரா என்பதில் ஒரு நிலையற்ற தன்மை காணப்படுகின்றது. அவ்வாறு அவர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு சுமார் 57 மில்லியன் டாலர்கள் இழப்பீடாகக் கிடைக்கும்.
அவர் பதவியிலிருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு மொத்தமாக சுமார் 162 மில்லியன் டாலர்கள் கிடைக்கும். இதில் அவருடைய மொத்த பணிக்கால சம்பளம் மற்றும் யாஹூ நிறுவனத்தின் பங்குகளும் அடங்கும்.
அவர் யாஹூ நிறுவனத்தில் இருந்து விலகும் பொழுது அவருடைய வங்கிக் கணக்கில் சுமார் 219 மில்லியன் டாலர்கள் இருக்கும் என அனைவரும் தெரிவிக்கின்றார்கள்.