சான் ஜோஸ்: சர்வதேச சந்தையில் வன்பொருள் தயாரிப்பு மற்றும் நெட்வொர்கிங் தளத்தில் முடிசூடா மன்னாக விளங்கும் சிஸ்கோ நிறுவனம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
சிஸ்கோ-வின் இந்த அறிவிப்பினால் இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கவலையிலும் பயத்திலும் மூழ்கியுள்ளனர்.
மென்பொருள் தாக்கம்
கலிபோர்னியா-வின் சான்ஜோஸ் மாகாணத்தைத் தலைமையாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் சிஸ்கோ தனது ஆஸ்தான வர்த்தகமான வன்பொருள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் வர்த்தகத்தில் இருந்து மென்பொருள் சார்ந்த வர்த்தகத்திற்கு மாறத் திட்டமிட்டுள்ளது.
14,000 ஊழியர்கள்
இதன் எதிரொலியாகவே நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான மறுசீரமைப்பைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது சிஸ்கோ. அடுத்தச் சில வாரத்திற்குள் 14,000 ஊழியர்களின் பணிநீக்க திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
20% ஊழியர்கள்
2016ஆம் ஆண்டின் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்நிறுவனத்தில் சுமார் 70,000 பேர் பணியாற்றி வருவதாகச் சிஸ்கோ நிறுவன அறிக்கைகள் கூறுகிறது.
14,000 ஊழியர்கள் பணிநீக்கத்தின் மூலம் சிஸ்கோவில் 20 சதவீத ஊழியர்கள் எண்ணிக்கை பாதிக்கப்பட உள்ளது.
புதிய வேலைவாய்ப்பு
ஆனால் வன்பொருள் வர்த்தகத்தில் இருந்து மென்பொருள் வர்த்தகத்திற்கு மாற நினைக்கும் சிஸ்கோவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
புதிய தொழில்நுட்பம்
இன்றைய சந்தை வர்த்தகத்திற்குப் புதிய தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் தேவை அதிகரித்துள்ள நிலையில், வன்பொருள் வர்த்தகத்தை மட்டும் கையில் வைத்திருந்தால் தொடர்ந்த லாபத்தை ஈட்ட முடியாது.
புதிய தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப வன்பொருள் மற்றும் மென்பொருள் உருவாக்குவதே எங்களது திட்டம் எனச் சிஸ்கோ தெரிவித்துள்ளது.
முதலீடு
சிஸ்கோ நிறுவனம் தற்போது டேட்டா சென்டரில் பயன்படுத்தும் கிளவுட் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் திட்டங்களை உருவாக்குவதில் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளது.
மாற்றம்
டெலிகாம் சந்தையில் வர்த்தகம் அதிகளவில் குறைந்துள்ளதால் சிஸ்கோ நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாகத் தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்து வருகிறது. இதுவே இத்தகைய மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.
பெரு நிறுவனங்கள்
சிஸ்கோ நிறுவனம் மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் கார்ப், எச்பி இன்க் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களும் 2016ஆம் ஆண்டில் அதிகளவிலான பணிநீக்கத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட்
ஜூலை மாதத்தில் 2,850 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், சில வாரங்களுக்குப் பின்பு 4,700 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் எனக் கூறியது.
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 4 சதவீத ஊழியர் எண்ணிக்கை.
எச்பி இன்க்
தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்து வரும் எச்பி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 3,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர் ஆர்பிஎஸ் வெளியேறியதால் இப்பிரிவில் பணியாற்றி வந்த 3,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், வெறும் 0.4 சதவீத வர்த்தகப் பாதிப்பு மட்டுமே இன்போசிஸ் சந்திப்பதால் பணிநீக்கம் ஏதும் இருக்காது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி இணைப்புகள்
பணிநீக்கம் குறித்து பிற முக்கிய செய்திகளுக்கு..