அமெரிக்க, இந்திய வர்த்தகங்களைப் பற்றி கடந்த சில வாரங்களாக காரசாரமாக போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கியது, ரஷ்யாவிடம் S400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தங்களும் போட்டது. இது எல்லாம் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா செய்திருக்கும் வேலைகள்.
மேட் இன் இந்தியா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உற்பத்தியைப் பெருக்க "மேட் இன் இந்தியா" திட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு பல நாடுகளில் இருந்து பல முன்னனி நிறுவனங்கள் இந்தியாவில் வந்து பொருட்களை உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்தது. அவர்கள் இங்கு உற்பத்தி ஆலைகளை நிறுவ அரசு உதவிகள் செய்து கொடுக்கும், ஆனால் இந்தியாவிலேயே உற்பத்திக்கான மூலப் பொருட்களை வாங்குவது, இந்தியர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வது போன்ற சரத்துக்களையும் வரும் நிறுவனங்கள் பின் பற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது.
லாக் ஹீட் மார்டின்
அமெரிக்க விமானப் படைக்கு விமானங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் லாக் ஹீட் மார்ட்டின், இந்தியாவில் தன் உற்பத்தியைச் செய்ய Tata Advanced Systems Limited (TASL) உடன் கை கோர்த்து இருக்கிறது. லாக் ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் F16 ரக விமானத்தின் இறக்கைகளை இந்த TASL நிறுவனம் தான் இந்தியாவில் இருந்து தயாரித்துக் கொடுக்க இருந்தது. ஆனால் நேற்று வரை உறுதி செய்யப்படவில்லை.
வியாபாரம் நடக்குமா நடக்காதா?
TASL நிறுவனத்துடன் அமெரிக்காவின் விமானப் படைகளுக்கு நேரடியாக விமானங்களை சப்ளை செய்யும் லாக் ஹீட் மார்டின் நிறுவனத்தின் தொடர்பு நீடிக்க வாய்ப்பு மிகவும் குறைவு, என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தார்கள். காரணம் இந்தியா அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது மற்றும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் S400 ராக்கெட் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் செய்தது.
டீல் ஓகே
இந்தியா மீது அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கும், எப்போது பொருளாதாரத் தடை விதிக்கும் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமெரிக்கா, இந்தியா உடனான வர்த்தக உறவை ஒரு டீல் மூலம் மேம்படுத்தி இருக்கிறது.
சந்தோஷத்தில் டாட்டா குழுமம்
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் லாக் ஹீட் மார்டின் நிறுவனத்தின் F16 ரக விமானங்களுக்கான இறக்கைகளை இந்தியாவில் இருந்து TASL நிறுவனம் லாக் ஹீட் மார்ட்டின் நிறுவனத்துக்கு தயாரித்துக் கொடுக்கும் என்று ஹாக் ஹீட் மார்ட்டின் நிறுவனமே உறுதி செய்திருக்கிறது. இதற்கு முன்பு கூட C-130J Super Hercules airlifter and S-92 Helicopter போன்ற விமானங்களுக்கு தேவையான ஸ்ட்ராடஜிக்கள் பார்டனராக் டாட்டா இருந்திருக்கிறது.
அமெரிக்க தரப் பரிசோதனை
TASL நிறுவனம் தயாரிக்கும் இந்த இறக்கைகளை அமெரிக்காவின் DCMA என்கிற அமைப்பு முழு பரிசோதனைக்கு உட்படுத்தி, மதிப்பீடு கொடுத்த பின் தான் விமானங்களில் பயன்படுத்தப்படும். இதற்கு முன் TASL நிறுவனம் C-130J Super Hercules airlifter and S-92 Helicopter போன்ற விமானங்களுக்குத் தயாரித்துக் கொடுத்த விமான உதிரிப் பாகங்கள் இந்த பரிசோதனைகளில் தேறியது கவனிக்கத் தக்கது.
எங்கே
லாக் ஹீட் மார்டின் நிறுவனத்திடம் இந்தியாவில் எந்த இடத்தில் இந்த விமான இறக்கைகள் தயாரிக்கப்படும் என்று கேட்டதற்கு "இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால், இந்தியா தான் அதை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும்" என பதிலளித்து இருக்கிறார்கள்.
விவரங்கள் வெளியே வரவில்லை
இப்போது கூட இந்த டீல் மூலம் TASL நிறுவனத்தில் லாக் ஹீட் மார்ட்டின் எவ்வளவு கோடி முதலீடு செய்திருக்கிறது, ஒரு ஜோடி இறக்கைகளின் விலை என்ன, எத்தனை வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருக்கும் TASL உடன் விமான இறக்கைகள் தயாரிக்கப்படும் என்று எந்த அடிப்படை விவரங்களும் கொடுக்கவில்லை.
அமெரிக்காவின் மெளன பதில்
மேலே சொல்லப்பட்டது போல, இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதாகவோ அல்லது இந்தியாவின் மீது சீனா போல வரி விதித்து வர்த்தகப் போரை பகிரங்கமாக தொடுக்கவோ, இப்போது வரை அமெரிக்கா தயாராக இல்லை என்பதை இந்த டீலை இந்தியாவுக்குக் கொடுத்து தெரிவித்து இருக்கிறது அமெரிக்கா. ஆக இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடை குறித்து கொஞ்சம் பயப்படாமல் வேலையைப் பார்க்கலாம்.