86.29 டாலர். ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை. இந்த நிலை அக்டோபர் 03, 2018 அன்று. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை சுமாராக 71.80 டாலர். இந்த சரிவுக்கு காரணம் யார் தெரியுமா... உலகின் எஜமானாக தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்காவும், அமெரிக்கா ஈரான் மீது விதித்த sanction-ம் தான்.
காரணம்
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அந்த தடை விவரங்கள் பின் வருமாறு:
அமெரிக்க டாலரை வாங்குவதற்கு தடை
அமெரிக்க டாலர்களை சேமித்து வைக்க தடை
தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வர்த்தகம் செய்யத் தடை
அலுமினியம், இரும்பு, கிராஃபட் போன்ற அடிப்படை உலோகங்கள் வர்த்தகம் செய்யத் தடை,
நிலக்கரி போன்ற கனிமவளங்கள் வர்த்தகம் செய்யத் தடை,
ஈரானிய ரியால்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளத் தடை,
ஈரானிய அரசாங்க கடன் பத்திரங்களை பிரசூரித்து கடன் வாங்கத் தடை,
ஈரானிய ஆட்டோமொபைல்களை வர்த்தகம் செய்யத் தடை,
ஈரானிய துறைமுகங்களைப் பயன்படுத்த தடை,
ஈரானிய கப்பல் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்த தடை,
ஈரானிய மத்திய வங்கிகளோட மற்ற வங்கிகள் தொடர்பு கொள்ளத் தடை,
ஈரானிய கச்சா எண்ணெய் பொருட்களை வாங்கத் தடை
ஈரானிய நிறுவனங்களுக்கு இன்ஷூரன்ஸ் சேவைகள் வழங்கத் தடை
ஈரானிய எனர்ஜி துறை சார்ந்த பொருட்கள் வர்த்தகம் மேற்கொள்ளத் தடை
தடை விவரங்கள்
மேலே சொன்னது ஈரானுக்கு மட்டும் அல்ல, ஈரான் உடன் மேற் கூறிய விஷயங்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகள் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். இதில் மிக முக்கிய பிரச்னை என்ன என்றால் இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளும், இப்போது கச்சா எண்ணெய்க்கான பணத்தை எப்படி கொடுப்பது.
டாலர் அரசியல்
பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி என்று வரும் போது, ஒருவர் எந்த நாட்டில் இருந்து எற்றுமதி செய்தாலும், அவருக்கு டாலரில் தான் வாங்குபவர் பணம் தருவார். ஒருவர் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், பொருளை விற்பவருக்கு (ஏற்றுமதியாளருக்கு) டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும். இது தான் ஏற்றுமதி இறக்குமதியில் அடிப்படை பணப் பரிவர்த்தனைகள். சுருக்கமாக டாலரில் தான் பொருளை வாங்கவோ விற்கவோ வேண்டும். அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் முதல் தடையே அது தான். டாலரை தொடவே கூடாது.
தடை ஏன் வெற்றி பெறனும்
ஒரு உலக தாதா அறிவித்த தடையை உலக நாடுகள் மதிக்காவிட்டால் பின் அந்த தாதா கெத்துக்கு என்ன ஆவது. அதுவும் ஈரான் போன்ற ஒரு தம்மாதுண்டு நாடு உடன் மற்ற உலக நாடுகள் உறவு வைத்துக் கொண்டால் அந்த நாடுகளையும் தடை விதிப்பதாக அறிவித்தாகிவிட்டது. இப்போது இந்த தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால், அதாவது அமெரிக்கா வெற்றி பெற வேண்டும் என்றால்... ஈரானிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது.
நீங்க தான் பலி கெடா
அதற்குத் தான் சவுதி அரேபியாவை வைத்து அனைத்து எண்ணெய் வள நாடுகளையும் மூன்று ஷிப்டு ஆட்கள் போட்டு எண்ணெய்யை உற்பத்தியை அதிகரிக்கச் சொன்னது அமெரிக்கா. இப்போது எந்த நாடும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்பதற்குத் தான் இந்த கூடுதல் எண்ணெய் உற்பத்தி ஐடியாக்கள் எல்லாம்.
சொதப்பிய அமெரிக்கா
அமெரிக்கா ஈரான் மீது தடை விதிக்கப் போவதாக சொன்ன உடனேயே சுமார் 65 டாலருக்கு விற்பனையாகி வந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 86.69 டாலருக்கு வந்து நான்கு வருட உச்சம் தொட்டது. இந்த நேரத்தில் அமெரிக்கா திடீரென ஒரு யூடேர்ன் போட்டது. இந்தியா உட்பட எட்டு நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது.
கணக்கு
உதாரணமாக மொத்த உலக நாடுகளுக்கு 100 லிட்டர் தான் கச்சா எண்ணெய் தேவை. உலக எண்ணெய் வள நாடுகள் (ஈரானின் 5 லிட்டர் உட்பட) 100 லிட்டர் தயாரிக்கின்றது. இப்போது ஈரான் மீது தடை விதித்துவிட்டோம். ஆக ஈரானின் 5 லிட்டர் எண்ணெய் உலக நாடுகளுக்கு கிடைக்காது. இப்போது முறையான சந்தையில் ஈரானின் 5 லிட்டர் நீங்கலாக 95 லிட்டர் தான் கிடைக்கும். எனவே தான் 65 டாலரில் இருந்து 85 டாலருக்கு பாய்ந்தது கச்சா எண்ணெய் விலை.
நீங்க உற்பத்தி பண்ணுங்க
இப்போது ஈரானின் பங்கான 5 லிட்டரை சவுதி, குவைத், ஒருங்கிணைந்த அரபு அமீரக நாடுகள் மற்றும் ரஷ்யாவை கூடுதலாக தயாரிக்கச் சொன்னது அமெரிக்கா. அவர்களும் தயாரிக்கிறார்கள். இப்போது சந்தைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் உட்பட மொத்தம் 100 லிட்டர் சந்தைக்கு வந்து விற்று கொண்டிருக்கிறார்கள். விலை நிலையாக இருக்கிறது.
யூடேர்ன்
இப்போது அமெரிக்கா வருகிறது. இல்லப்பா ஈரான் கிட்டயும் எண்ணெய் வாங்கிகலாம் என்று சொல்கிறது. ஆக அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 லிட்டர் + ஏற்கனவே உலக எண்ணெய் வள நாடுகள் உற்பத்தி செய்த 95 லிட்டர் + ஈரானின் 5 லிட்டர் என்று = 105 லிட்டர் தற்போது சந்தைக்கு வருகிறது. இங்கு தான் நஷ்டக் கணக்கு தொடங்குகிறது.
நஷ்டக் கணக்கு
கணக்கு சுருக்கம்: உலக தேவை 100 லிட்டர் கச்சா எண்ணெய். இப்போது இங்கு இருப்பதோ 105 லிட்டர். ஆக விலை குறையத் தானே செய்யும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் உடன் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ஈரான் உடனேயே வர்த்தகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே புதிதாக உற்பத்தி செய்த சரக்குகளுக்கு சந்தையில் வேலை இல்லாமல் போய்விட்டது. அமெரிக்காவ நம்புனத்துக்கு நல்லா வெச்சி செஞ்சிட்டான்யா என குவைத், ரஷ்யா, ஈராக் மற்றும் அரபு அமீரக நாடுகள் கொந்தளித்திருக்கின்றன.
அபுதாபியில் சந்திப்பு
ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா தலைமையில் opec மற்றும் opec அல்லாத நாட்டு எண்ணெய் வளத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (18/11/2018)-ல் அபுதாபியில் கூடிப் பேசி தங்கள் உற்பத்திகளைக் குறைத்து, கச்சா எண்ணெய் விலையை நிலை நிறுத்திக் கொள்ள இருக்கிறார்கள்.
நம்பிக் கெட்டது போதும்
2014-ல் கச்சா எண்ணெய் விலை சரிவும் இப்படித் தான் ஆரம்பமானது. அதற்கும் தாதா அமெரிக்கா தான் காரணம். அமெரிக்காவின் ஷேல் ரக எண்ணெய் அதிகமாக சந்தைக்கு வரத் தொடங்கியதும், கச்சா எண்ணெய் விலை சரியத் தொடங்கி பேரல் ஒன்றுக்கு 25 டாலர் வரை பாதாளத்துக்குப் போனது. அந்த நேரத்தில் தான் சவுதியும், ரஷ்யாவும் இணைந்து எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது பற்றிப் பேசி அடித்துப் பிடித்து கச்சா எண்ணெய் விலையை நிலை பெறச் செய்தார்கள். இப்போதும் அது போல நடக்கக் கூடாது என்கிற எச்சரிக்கை நடவடிக்கையால் தான் இந்த கூட்டத்தில் உற்பத்தி குறைப்பை வலியுறுத்தி பேச இருக்கிறார்களாம்.
நிலை கொள்ளுமா
இந்த கூட்டத்துக்குப் பிறகாவது கச்சா எண்ணெய் விலை நிலை கொள்ள வேண்டும் என எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஏங்குகின்றன. "எல்லாம் இந்த அமெரிக்காவால வந்தது. நாங்க பாட்டுக்கு ஒழுங்கா உற்பத்தி பண்ணி வித்துக்கிட்டு இருந்தத கெடுத்துவிட்டு இப்ப அவன் ஓடிட்டான்" என பல்வேறு நாடுகள் மனதுக்குள் புலம்பித் தள்ளுகிறார்கள்.
ரஷ்யா
"அமெரிக்க பொருளாதார தடை ஜெயிக்கனும், மத்த நாடுங்க எல்லாம் நாசமா போகணும் அது தானங்க உங்க திட்டம். இவங்கள நம்பி கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகம் பண்ணதுக்குத் தான் இப்ப பேரல் 70 டாலருக்கு வித்துக் கிட்டு இருக்கு" என வெளிப்படையாகக் கொந்தளித்து இருக்கிறது ரஷ்யா.
மோடிஜி ஜாலிஜி
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 01 அக்டோபர் 2018-ல் 87.19 ரூபாயாக இருந்தது இப்போது இந்த கச்சா எண்ணெய் விலை குறைவால் படிப்படியாக 80.20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நேரம் பார்த்து இந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலை பிரச்னையால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைகிறது. எனவே மக்கள் பாஜக மீது இருக்கும் கோவம் பெரிய அளவில் குறையும் என மோடி ஆரூடம் பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கிறாராம்.