உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் அளித்து வரும் சேவையைத் தடை செய்து வரும் நிலையில், விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு உலகின் மிகப்பெரிய சமூக வலைதளச் சேவை நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ்-ன் இண்ஸ்டாகிராம் செயலியை தடை செய்துள்ளது.
விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசின் இந்தத் திடீர் அறிவிப்புக்கு மெட்டா பிளாட்பார்ம்ஸ் உக்ரைன் நாட்டுக்காகப் பிரத்தியேகமாக hate speech கொள்கையை மாற்றி அமைத்தது முக்கியமான காரணமாக உள்ளது.
இண்ஸ்டாகிராம் தடை
ரஷ்ய அரசு அந்நாட்டு மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை முதல் மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் இண்ஸ்டாகிராம் செயலி இயங்காது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இண்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பதிவிட்டு உள்ள போட்டோ, வீடியோ ஆகியவற்றைத் தடை செய்யும் முன்பு சேமித்து வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
என்ன காரணம்
இது மட்டும் அல்லாமல் உலகில் பிற நாடுகளைப் போலவே ரஷ்யாவிலும் இண்ஸ்டாகிராம் மிகவும் பிரபலம் என்பதால், இண்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் அனைவரும் இண்ஸ்டாகிராம் போலவே இருக்கும் ரஷ்ய சேவை நிறுவனத்திற்கு மாறவும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திடீர் தடைக்கு என்ன காரணம் தெரியுமா...?
Hate Speech கொள்கை
பேஸ்புக் மற்றும் மெட்டா பிளாட்பார்ம்ஸ் தளத்தில் இருக்கும் பிற அனைத்து சேவை தளத்திலும் Hate Speech கொள்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துப் பின்பற்றி வந்தது. ஆனால் உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்த பின்பு உக்ரைன் நாட்டில் "Death to the Russian invaders" என்ற தொணியில் பல லட்சம் பதிவுகள் செய்யப்பட்டு இருந்தது.
மெட்டா-வின் விளக்கம்
கடந்த வாரம் மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், உக்ரைன் நாட்டிற்கு மட்டும் Hate Speech கொள்கையில் தற்காலிக மாற்றம் அறிவிக்கப்பட்டு இதுபோன்ற பதிவுகளைச் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்தது. இதுமட்டும் அல்லாமல் உக்ரைன் நாட்டு மக்கள் ரஷ்யாவின் போர் தொடுத்துள்ளது குறித்துக் கருத்தைப் பதிவிடுவதில் கட்டுப்பாடு விதிப்பது தவறாகும்.
தீவிரவாத அமைப்பு
மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு ரஷ்ய அரசுக்கு கோபப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஷ்ய அரசு அதிகாரிகள் மெட்டாவிற்கு எதிராகக் குற்றவியல் விசாரணையைத் தொடங்கி உள்ளனர், இதேபோல் அரசு வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ்-ஐ "தீவிரவாத அமைப்பாக" (extremist organisation) அறிவிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேஸ்புக் தடை
ரஷ்யாவில் ஏற்கனவே பேஸ்புக் தடை செய்யப்பட்டு உள்ள நிலையில் தற்போது இண்ஸ்டாகிராம் தடை செய்யப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் இந்தத் தடை மூலம் சுமார் 80 மில்லியன் ரஷ்ய இண்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பேஸ்புக், இண்ஸ்டாகிராம்
மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல வர்த்தகம், வருமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் ரஷ்யாவில் இருந்து தற்போது பேஸ்புக், இண்ஸ்டாகிராம் மொத்தமாக வெளியேறப்பட்டு உள்ள நிலையில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
மெட்டா பிளாட்பார்ம்ஸ் பங்குகள்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனப் பங்குகள் 3.89 சதவீதம் சரிந்து 187.61 டாலராகச் சரிந்துள்ளது. பிப்ரவரி மாதம் துவங்கியது முதல் மெட்டா பிளாட்பார்ம்ஸ் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.