தெஹ்ரான்: உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனையின் நன்மைக்காக இறக்குமதி செய்யும் பலவேறு பொருட்களுக்குத் தடை விதிப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இணையான உள்நாட்டு மாற்றுப் பொருட்கள் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மக்களுக்குத் தேவையான அளவிலான கரன்சிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், இறக்குமதியை தவிர்க்கும் போது ஈரான் கரன்சி மதிப்புச் சரிவினை குறைக்க முடியும் என்று நாணய கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்படாத பொருட்கள்
ஈரானில் கிடைக்காத, உற்பத்தி செய்யப்படாத பொருட்களை இறக்குமதி செய்ய எந்தத் தடையினை அரசு விதிக்கவில்லை என்பது மக்களுக்கு ஆறுதலான செய்தி ஆகும்.
முழுப் பட்டியல் எப்போது?
இறக்குமதி செய்ய எந்தப் பொருட்கள் எல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற முழுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களும் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காரணங்கள்
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது மற்றும் வெளியில் செல்லும் கரன்சி மதிப்பினை குறைப்பது போன்றவையே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத் தடை
மறுபக்கம் அமெரிக்க அரசு ஈரான் உடன் 2015-ம் ஆண்டுக் கையெழுத்திட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது மட்டும் இல்லாமல் பொருளாதாரத் தடையினையும் விதித்து வருகிறது. அதனை எதிர்கொள்ளவே இந்த முடிவினை ஈரான் அரசு எடுத்துள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு வேண்டும் என்றால் அமெரிக்கா விதித்துள்ள 12 கோரிக்கைகள் மற்றும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.