டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றிய நாளில் இருந்து தொடர்ந்து பல கருத்துக்களை அதிரடியாக முன்வைக்கிறார், இதில் குறிப்பாக வட கொரியாவிற்குக் கொடுத்து வரும் மிரட்டல், சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு இனி நிதியுதவி அளிக்க முடியாது என அறிவித்தது எனப் பல அதிரடி முடிவுகளை நொடிப்பொழுதில் எடுத்து வருகிறார்.
இதில் முக்கியமான டிரம்ப்-இன் "Buy American, Hire American" திட்டங்கள் மற்றும் பார்வை அந்நாட்டில் வேலை செய்யும் பிறநாடவர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி உருவாக்கி வருகிறது. குறிப்பாக இந்தியர்களுக்கு. இத்தகைய சூழ்நிலையில் தற்போது ஹெச்1பி விசாவில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்காவின் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஹெச்1பி விசா கால நீட்டிப்பை உடனடியாகவும், முழுமையாகவும் தடை செய்ய வேண்டும் என டிரம்ப் அரசு ஹோம்லேன்டு செக்யூரிட்டி அமைப்பிற்கு மெமோவாக அனுப்பியுள்ளது.
கிரீன் கார்டு
கிரீன் கார்டு எனக் கூறப்படும், அமெரிக்காவின் குடியுரிமை பெற நினைக்கும் வெளிநாட்டவர்கள் இதற்காக விண்ணப்பம் செய்வார்கள், இவர்களது விண்ணப்பம் ஒப்புதல் பெறப்படாத நிலையில் இருந்தால் இவர்களுக்கான ஹெச்1பி விசா காலம் 2-3 வருடத்திற்கு நீட்டிக்கப்படும்.
இதனைப் பயன்படுத்திப் பல வெளிநாட்டவர்கள் குறைந்தபட்சம் 2 வருடம் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியர்கள்
இப்புதிய அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் நிலையில், அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஊழியர்கள் அதிகளவிலான பாதிப்பை சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் பெருமளவில் ஐடித் துறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளியேற்றம்
இதன் மூலம் ஹெச்1பி விசா வைத்துள்ள 75,000 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.
ஹெச்1பி விசா வைத்துள்ள ஒருவர், சில முக்கியத் தகுதிகளைப் பெற்று இருந்தால் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்யலாம், விண்ணப்பம் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு அந்த நபரின் விசா காலத்தை 3 வருடம் வரையில் நீட்டிப்புச் செய்யப்படும். இந்தச் சலுகையைத் தான் தற்போது டிரம்ப் அரசு முழுமையாக நீக்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நாஸ்காம்
இப்புதிய அறிவிப்பால் அதிகளவில் பாதிக்கப்படுவது இந்திய ஐடி ஊழியர்கள் என்பதால் நாஸ்காம் அமைப்பு அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களிடம் விசா பிர்சனை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்க மசோதா
தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Protect and Grow American Jobs என்னும் மசோதாவின் எதிரொலியாக இப்புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய அறிவிப்பின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
சம்பளம்
சில மாதங்களுக்கு முன்பு ஹெச்1பி விசா பெறுவதற்கான குறைந்த பட்ச சம்பளத்தை 2 மடங்கிற்கு அதிகமாக உயர்த்தி இந்தியர்களின் அமெரிக்கக் கனவை சீர்குலைத்த நிலையில், தற்போது இதனை அறிவித்துள்ளது.
85,000 விசாக்கள்
அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் 85,000 ஹெச்1பி விசா அளித்து வருகிறது, இதில் 65,000 பொதுப் பிரிவிலும், 20,000 விசாக்கள் அமெரிக்கக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இதில் 70 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்குச் செல்வதாக ஆய்வுகள் கூறுகிறது.