பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு அங்கு, கோதுமை மாவு வாங்க அலைமோதிய கூட்டத்தில், சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் அடுத்த மூன்று வாரங்களில் பாகிஸ்தான் இன்னும் மோசமான நிலையை எட்டலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக வரலாறு காணாத அளவு சேதம் ஏற்பட்டது. உணவு உற்பத்தியானது பெரும் சரிவினைக் கண்டது.
பாகிஸ்தானின் நெருக்கடி நிலை
ஏற்கனவே நெருக்கடியான நிலையை எதிர்கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு மேற்கோண்டு, வெள்ளம் மேலும் சவாலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோதுமை உள்ளிட்ட தானியங்கள் வெள்ளத்தில் அழிந்து போனது. இதனால் உணவு பற்றாக்குறை பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம்
பாகிஸ்தானில் அன்னிய செலவாணி கையிருப்பும் மிக குறைவாகவே உள்ளது. இதனால் இது மேற்கோண்டு பாகிஸ்தானுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் கச்சா எண்ணெய், தானியங்கள் உள்பட பல முக்கிய பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதற்கிடையில் தான் அன்னிய செலவாணி கையிருப்பு சரிவால், பாகிஸ்தான் இன்னும் 3 வாரங்களில் திவாலாகும் என்றும், பொருளாதார நெருக்கடி மேற்கொண்டு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உணவு பற்றாக்குறை - உணவு திருவிழா
இது ஒரு புறம் பாகிஸ்தான் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் பாகிஸ்தானில் உணவு திருவிழா கொண்டாடப்பட்டு வரும் வீடியோ ஒன்றும் பரவி வருகின்றது. ஒரு தரப்பு ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலையில், மறுபுறம் உணவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
வேதனையான அனுபவங்கள்
இந்த உணவு திருவிழாவில் தவறான நிர்வாகம் காரணமாக அது தோல்வியில் முடிவடைந்ததாகவும் ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,50,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் இந்த நிகழ்வில், அடிப்பட்டதாகவும், பலரும் தங்களது வேதனையான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
உணவுக்கு தள்ளாடும் நிலை
இது குறித்து பரவிய வீடியோவில் பலர் சுவர்கள் மீது ஏறுவதும், தடுப்புகளை உடைத்து செல்லுவதும், வலுக்கட்டாயமாக மைதானத்திற்குள் நுழைவதும் காணலாம். மொத்தத்தில் பாகிஸ்தானில் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகியுள்ளது என இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.
வருத்தமளிக்கும் விஷயம்
ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்கள் ஒருபுறம், ஒரு வேளை உணவுக்காக ஆயிரக்கணக்கில் செலவிடும் மக்கள் மறுபுறம். அப்படி செலவிடும் தொகையை யாருக்கும் பயனாய் அமையவில்லை என்பது தான் இதில் வேதனையான விஷயம். இதிலிருந்து பாகிஸ்தான் எப்படி வெளிவரப்போகிறதோ? பாகிஸ்தான் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற நிலை இருந்து வருகின்றது. எனினும் பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் இது மிக வருத்தமளிக்க கூடிய ஒன்றாகும்.
மொத்தத்தில் பொருளாதார நெருக்கடி, உணவு நெருக்கடி, நிதி நெருக்கடிக்கு மத்தியில், பாதுகாப்பு என்பதும் வரும் அச்சமூட்டும் ஒன்றாக மாறியுள்ளது.