பெங்களூரு: சவுதி அரேபியா நாட்டின் மிக முக்கிய ஆதாரமாகவும், அதிக வருவாய் அளிக்கும் வர்த்தகமாகத் திகழ்வது கச்சா எண்ணெய்யும் அதன் ஏற்றுமதியும் தான்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் பல போட்டிகள் மற்றும் காரணங்களாகச் சவுதி அரேபியா மற்றும் OPEC நாடுகள் தொடர்ந்து தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துச் சர்வதேச சந்தையில் இதன் விலையை 100 டாலரில் இருந்து 40 டாலராகக் குறைத்தனர்.
இதன் எதிரொலியாகச் சவுதி அரேபியா 2015ஆம் ஆண்டுப் பட்ஜெட்டில் சுமார் 98 பில்லியன் டாலர் அளவிலான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய 2016ஆம் ஆண்டில் செலவினத்தைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் விலையை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
இதன்படி செவ்வாய்க்கிழமை முதல் கச்சா எண்ணெய் விலையை 50 சதவீதம் வரை உயர்த்தச் சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 95-ஆக்டேன் எரிபொருளுக்கு 24 சென்ட் கூடுதலாக அளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜட்வா என்னும் முதலீடு நிறுவனம் செய்த ஆய்வில் சவுதி அரேபியா அரசு ஒரு வருடத்திற்கு 61 பில்லியன் டாலர் தொகையை எரிபொருள் மானியமாக அளிக்கிறது. இதில் 11 பில்லியன் டாலர் பெட்ரோலுக்காக மட்டுமே செலவு செய்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாகச் சவுதி அரேபிய அரசு தொடர்ந்து நிதி பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. இந்நிலையைச் சரி செய்யவே கச்சா எண்ணெய்யின் உற்பத்தியைக் குறைந்து விலையை அதிகரிக்க உள்ளது.
2014ஆம் ஆண்டின் நிதிப்பற்றாக்குறையைத் தீர்க்கச் சவுதி அரேபியா தனது இருப்பு அளவு 728 பில்லியன் டாலரில் இருந்து 640 பில்லியன் டாலராகக் குறைத்தது.