ஜப்பான் நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான சாப்ட்பேங்க் நிறுவனத்தின் டெலிகாம் சேவை நிறுவனத்தை அந்நாட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து விதமான ஒப்புதல்களையும் பெற்றுவிட்ட சாப்ட்பேங்க் வருகிற டிசம்பர் 19ம் தேதி பட்டியலிட உள்ளது.
இதன் மூலம் சாப்ட்பேங்க் சுமார் 2.4 டிரில்லியன் யென் அதாவது 21.1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
சாப்ட்பேங் குரூப் கார்ப் நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு 7.18 டிரில்லியன் யென் ஆக இருக்கும் நிலையில் ஒரு பங்கை 1,500 யென் வீதம் சுமார் 1.6 பில்லியன் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது இக்குழுமம்.
இக்குழுமத்தின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் ஒரு வர்த்தகம் என்றால் டெலிகாம் சேவை வர்த்தகம் தான். இந்த நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் அதிகளவிலான முதலீட்டு தொகையை ஈட்ட முடியும் என இக்குழுமத்தின் தலைவர் மசயோஷி சன் நம்புகிறார்.
மேலும் இந்நிறுவனத்தைப் பட்டியலிட முக்கியக் காரணம் ஜப்பானில் தற்போது பல டெலிகாம் நிறுவனங்கள் மலிவான டெலிகாம் சேவையை அளிக்கத் துவங்கிவிட்டது. இந்தப் போட்டியில் தனது நிறுவனத்தின் மதிப்பு இழந்து விடக்கூடாது என்பதற்காகவும், தொடர்ந்து வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கவும் தான் பங்குச்சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளது.