உலகிலேயே காலியான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கிறது இலங்கை ஹம்பந்தோட்டையில் உள்ள மட்டலா ராஜபக்சே சர்வ தேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த வரைவுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
உலகிலேயே காலியான விமானநிலையம்
மட்டலா ராஜபக்சே விமான நிலையம் கொழும்பிலிருந்து 241 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹம்பந்தோட்டையில் உள்ளது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ஹம்பந்தோட்டை விமானநிலையம் மே மாதம் போக்குவரத்தை நிறுத்தியது. இதனாலோ என்னவோ உலகிலேயே காலியான விமான நிலையமாகச் சித்திரிக்கப்படுகிறது.
வரைவுத்திட்டம்
இந்தியாவுடன் இணைந்து 241 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மீண்டும் ஹம்பந்தோட்டை விமான நிலையம் இயக்கப்படும் எனச் சிறிசேனா அரசு அறிவித்துள்ளது. மறுகட்டமைப்பு செய்வதற்கான வரைவுத் திட்டம் குறித்து இந்திய அரசிடம் இலங்கை பேசியுள்ளது.
பேச்சுவார்த்தை
இதற்கான இறுதி வரைவு அறிக்கை இலங்கை அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டது. இதில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புக் குறித்துக் கேட்க முடிவு செய்யப்பட்டது. இருதரப்புக்கும் இடையே இது தொடர்பாகப் பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியா முடிவு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
வர்த்தக விரிவாக்கம்- திட்டவரைவு
விமான நிலைய கட்டுப்பாடு, போக்குவரத்து உரிமை மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளை இலங்கை அரசே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 1 பில்லியன் பயணிகளின் போக்குவரத்துக்கு லாகவமான இந்த விமான நிலையத்தில் 5 பில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.2028 ஆம் ஆண்டுக்குள் 50000 டன் சரக்குகளைக் கையாகவும், விமானப்போக்குவரத்து நடவடிக்கைகளை உயர்த்தவும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலீடு செய்யுமா இந்தியா
2017 ஆண்டு ஹம்பந்தட்டை விமான நிலையத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தும் யாரும் முன்வரவில்லை என்று தெரிவித்த இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிர்மல் சிறீபாலா, தற்போது இந்தியாவிடம் உதவி கோரியுள்ளதாகக் கூறினார். இந்தியா சம்மதித்தால் 70 விழுக்காடு பங்கை வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது.