சீனாவின் ஆப்பிள் எனப் போற்றப்படும் அளவிற்குச் சியோமி மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இன்று ஓப்போ, விவோ, ஹூவாவே ஆகிய நிறுவனங்களுடன் வர்த்தக இழப்பைச் சந்தித்து வருகிறது என்றால் மிகையாகாது.
தடைகளைத் தாண்டிய வளர்ச்சி
பல தடைகளைத் தாண்டி ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் போட்டியை சமாளித்து வரும் சியோமி தற்போது உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் 4வது இடத்தில் உள்ளது. இத்தகைய பெரும் நிறுவனத்தில் ஒரேயொரு இந்தியர் மட்டும் முதலீடு செய்துள்ள எத்தனை பேருக்கு தெரியும்.
விரிவாக்கம்
2014இல் முதல் முறையாகச் சியோமி எம்ஐ3 மாடல் மொபைல் போன்களை அறிமுகம் செய்து அதிரடி கிளப்பியது, அதன் பின் வாடிக்கையாளரின் அதீத வரவேற்பால் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சிறப்பான விற்பனையை அடைந்தது.
தடுமாற்றம்..
2016இல் சியோமி போன்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் நிறுவன பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்து 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இதேகாலக்கட்டத்தில் வர்த்தக விரிவாக்கம் செய்யாமல் இருந்ததால் பல பிரச்சனைகளைச் சந்தித்து.
இந்தியாவில் உற்பத்தி
இதன் பின் சீனாவிற்கு வெளியில் உற்பத்தி தளத்தை அமைக்கத் திட்டமிட்ட சியோமி, பிரோசில், இந்தோனேசியா சந்தையையும் பிடிக்கத் திட்டமிட்டு இந்தியாவில் தனது உற்பத்தி வேலையைப் பாக்ஸ்கான் உடன் இணைந்து துவங்கியது.
சென்னை
இந்திய வர்த்தகத்தில் முதல் 3 வருடத்தில் மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது சியோமி. தற்போது சியோமி இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், நொய்டா ஆகிய 3 இடங்களில் உற்பத்தி தளத்தை வைத்துள்ளது
ஐபிஓ
இப்படிப் படிப்படியாகப் பல தடைகளைத் தாண்டி வர்த்தகம் செய்யும் சியோமி, தற்போது ஹாங்காங் பங்குச்சந்தையில் இறங்க திட்டமிட்டு வருகிறது. அலிபாபா நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தொகையை இலக்காக வைத்துப் பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது சியோமி.
இந்தியர்
இவ்வளவு பெரிய சியோமி நிறுவனத்தின் முதலீடு செய்த ஒரேயொரு இந்தியர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா.
ஸ்டார்ட்அப்
ஓலா, ஸ்னாப்டீல், அர்பன் லேடர் என 12க்கும் அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்த ரத்தன் டாடா சியோமி நிறுவனத்தில் தனது சொந்த முதலீட்டு நிறுவனமான RNT அசோசியேட்ஸ் இண்டர்நேஷனல் பிடிஈ மூலம் 2015இல் முதலீடு செய்தார்.
முதலீடு தொகை
2015ஆம் ஆண்டில் சியோமியின் 0.0024 சதவீத பங்குகள், அதாவது 49,583 பங்குகளைச் சுமார் 1 மில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கைப்பற்றினார் ரத்தன் டாடா.
இரட்டிப்பு லாபம்
தற்போது சியோமி 90 பில்லியன் டாலர் அளவிலான ஐபிஓ திட்டத்தில் இறங்க உள்ள நிலையில், இந்த முதலீடு மதிப்புத் தற்போது இரண்டு மடங்கு உயர்ந்து 2.1 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.