2019ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பெற துவங்கியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் ஹெச்1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்தி அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகளைப் பிடுங்கி வருவகிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இதன் மீது அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்1பி விசாவில் தற்போது கூடுதல் நெருக்கடியை அறிவித்துள்ளது அமெரிக்கா.
ஹெச்1பி விசா
அக்டோபர் 2018 முதல் செப்டம்பர் 2019 வரையிலான 2019ஆம் நிதியாண்டுக்கான விசா விண்ணப்பத்தை இன்று முதல் USCIS அமைப்பு பெற துவங்கியுள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் தற்போது புதிய உத்வேகம் பிறந்துள்ளது.
USCIS அமைப்பு
ஹெச்1பி விசா விண்ணப்பங்களைச் சரிபார்த்து விசாவை அளிக்கும் USCIS அமைப்புக் கூறுகையில், 2019ஆம் நிதியாண்டுக்கான விசா விண்ணப்பங்களில், குறிப்பாக ஹெச்1பி விசா விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் போது ஜிரோ டாலரென்ஸ் முறையைக் கையாள முடிவு செய்துள்ளோம்.
சிறு தவறுகள் இருந்தால் கூட விசா விண்ணப்பத்தை ரத்துச் செய்யத் தயங்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக USCIS அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியர்கள்
இந்திய ஐடி மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் ஹெச்1பி விசாவை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா அளிக்கும் ஹெச்1பி விசாவில் ஒவ்வொரு வருடமும் 40 -60 சதவீதம் விசா இந்தியர்கள் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடை
மார்ச் மாதத்தில் USCIS அமைப்பு ப்ரீமியம் ஹெச்1பி விசா முறையைத் தற்காலிகமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் விசா விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் நேரம் அதிகளவில் குறைக்க முடியும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் புதிய விதிமுறைகளும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறை
அமெரிக்க அரசு திருத்தி அறிவிக்கப்பட்டுள்ள ஹெச்1பி விசா பெறுவதற்கான புதிய விதிமுறையில், 3ஆம் தரப்பு நிறுவனங்களில் வேலை செய்வதற்காகச் செல்லும் ஒரு ஹெச்1பி விசா ஊழியர் ஒரு சிறப்புப் பணியைத் தனிப்பட்ட திறன் கொண்ட அந்த ஊழியரால் செய்ய முடியும் என்பதை விசாவிற்காக விண்ணப்பிக்கும் நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும்.
கால அளவீடு
புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள 7பக்க ஹெச்1பி விசா விதிமுறையில், ஹெச்1பி விசா பெறும் ஊழியர், தான் வேலை செய்யச் செல்லும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் பணிபுரியும் காலத்திற்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
முன்கூடியே ஒப்புதல்
ஹெச்1பி விசாவிற்காக விண்ணப்பிக்கும் ஊழியருக்கு, அமெரிக்காவில் இருக்கும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் பணிபுரிய ஒப்புதல் முன்கூடியே அளிக்கப்பட வேண்டும். இதுமட்டும் அல்லாமல் விண்ணப்பதாரர் தான் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் குறிப்பிட்ட பணியைச் செய்து கொண்டு இருப்பதற்கான ஆதாரங்களையும் அளிக்க வேண்டும்.
உறவு
விசா வழங்கப்படும் காலத்திற்கு ஹெச்1பி விசா ஊழியருக்கும், 3ஆம் தரப்பு நிறுவனத்திற்கும் இடையில் நேரடியாக ஊழியர் மற்றும் நிறுவனர் என்ற உறவு இருக்க வேண்டும்.
பெரிய நிறுவனங்கள்
இந்தக் கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றியே ஆக வேண்டும் இல்லையெனில் பிரச்சனை பெரிதாக வெடிக்கும்.
அமெரிக்க ஊழியர்கள்
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் டிரம்ப் அரசின் பை அமெரிக்கன், ஹையர் அமெரிக்கன் பாலிசியின் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் முறைகேடாக வெளிநாட்டவர்களுக்குச் செல்லும் வேவைவாய்ப்பு தடுத்து அமெரிக்கர்களுக்கு அளிக்க முடியும் என டிரம்ப் அரசு நம்புகிறது.
கால் சென்டர்
இதோடு சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் சேவை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் பிபிஓ வேலைவாய்ப்புகளும் மாயமாகும்.