இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவை நினைவாக்கும் ஹெச்-1பி விசா மீது டிரம்ப் அரசு கங்கனம் கட்டிக்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு 13 வருட விதிமுறைகளை முழுமையாக ஆய்வு செய்யும் பணியில் இருந்தது.
இந்நிலையில் தற்போது ஹெச்-1பி மற்றும் எல்1 விசா பெறுவதில் புதிய கட்டுப்படுகளை விதித்து இந்திய ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
புதிய மாற்றம்..
டிரம்ப் தலைமையிலான அரசு 13 வருட USCIS அமைப்பின் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை ஆய்வு செய்த பின் தற்போது சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
புதிய அமெரிக்கா அரசால் இதற்கு முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் புதிதாக ஹெச்-1பி விசா பெறுபவர்களுக்கு மட்டுமே பிரச்சனையாக இருந்த நிலையில் தற்போது புதிதாகக் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் மூலம் ஏற்கனவே ஹெச்-1பி மற்றும் எல்1 விசா வைத்துள்ளவர்களுக்கும் பிரச்சனை வெடித்துள்ளது.
விசா ரினிவல்
நான்-இமிகிரென்ட் விசாக்களான ஹெச்-1பி மற்றும் எல்1 விசா வைத்துள்ளவர்களுக்கு விசா ரினிவல் செய்வதில் எவ்விதமான பிரச்சனையுமின்றி, நிறுவனத்தின் விருப்பத்தின் பெயரால் எளிமையான மற்றும் வேகமாகச் செய்யப்பட்டு வந்தது.
தகுதி..
ஆனால் இனி ஹெச்-1பி மற்றும் எல்1 விசாக்களை ரினிவல் செய்ய வேண்டும் என்றால், முதல் முறை விசா வாங்குவது போல் விண்ணப்பதாரர் தான் ஹெச்-1பி மற்றும் எல்1 விசா பெற தகுதியானவர் என்பதை உறுதி செய்யும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
புதிய சுமை..
முன்பெல்லாம் ஒரு முறை விசா வாங்கிவிட்டால் போதும் விசா காலத்தை நீட்டிப்பது மிகவும் ஈசி, ஆனால் இனி இப்படி இருக்கப்போவதில்லை. ஆவணங்களைச் சமர்ப்பித்து USCIS அமைப்பிடம் இருந்து முதல் முறை விசா வாங்குவது போல் ஒப்புதல் பெற வேண்டும்.
விசா தேர்வில் தோல்வியைச் சந்தித்தவர்களுக்கு இதன் உண்மையான சுமையும் மனவருத்தமும் தெரியும்.
இந்திய மக்கள்
இப்புதிய விதிமுறைகள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்பும் புதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களும் இதன் மூலம் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்கக் குடியுரிமை வழக்கறிஞர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிரடி சோதனை
இன்று வெளியான அறிக்கையில் ஹெச்-1பி விசா பெறும் நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளை USCIS அமைப்பு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும். இதன் மூலம் விசா திட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதை முழுமையாகத் தடுக்க முடியும் என அமெரிக்காவின் ஹோம்லேன்டு செக்யூரிட்டி துறை தெரிவித்துள்ளது.
ஒப்புதல்
USCIS அமைப்பின் சோதனைகள் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே தத்தம் நிறுவனம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை அமெரிக்க அரசு ஏற்கும், முறைகேடும் ஏதேனும் நிகழ்த்தி இருந்தால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
தகுதியான ஊழியர்கள் மட்டும்
அமெரிக்க அரசு ஹெச்-1பி விசா மீது விதிக்கப்பட்டுள்ள இப்புதிய கட்டுப்பாடுகள் மூலம் தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே விசா கிடைக்கும், இதுவரை நிறுவனங்கள் இத்திட்டத்தை ஏமாற்றி அதிக வருமானம் பெற்றதையும், அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்த நிலையில் முழுமையாகக் களையப்படும் என USCIS அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்ப்பு
USCIS அமைப்பு நிறுவனங்கள் மீதான நேரடி சோதனைக்குச் சில அமெரிக்க அரசு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பு
வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் புதன்கிழமை அமெரிக்க மாநில செயலாளரான ரெக்ஸ் டில்ரெசன்-ஐ சந்திக்கும் போது ஹெச்-1பி விசா குறித்த பிரச்சனைகளையும், அதன் மூலம் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தெரிவித்தார்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி நிறுவனங்களின் அதிகப்படியான வர்த்தகம் அமெரிக்காவில் இருந்து மட்டுமே வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்து இந்திய ஐடி நிறுவனங்கள் ஹெச்-1பி விசா முறையைப் பயன்படுத்தி இந்தியாவில் இருந்து அதிகளவிலான ஊழியர்களைக் குறைவான சம்பளத்திற்குப் பணியில் அமர்த்தியது.
அதிக வருமானம்..
இதன் மூலம் வருவாயில் அதிகளவிலான செலவுகளைத் தவிர்த்துக் கூடுதல் லாபத்தை ஐடி நிறுவனங்கள் பெற்றது.
இந்த முறையைத் தொடர்ந்து கையாண்டு இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் இருக்கும் பிற ஐடி நிறுவனங்களுக்கும் ஆட்களை அவுட்சோர்சிங் செய்தது குறைவான சம்பளத்திற்து. இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் அமெரிக்க ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கிவிட்டு இந்தியர்களையும் பிற நாட்டவர்களையும் பணியில் அமர்த்தியது.
ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்க நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க அமெரிக்க ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டுப் பிற நாட்டவர்களைப் பணியில் அமர்த்தியதால் பிரச்சனை பெரியதாக வெடித்தது.
இதன் பிரச்சனைக்குக் காரணமானவர்கள் என்று அமெரிக்க அரசால் டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் அரசு
அமெரிக்கப் பொதுத் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதை அடுத்து இந்தப் பிரச்சனை பெரியதாக வெடிக்கத் துவங்கியது. இதன் காரணமாகவே அமெரிக்க அரசு ஹெச்-1பி விசா மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.