கணிப்புகளைப் போலவே அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி 2017ஆம் ஆண்டில் 3வது முறையாகத் தனது வட்டி விகிதத்தைப் புதன்கிழமை 0.25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.
இதுமட்டும் அல்லாமல் 2018ஆம் ஆண்டில் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 3 முறை அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பும் தற்போது உருவாகியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வால் ஆசிய பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தக நிலை உருவாகியுள்ளது.
குஜராத் தேர்தல்
இந்நிலையில் குஜராத் மாநில தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு எதிரொலிகளும் பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வால் அடங்கி மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகமே கிடைத்து வருகிறது.
வேலைவாய்ப்பு
அமெரிக்காவின் வட்டி உயர்வு இந்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை உயரும் நிலையைக் காட்டுகிறது.
2017ஆம் ஆண்டு முடிவில் அமெரிக்காவின் வேலையில்லாதோர் அளவீடு 4.1 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, 2018ஆம் ஆண்டு இதன் அளவு மேலும் குறைந்து 3.9 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட உள்ளது.
வளர்ச்சி விகிதம்
இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரமும் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு 2.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதன் அளவு 2.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை
வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் போதே மந்தமான வர்த்தகத்தை அடைந்த மும்பை பங்குச்சந்தை, சென்செக்ஸ் 2.45 மணியளவில் வெறும் 38.54 புள்ளிகள் வரையில் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது.
டாலர்
பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 ரூபாய் வரையில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.