அமெரிக்காவின் 45வது அதிபர்-ஐ தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று அமெரிக்காவில் நடக்க உள்ளது. இத்தேர்தலின் முடிவுகள் இரவுக்குள் வெளிவந்துவிடும்.
இதனால் அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு அடுத்த 4 வருடத்திற்கு உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவை ஆழப்போவது யார் என்று தெரிந்திவிடும்.
தற்போதைய கணிப்புகளின் படி ஹிலாரி மற்றும் டிரம்ப் மத்தியில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது எனத் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் கூறுகிறது. இதனால் வெற்றிபெறுவது யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அமெரிக்க அதிபர் தேர்தலால் இந்தியாவிற்கு ஏற்படும் லாபம், நஷ்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வர்த்தகச் சந்தை
வர்த்தகச் சந்தை பொருத்த வரையில் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றால் பங்குச்சந்தை, பொருளாதாரம், வெளியுறவு விதிமுறைகள் ஆகியவை மிகப்பெரிய அளவிலான மாற்றம் உண்டாகும்.
குறிப்பாகப் பங்குச்சந்தையில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யப்படும், இதனால் பங்குச்சந்தை, நாணய சந்தை, நாணய மதிப்பு ஆகியவை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தை
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னான ஒரு வார வர்த்தகத்துடன் சென்செக்ஸ் மற்றும் எஸ்&பி 500 குறியீடுகளை ஒப்பிடும்போது இரு குறியீடுகள் மத்தியில் இணையுறவு மதிப்பு 0.97 ஆக உள்ளது.
இதனால் தற்போது நடக்க இருக்கும் தேர்தலில் பின்னும், அமெரிக்கப் பங்குச்சந்தை மற்றும் அரசியல் மாற்றத்தால் இந்திய பங்குச்சந்தை பாதிக்கப்படும்.
2012 தேர்தல்
2012ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா 2வது முறை வெற்றிபெற்ற போது எஸ்&பி 500 குறியீடு 3.78 சதவீதம் சரிந்தது. இதேநாட்களில் சென்செக்ஸ் 1.05 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் வெற்றிபெற்ற போது ஒருவார வர்த்தகத்தில் இரு சந்தை குறியீடுகளும் 3 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்தது.
2008ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின் ஒரு வார வர்த்தகத்தில் எஸ்&பி 500 10 சதவீதமும், சென்செக்ஸ் 7 சதவீதமும் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
குறைந்த காலப் பாதிப்பு
இந்தப் பாதிப்புகள் அனைத்தும் குறைந்த காலப் பாதிப்பாகவே பார்க்கப்படுகிறது.
2012 நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் சென்செக்ஸ் 1 சதவீதம் அளவில் சரிந்தாலும், அடுத்த மாத வர்த்தகத்தில் 3.56 சதவீதம் அளவிலான உயர்வு அடைந்தது. இந்தத் திடீர் உயர்விற்கு முக்கியக் காரணம் அன்னிய முதலீட்டாளர்களின் அதிகமான முதலீடு.
இதேபோன்ற நிகழ்வு தான் 1994, 2008 தேர்தலின் போதும் நிகழ்ந்தது.
நாணய மதிப்பு பாதிப்பு..!
பங்குச்சந்தையைப் போலவே நாணய சந்தையும் பாதிப்படையும். 2012ஆம் ஆண்டுத் தேர்தலின் போது சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 0.50 சதவீதம் குறையும் போது, இந்திய ரூபாய் மதிப்பு 0.55 சதவீதம் குறைந்தது.
2008ஆம் ஆண்டுத் தேர்தலின் போது எஸ்&பி 500 குறியீடு 10.6 சதவீதம் சரிந்த நிலையில், டாலர் மதிப்பு 2.8 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்தது. இக்காலகட்டத்தில் ரூபாய் மதிப்பு 0.84 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபர்
நவம்பர் 8, இன்று காலை அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் ஹிலாரி, டிரம்ப் என யார் வெற்றிபெற்றாலும் மேலே குறிப்பிட்ட பாதிப்புகள் இயல்பு, காரணம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பம் மற்றும் ஸ்திரமற்ற வர்த்தகச் சந்தை.
ஆனால் அனைத்தையும் தாண்டி டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றால் என்ன நடக்கும்.?
டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவிற்கு டொனால்டு டிரம்ப் அதிபர் ஆனால் முதலில் அவர் செய்வது அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்குக் கொடுத்த பணிகளைத் திரும்பப்பெறுவது.
இதனால் இந்தியாவில் அதிகளவில் ஐடி நிறுவனங்களும், இதன் பின் ஆட்டோமொபைல், கால்சென்டர், உற்பத்தித் துறை என அடுத்தடுத்துப் பாதிக்கப்படும்.
இதனால் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் அதிகளவிலானல வர்த்தகம் மற்றும் வருமானம் குறையும்.
விசா மற்றும் விதிமுறைகள்
அமெரிக்கக் குடிமக்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த பிற நாட்டவர்களின் தலையீட்டை குறைக்க டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதனால் விசா விதிமுறைகள் கடினமாக்கப்படும்.
முதலீடு
டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றால் இந்தியாவில் ரியல் எஸ்டேட், இன்பார்ஸ்டக்சர் பிரிவுகளில் அதிகளவிலான முதலீடு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் இந்திய ரியல் எஸ்டேட் மீது மிகப்பெரிய காதல் கொண்டவர்.
இந்த முதலீட்டின் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் உயரும்.