செல்வம் சேர சேரச் செறுக்கும் (ஆணவமும்) ஒருவனுடன் சவாரி செய்யத் துவங்குகிறது. விளைவு, ஆதரவற்ற ஆடம்பர வாழ்க்கை, தனக்கென்று தனித்துவமாகப் போட்டுக்கொள்ளும் ஒரு வட்டம், அந்த வட்டத்தைச் சுற்றி பாதுகாப்பு 24 மணி நேரமும் தேவை எனப் பணக்காரர்களின் பட்டியல் நீள்கிறது.
எந்த நேரத்தில் எவன், என்ன செய்வான்! தன்னுடைய செல்வம், தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற ஒரு பயம் மனதிற்குள்ளே விடாது கருப்பாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறது. வெளி உலகத்தை நோக்கி வந்து வானம் பார்த்து நின்றாலும், அழகிய மேகம் கலைவதனை கண்டு ஒரு பயம் உள் மனதில் இவர்களுக்குள் ஏற்படத்தான் செய்கிறது.
ஆம், இந்த மேகங்கள் கலைந்து செல்வது போல் நம் பணமும் கைவிட்டுச் சென்றுவிடுமோ என்ற ஒரு பயம் இயற்கையை ரசிக்கும் பொழுதும் அவர்களுக்குள் எட்டிப் பார்க்கிறதே! என்ன செய்வது!
பயமும் பதட்டமும்..
அவர்கள் பணத்தை அடைய அடைய, பயமும் இடைவிடாது துரத்திக்கொண்டே செல்கிறது. அதனால் அவர்களுக்கு நிம்மதியான தூக்கம் என்பது கூடக் கேள்விக்குறியே!
அப்படியே கவலைகளை மறந்து அயர்ந்து தூங்கினாலும், கனவில் கூடச் செல்வத்தை மேலும் எப்படி ஈட்டுவது என்ற ஒன்றே அவர்கள் முன் தோன்றுகிறது.
இலாபம் ஈட்டத் தவறினால் போதும், நஷ்டம் பற்றிச் சிந்தித்தே அவர்கள் நித்திரை முற்றிலும் மறந்து, நாள் முழுவதும் துவண்டு போகின்றனர். இது மிகைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இதுதான் அவர்களின் உண்மை நிலை.
அன்றாட வாழ்க்கை
அதே போல் அவர்கள் அன்றாட வாழ்வில் பற்பல பிரச்சனைகளைச் சந்திக்காமல் இருப்பதும் இல்லை. கவலைகொள்ள அவர்கள் மனம் மறுப்பதும் இல்லை. ஏழைகளின் வாழ்வாதாரம் தான் பாதிக்கப்பட்டுக் கவலை கொள்கிறார்கள் என்றால், செல்வந்தனும் ஏதோ ஒன்றைத் தேடி தினம் தினம் கவலை கொள்கிறான். ஆம், அது வேறு ஒன்றுமில்லை. நிம்மதியைத் தேடி தான் தினம் தினம் அலைகிறான்.
"பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி". ஆனால், ஒரு செல்வந்தன் வாழ்க்கையில், பணத்தால் ஏற்படும் 5 முக்கியப் பிரச்சனைகளை இப்பொழுது பார்க்கலாமா!
தனிமையைத் தேடும் நிலை:
நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, செல்வந்தர்கள் என்றுமே தனிமையையே விரும்புவார்கள். ஆனால், அது அவர்களுக்குக் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. ஊடகங்கள் அவர்கள் பற்றின உண்மையை உரக்கக் கூறிக்கொண்டே இருக்க, தனிமை என்பது அவர்களது தவமாகவே இன்றும் இருக்கிறது.
செல்வந்தர்களின் ஒவ்வொரு அசைவும் அனைவருக்கும் தெரியும் விதமாகவே என்றும் இருக்கும். அவ்வாறு அவர்கள் வாழ்க்கை அந்தரமற்று (தனிமையற்று) அந்தரத்தில் (உச்சியில்) தொங்க, அனைவருக்கும் தெரிந்து போக, பிரச்சனைகள் பிம்பமாய் என்றுமே அவர்களை அணுகிக்கொண்டே இருக்கிறது.
போட்டி:
கோடீஸ்வரர் என்றுமே அதிக வருமானம் ஈட்டும் நோக்கத்துடன் சிந்திப்பார்கள். காரணம், தங்களைச் சுற்றி பணம் எவ்வளவு பறந்தாலும், அவர்களுடைய வேட்கை குறைவதேயில்லை. தனக்குப் போட்டியாக ஒருவரை முடிவு செய்து அவர்களை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
புதியதோர் உலகைத் திறமை கொண்டு ஏழைகள் உருவாக்க, இவர்களோ செல்வம் கொண்டு உருவாக்க ஒரு போதும் தவறுவதே இல்லை. போட்டியால் பணம் முன்பு சரணடைந்தும் விடுகின்றனர்.
குடும்ப வாழ்க்கை:
பணத்தைக் கட்டி புரளும் கோடீஸ்வரர்களின் குழந்தைகள், தன் தந்தையைக் கட்டிப் பிடித்துத் தூங்க முடியாமல் ஏக்கத்தில் தவிக்கின்றனர். வர்த்தக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள மறக்காத செல்வந்தர்கள், அனுதினமும் தன்னை நினைத்து ஏங்கும் குழந்தைகளின் சந்தோஷத்தையும், மனைவியின் மனதில் இருக்கும் கவலையையும் உணருவதே கிடையாது.
தொழில் முனைப்புடன் நம்பிக்கை, நாணயம் என்று செயல்படும் இவர்கள், நாணயத்தை மட்டுமே ஈட்ட துடித்து, குடும்பத்தின் நம்பிக்கையை நிர்க்கதியாக்கி விடுகிறார்கள். நாணயத்தை நாலா புறமும் தேடி அலையும் இவர்கள் கண்களுக்குக் குழந்தைகளும், மனைவியும் தெரிவது என்பது மிகவும் குறைவு தான். செல்வந்தர்களின் நெஞ்சம் குற்றம் கொண்டு குறுகுறுத்து போனாலும், வேறு வழியின்றிப் பணம் காட்டிய பாதையில் பயணம் செய்யத் தான் மூளை சொல்கிறது.
அனுதாபமற்ற ஒரு உணர்வு:
கோடீஸ்வரர்கள் ஏழைகளுக்கு நடுவில் கிழிக்கும் ஒரு கோடு, அவர்களுடைய அனுதாபத்தை உணர மறுக்கிறது. இதனால், இந்தச் செல்வந்தர்களிடம், அவன் தொலைதூர உறவினர்கள் கூட ஒட்டி உறவாடாமல் ஒதுங்கியே இருக்கின்றனர்.
சமுதாயத்தில் என்ன தான் பெரும் புள்ளியாக இருந்தாலும், அந்த வார்த்தையை (இவர் பணக்காரர் என்று) பலரும் கூற ஒரு கட்டத்தில் சளித்துப் போகத்தான் செய்கிறது. என்ன செய்வது? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் அல்லவா.
சொற்பொழிவு:
பணம் அதிகம் வைத்திருப்பவர்களின் மீது அனைவரது பார்வையும் 24 மணி நேரமும் விழத்தான் செய்யும். கோர்வையான வார்த்தைகளைப் பொது இடங்களில் பேசும்பொழுது கொஞ்சம் கவனம் அவர்களுக்கு மிகவும் தேவை. கவனம் சிதைந்து, மற்றவர்கள் கவனம் இவர்கள் மீது இருக்கும் பட்சத்தில் தவறான சொற்களை இதழ்களிலிருந்து உதிர்த்துவிட்டோம் என்றால், கூடிய கூட்டம் கடல் அலை போல் கொந்தளிக்கக் கூட நேரிடும்.
சரமாரியாகக் கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழ உங்கள் சட்டை கூடக் கிழிய நேரிடும். அதனால், வார்த்தைகளை விளைவு கருதி பொறுமையாகக் கையாள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.