ஏசி ரூமில் உட்கார்ந்து, கம்ப்யூட்டரைத் தட்டிக் கொண்டு இருக்கும் அழுத்தம் நிறைந்த வேலை செய்பவரா..? 100-க்கு 90 சதவிகிதத்தினர் தற்போது வீட்டில் இருந்து தான் வேலை பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்.
இந்த Work from home-ஐ குறித்து பெங்களூரைச் சேர்ந்த ஃபீட்ஃபேக் இன்சைட்ஸ் (Feedback Insights) என்கிற நிறுவனம் ஒரு சர்வே எடுத்து இருக்கிறது.
அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. அதைத் தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
சர்வே
இந்த நிறுவனம் ஆட்டோமொபைல், கெமிக்கல், கட்டுமானம், க்ளாஸ், எலெக்ட்ரானிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ்... என சுமாராக 18 துறை சார்ந்த கம்பெனிகளின் ஊழியர்கள் 450 பேரையும், 100 வியாபார தலைவர்கள் (பெரும் தலைவர்களையும்) சர்வேக்கு எடுத்து இருக்கிறது. ஆக மொத்தம் 550 பேர் இவர்களின் சர்வே கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறார்கள்.
ஊழியர்கள்
ஊழியர்களைப் பொறுத்தவரை தங்களின் உற்பத்தி திறன் (Productivity) சராசரியாக 78 %-மாக இருக்கிறதாம். 65 % ஊழியர்கள் தங்கள் அலுவலக சகாக்களோடும், மற்ற அணியினரோடு தொடர்பு கொண்டு வேலை பார்க்க முடியவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு வேலை சூழல் பற்றி கவலைப்படுவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
மற்ற பிரச்சனைகள்
அலுவலக வேலைகளைச் செய்யும் போது இணையம் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் வருவதாக 56 % ஊழியர்கள் சொல்லி இருக்கிறார்கள். மிக குறிப்பாக Work from home செய்வதால், வீட்டில் நிறைய கவனச் சிதைவுகள் (Distraction) ஏற்படுவதாக 47 % ஊழியர்கள் சொல்லி இருக்கிறார்களாம்.
பெரும் தலைகள்
ஊழியர்களுக்கு Work from home-ல் இப்படி பிரச்சனைகள் இருக்கிறது என்றால், வியாபார பெரும் தலைகளுக்கும், ஊழியர்களின் உற்பத்தித் திறன் 65 % தான் இருக்கிறது என்கிறார்கள். அதோடு தன் ஊழியர்களை ரிமோட்டில் நிர்வகிப்பது மிகப் பெரிய சவாலாக இருப்பதாக 58 சதவிகித பெரும் தலைகள் சொல்லி இருக்கிறார்கள்.
வேறு என்ன
பெரும் தலைகளைப் பொறுத்த வரை டேட்டா செக்யூரிட்டி மற்றும் அரசு வரையறைகள் மிகப் பெரிய சிக்கலாக இருப்பதாக 50 சதவிகித பெரும் தலைகள் சொல்லி இருக்கிறார்கள். இப்போது வரை 73 சதவிகித பிசினஸ் பெரும் தலைகள் மெயில் மற்றும் போன் கால்களைத் தான் அதிகம் நம்பிக் கொண்டு இருக்கிறார்களாம். அதைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.