விவரமாகப் பார்ப்போம்...
ஒரு மனிதனுக்கு கடன் கொடுக்கலாமா... அவனால் அதைத் தாங்க முடியுமா.. திருப்பி செலுததும் திறன் இருக்கிறதா... என்பதை அலசுவதைப் போலத்தான், ஒரு நாட்டைப் பற்றியும் அலசி பட்டியலிடுகிறார்கள். புள்ளிகள் தருகிறார்கள்.
நல்ல ரேட்டிங்கில் உள்ள நாடு அல்லது நிறுவனத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தர உலக நிதி அமைப்புகள் முன்வரும். அந்த நாட்டில் முதலீடு செய்ய வெளி முதலீட்டாளர்களுக்கு தயக்கமிருக்காது. ரேட்டிங்கில் குறைந்துவிட்டால், எல்லாமே தலைகீழ்தான். கடன் தர முன்வரமாட்டார்கள். அப்படியே தந்தாலும் நிறைய நிபந்தனைகள், வட்டிகள் இருக்கும்.
இதைச் செய்ய உலகளவில் ஸ்டாண்டர்டு அண்டு புவர், மூடி, ஃபிட்ச் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களின் ரேட்டிங்கில் ஒரு நாடு வீழ்ச்சி கண்டால், அவர்களின் கடன் பெறும் திறன் வெகுவாகக் குறைந்துவிடும்.
உதாரணத்துக்கு, இந்தியாவின் ரேட்டிங் குறைந்த நிலையில், இந்திய நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் முதலீடு திரட்ட முயற்சிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது, முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்துக்கு கடன் தர முன்வர மாட்டார்கள். அல்லது பாதுகாப்பு கருது, ஏகப்பட்ட வட்டியைத் தீட்டிவிடுவார்கள்.
அதிக வட்டிக்கு வாங்கிவிட்டு, பின்னர் அதைச் செலுத்த முடியாமல் நிறுவனம் திணறும் நிலை வரும். இது அந்த நிறுவனத்தை திவாலுக்கு இட்டுச் சென்றுவிடும்.
இந்தியாவின் ரேட்டிங்
ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவன மதிப்பீட்டின்படி, கடந்த 2007-ல் இந்தியாவின் ரேட்டிங் நிலையாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரலில் இந்த கடன் பெறும் திறன் பட்டியலில் சறுக்கிவிட்டது இந்தியா. இப்போது மேலும் வீழ்ச்சி கண்டு 'junk status' க்கு போகப் போகிறது என்கிறது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர். இந்த ஜங்க் நிலை மிக மோசமானது.
இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து நாம் பெறும் கடன்கள் ரொம்ப காஸ்ட்லியாகிவிடும். உலகில் முதலீட்டுக்கு ரிஸ்க் அதிகமுள்ள நாடு என்ற பெயரை இந்தியா பெறும்!