சென்னை: அமெரிக்கா போன்ற நாடுகளில் வாரிசுரிமை வரி என்று ஒன்று உள்ளது. வாரிசுரிமை வரி வகிதம் 10 முதல் 50 வரை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்த வாரிசுரிமை வரியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தலாமா என்று மத்திய அரசு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது.
அதாவது பெற்றோர் அல்லது உறவினர் ஆகியோரின் காலத்திற்கு பின்பு அவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்ற வாரிசுதாரர், அந்த சொத்துக்களுக்கு வரி செலுத்த வேண்டும். இதைத் தான் வாரிசுரிமை வரி என்கிறோம். இந்த வரியை இந்தியாவில் அறிமுகம் செய்வதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைக் குறைக்க முடியும் என்று அரசு கருதுகிறது. கடந்த 1953ம் ஆண்டு எஸ்டேட் டியூட்டி ஆக்ட் என்ற சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு பின் 1985ல் அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதன் மூலம் மூதாதையரின் சொத்துக்களைப் பெற்ற வாரிசுதாரர் சொத்துக்களுக்கான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவானது. ஆனால் தற்போது இந்த வாரிசுரிமை வரியை மீண்டும் அறிமுகம் செய்யலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
வாரிசுரிமை வரியை எவ்வாறு கணக்கிடுவது?
இறந்தவரின் மொத்த சொத்தையும், அதாவது அவர் விட்டுச் சென்ற மொத்த ரொக்க பணம் மற்றும் அவர் செய்திருக்கும் மொத்த முதலீடுகள் ஆகியவற்றைக் கூட்டி, அதிலிருந்து அவருடைய கடன்களை கழித்து அதில் மீதமிருக்கும் சொத்துக்களை அரசு மதிப்பீடு செய்யும். அந்த சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்திருக்கும் மதிப்பிற்கு அதிகமாக இருந்தால் அந்த சொத்தைப் பெறும் வாரிசுதாரர், அந்த சொத்துக்கு அரசு நிர்ணயிக்கும் வரியை செலுத்த வேண்டும். இதன் மூலம் செல்வந்தர்கள் வைத்திருக்கும் அதிகப்படியான சொத்தின் மிகச் சிறிய பகுதி அரசுக்கு கிடைக்கும். அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு குறையும்.
எனினும் இது பணக்காரர்களுக்கு கூடுதல் வரிச் சுமையாக அமையும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமானத்திற்கும், சொத்துக்களுக்கும் வரி செலுத்த வேண்டி இருக்கும்.