என்.இ.எஃப்.டி:
எலக்ட்ரானிக் முறைகளான தொலைபேசி, கணினி மற்றும் ஏ.டி.எம். மூலமாக செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் தான் "தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை" அல்லது என்.இ.எஃப்.டி எனப்படுகிறது. இதன் மூலம் வங்கிகளுக்கிடையிலான அல்லது ஒரு வங்கியின் கிளைகளுக்குள்ளான பணப் பரிவர்த்தனைகளை செய்ய வசதியுள்ளது. குறைந்தபட்ச பரிவர்த்தனைத் தொகை ரூ.100.
செயலற்ற கணக்குகள்:
ஒரு வாடிக்கையாளர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது வங்கிக் கணக்கில் வங்கியின் வட்டி வரவினங்களைத் தவிர வேறு பரிவர்த்தனைகள் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அந்த சேமிப்புக்கணக்கு அல்லது நடப்புக் கணக்கு செயலற்ற கணக்காக அறிவிக்கப்படுகிறது.
நிலையான வட்டி விகிதம்:
நிலையான வட்டி விகிதம் என்பது கடன் காலம் முழுமைக்கும் மாறாமல் நிலையாக இருக்கும் வட்டி விகிதம் ஆகும்.
மாறத்தக்க வட்டி விகிதம்:
சந்தை விகிதத்தை சார்ந்து இருக்கும் இந்த வட்டி விகிதம், பொருளாதார வட்டி விகிதத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது. பொருளாதார வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, மாறத்தக்க வட்டி விகிதமும் அதிகரிக்கப்படுகிறது.
எம்.ஐ.சி.ஆர். குறியீடு:
காந்த மை எழுத்தடையாளம் என்பதன் ஆங்கிலச் சுருக்கமே எம்.ஐ.சி.ஆர். என்பதாகும். எம்.ஐ.சி.ஆர். குறியீடு உங்கள் காசோலையின் அடிப்பகுதியில் வலது பக்கத்தில் காணப்படும் ஒன்பது எண்கள் கொண்ட குறியீடாகும். இது வங்கியின் ஒவ்வொரு கிளைக்கும் தனிப்பட்ட குறியீடாக இருக்கும். இந்தக் குறியீடு காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐ.எஃப்.எஸ்.சி. குறியீட்டிலிருந்து மாறுபட்டதாகும்.
நோ-பிரில்ஸ் கணக்கு:
அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கிப் பரிவர்த்தனைகளை எளிமையாக உபயோகிக்கும் பொருட்டு வங்கிகளால் வழங்கப்படும் அடிப்படை வங்கிக் கணக்கு இது. இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு என்று ஏதும் இன்றி அடிப்படை வசதிகளான மின்னணு பணப் பரிமாற்றம், நெட் பேங்கிங், இலவச காசோலை புத்தகம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
மின்னணு தீர்வு சேவைகள் (ஈ.சி.எஸ்):
இது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து முதலீட்டுக் கணக்கிற்கு (உதாரணம் மியூச்சுவல் ஃபண்டு) அல்லது உங்கள் மாதாந்திரத் தவணைகளுக்கு நேரடியாக பணம் செலுத்தக் கூடிய வகையில் வங்கிகள் அளிக்கும் ஒரு சேவையாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, எல்லா மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யும்படி வங்கிகளுக்கு வழிமுறைகள் வழங்கலாம். இதற்கு மாற்றாக நீங்கள் நேரடியாக என்.இ.எஃ.டி அல்லது ஆர்.டி.ஜி.எஸ்.(கீழே விளக்கப்பட்டுள்ளது) மூலம் செலுத்தலாம்.
செய்முறைக் கட்டணம்:
கடன் வாங்குபவரிடம் இருந்து, கடனை பரிசீலிக்கும் பொருட்டு செய்முறைக் கட்டணம் அல்லது ப்ராசசிங் கட்டணம் ஒன்றை வங்கிகள் வசூலிக்கின்றன. இது உங்கள் மொத்தக் கடன் தொகையில் ஒரு சதவீதமாக (உதாரணத்திற்கு 2.5 %) இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஆர்.டி.ஜி.எஸ்.:
நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு அல்லது ஆர்.டி.ஜி.எஸ் வங்கிகளுக்கிடையிலான அல்லது ஒரு வங்கியின் கிளைகளுக்கிடையிலான பணப் பரிவர்த்தனைகள் செய்யும் வசதியைத் தருகிறது. என்.இ.எஃப்.டி. போல இல்லாமல் இது பரிவர்த்தனைகள் நிகழ் நேரத்தில் வெகு விரைவாக நடப்பதை உறுதி செய்கிறது. இதற்காக ஒரு நியாயமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
ஐ.எஃப்.எஸ்.சி. குறியீடு:
ஐ.எஃப்.எஸ்.சி. குறியீடு வங்கிகளின் பணப் பரிமாற்றத்திற்கும், காசோலை தீர்வு செய்வதற்கும் பயன்படுகிறது. 11 எழுத்துகள் கொண்ட இந்தக் குறியீடு மத்திய ரிசர்வ் வங்கியால் ஒவ்வொரு வங்கிக்கும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வங்கிக்கும் இந்தக் குறியீடு தனித்துவமானது. முதல் நான்கு எழுத்துக்கள் வங்கியைக் குறிப்பதாகவும் கடைசி ஆறு எழுத்துக்கள் வங்கிக் கிளையைக் குறிப்பதாகவும் இருக்கின்றன. ஐந்தாவது எழுத்து பின்னாளில் உபயோகிக்கும் பொருட்டு தற்போது பூஜ்ஜியமாக வைக்கப்பட்டுள்ளது.
கே.ஒய்.சி.:
உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) என்ற விதி மத்திய ரிசர்வ் வங்கியால் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டதாகும். இது, வங்கிகள் வாடிக்கையாளர்களைப் பற்றிய சரியான தகவல்களை வைத்துள்ளதை உறுதி செய்யவும், சட்டப்பூர்வமான வங்கிப் பரிமாற்றங்களில் மட்டுமே ஈடுபடுகிறது மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யவும் மத்திய ரிசர்வ் வங்கியால் உபயோகப்படுத்துகிறது.