சென்னை: பங்கு வணிகத்தில் ஈடுபடும்போதும், பங்குகளில் முதலீடு செய்யும்போதும் நாம் அடிக்கடி கேள்விப்படும் சொற்கள் "காளை"(புல்) மற்றும் "கரடி"(பேர்) ஆகும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கியவர்களுக்கு இச்சொற்கள் ஆரம்பத்தில் புரிந்துகொள்ளக் கடினமானவையாக இருக்கலாம். "காளை" மற்றும் "கரடி" என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
காளை சந்தை:
சந்தையின் போக்கு நன்றாக இருந்து பங்குகளின் விலை உயரும் என்று முதலீட்டாளர்கள் நம்பி முதலீடு செய்ய முற்படும்பொழுது சந்தையில் பங்குகளின் விலை உயரத் தொடங்கும். இந்த நிலையில் சந்தை காளையின் பிடியில் உள்ளது என்பார்கள். இது காளை சந்தை எனப்படும். காளை சந்தையில் வாங்குபவர்களே இருப்பார்கள். விற்பவர்கள் குறைவாகவே காணப்படுவார்கள்.
கரடி சந்தை:
சந்தையின் போக்கு எதிர்மறையாக இருந்து பங்குகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று முதலீட்டாளர்கள் நம்பி முதலீடு செய்த பங்குகளை விற்க முற்படும்பொழுது சந்தையில் பங்குகளின் விலை சரியத் தொடங்கும். இந்த நிலையில் சந்தை கரடியின் பிடியில் உள்ளது என்பார்கள். இது கரடி சந்தை எனப்படும். கரடி சந்தையில் விற்பவர்களே இருப்பார்கள். வாங்குபவர்கள் குறைவாகவே காணப்படுவார்கள்.
விலங்குகளின் பெயர் ஏன்?
சந்தையின் போக்கிற்கு ஏற்ப ஏன் சில விலங்குகளின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான காரணம் தெரியவில்லை. ஒரு வேளை இந்த விலங்குகளின் போர்க்குணங்கள் மற்றும் அவை எதிரி விலங்குகளை எப்படித் தாக்கும் என்பது போன்ற தன்மைகளை வைத்து இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கலாம். உதாரணமாக, ஒரு காளை ஆக்ரோஷமாக செல்லும் பொழுது தனது கொம்புகளை உயரே தூக்கி காற்றில் வேகமாக ஆட்டும். கரடியானது தனது கால்களால் நிலத்தைப் பிறாண்டும். இவ்விரண்டு செயல்களும் சந்தையின் மேல் நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய போக்குக்கு உவமையாகக் கொள்ளப்பட்டு பெயரிடப்பட்டிருக்கலாம்.