தொழில் முறைக்கல்வி மற்றும் பயிற்சி, கல்வி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் குறைவான கல்வித் தகுதி உடையவர்களுக்கு, நிதியாதாரம் கிடைக்க வழிவகை செய்து தருவதையே தன் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தொழில் முறைக்கல்விகள், அழகுக்கலை, சிகையலங்காரம், தையற்கலை, மொபைல் ரிப்பேர் செய்தல், எலக்ட்ரானிக் சாதனங்களை சீர் செய்தல் போன்ற பல வகைத் தொழில்களை உள்ளடக்கியுள்ளன.
அடிப்படை விதிகள்:
மாணவரின் வயதைப் பொறுத்த வரை கடன் பெறுவதற்கு எந்த குறிப்பிட்ட வரையறையும் கிடையாது. எனினும், ஒரு மாணவர் மைனராய் இருந்து அவர்தம் பெற்றோர் ஆவணங்களை சாசனம் செய்யும் பட்சத்தில் அம்மாணவர் மேஜராகும் போது, வங்கி அவரிடமிருந்து, ஒரு ஆமோதிப்புக் கடிதத்தை வாங்கிக் கொள்ளும். அம்மாணவர், பத்தாவது தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். அவர், மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
கடன் தொகை:
கடன் தொகை படிப்புக்கான கால அளவைச் சார்ந்திருக்கும்.
- 3 மாத காலம் வரையிலான படிப்புகளுக்கு ரூ. 20,000/-
- 3 முதல் 6 மாதம் வரையிலான படிப்புகளுக்கு ரூ. 50,000/-
- 6 முதல் 1 வருடம் வரையிலான படிப்புகளுக்கு ரூ. 75,000/-
- 1 வருட காலத்திற்கு மேற்பட்ட படிப்புகளுக்கு ரூ. 1,50,000/-
பெயர் பெற்ற நிறுவனங்கள் அளிக்கும் 1 வருட காலத்துக்கு மேற்பட்ட குறிப்பிட்ட படிப்புகளுக்கு அவற்றின் தன்மை மற்றும் வேலை வாய்ப்பு (வேலை மூலம் சம்பாதித்து கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய வாய்ப்பு) ஆகியவற்றைப் பொறுத்து வங்கிகள் அதிக கடன் தொகை வழங்குவதைப் பற்றி பரிசீலிக்கின்றன.
செலவுகள்:
இக்கடன் திட்டம் உள்ளடக்கக்கூடிய செலவுகள் பின் வருமாறு:
கல்விக் கட்டணங்கள்
பிணையத் தொகை
தேர்வு கட்டணங்கள்
நூலகக் கட்டணங்கள்
ஆய்வுக்கூட கட்டணங்கள்
புத்தகங்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் வாங்குவதற்கான கட்டணங்கள்
படிப்பை முடிக்கத் தேவைப்படும் இதர செலவுகள்
வட்டி விகிதங்கள்:
வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி வேறுபடுகின்றன. பெரும்பான்மையான வங்கிகள் 12 சதவீதத்துக்கும், 13.75 சதவீதத்துக்கும் இடைப்பட்ட வட்டி விகிதங்களை விதிக்கின்றன.
செக்யூரிட்டி:
ஏதேனும் ஈடோ அல்லது மூன்றாம் நபரின் உத்தரவாதமோ எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் கடன் பெறும் மாணவர் கடன் பெறுபவராகவும், அவரது பெற்றோர் கூட்டாகக் கடன் பெறுபவராகவும் ஆவணங்களில் குறிப்பிடப்படுவர்.
கடன் தவணையுரிமைக் காலம்:
படிப்பு முடிந்த பின் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைகள் தொடங்குவதற்கு முற்பட்ட காலம்.
1 வருடம் வரையிலான படிப்புகள் - படிப்பு முடிவடைந்ததில் இருந்து 6 மாதங்கள்
1 வருடகாலத்துக்கு மேற்பட்ட படிப்புகள் - படிப்பு முடிவடைந்ததில் இருந்து 12 மாதங்கள்
கடனைத் திருப்பிச் செலுத்துதல்:
கடன் தவணையுரிமைக் காலம் முடிந்த பின் கடன் தொகை, பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்திர தவணையில் (இஎம்ஐ) செலுத்தப்பட வேண்டும்:
1 வருடம் வரையிலான படிப்புகள் - 2 முதல் 5 வருடங்கள் வரை
1 வருட காலத்துக்கு மேற்பட்ட படிப்புகள் - 3 முதல் 7 வருடங்கள் வரை