நீங்கள் ஓய்வூதியம் பெறுவதாக இருந்தால் (மாற்று ஓய்வூதியமாக இல்லாமல்) அது "சம்பளம்" அல்லது "பிற மூலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம்" என்று கருதப்படுகிறது. இது ஓய்வூதியம் பெறுபவரின் அந்தஸ்தைப் பொருத்தது. எனவே நீங்கள் வேலை செய்திருந்து உங்கள் முதலாளியிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றால் அதை சம்பளம் மூலமான வருமானமாகவே கருத வேண்டும். இதுவே நீங்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவதாக இருந்தால் அதாவது கணவரின் மறைவுக்குப் பிறகு மனைவி ஓய்வூதியம் பெறுவதாக இருந்தால் இதை சம்பளமாக கருதாமல் "பிற மூலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம்" என்று கருத வேண்டும். ஏனென்றால் இங்கு மனைவி வேலைக்குச் செல்லவில்லை, கணவரே சென்றுள்ளார்.
எனவே சரியாக வகைப்படுத்தி ஓய்வூதிய வருமானத்தை சரியான பிரிவின் கீழ் தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது. பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா போன்ற விருதுகளில் ஏதேனும் ஒன்றை குடும்ப உறுப்பினர் பெற்றிருந்தால் அவர்கள் பெறும் ஒய்வூதியத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம். பணியிலிருக்கும் தொழிலாளி இறக்கும் பட்சத்தில் அவரது விதவை மனைவிக்கு அளிக்கப்படும் தொகை மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விதிக்க இயலாது.
மாற்று ஓய்வூதியத்தின் மீதான வரி:
மாற்று ஓய்வூதியம் என்பது சாதாரண ஓய்வூதிய முறைப்படி அல்லாமல் ஒய்வூதியதாரருக்கு மொத்தமாக பணத்தை வழங்குவதாகும். ஒருவர் பணியில் இருந்த காலம் மற்றும் அவரது வயது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த மொத்தப் பணம் கணக்கிலிடப்படுகிறது. இந்த வகையான ஓய்வூதியத்தின் மீதான வரி விதிப்பு கீழ்கண்டவாறு இருக்கும்.
1. அரசு ஊழியர்கள்: மொத்தமாக வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
2. அரசு ஊழியர் அல்லாதோர்:
* ஊழியர் கிராஜுவிட்டி பெறும் பட்சத்தில் ஓய்வூதியத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* இல்லாத பட்சத்தில் ஓய்வூதியத்தின் இரண்டில் ஒரு பங்கு அளவிற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.