
பணத்தின் கூட்டு சக்தி என்றால் என்ன? அது எப்படி நமக்கு பலன் தரும்? பணத்தின் கூட்டு சக்தியை நமக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
உதாரணமாக, வங்கி சேமிப்பு கணக்கில் 5 சதவிகித வட்டியில் 1000 ரூபாய் முதலீடு செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு வருடத்தில் அந்தத் தொகை 1050 ரூபாயாக கூடுகிறது. முதலீடு செய்த பணத்தைவிட 50 ரூபாய் கூடி இருக்கிறது.
ஒரு வருட இறுதியில் = 1000 + (1000 * 5/100) = 1050
இரண்டாம் வருடத்தில் இது 1102.50 ரூபாயாக கூடுகிறது. அதாவது, இரண்டாம் ஆண்டு இறுதியில் ரூ. 52.50 வருமானம் கிடைக்கும்.
இரண்டு வருட இறுதியில்= 1000+ (1000 * 5/100)+(1050 * 5/100)
= 1102.50
மூன்றாம் வருடத்தில் இது 1157.63 ரூபாயாக கூடுகிறது. அதாவது, மூன்றாம் ஆண்டு இறுதியில் ரூ.55.13 வருமானம் கிடைக்கிறது.
மூன்று வருட இறுதியில்
=1000+ (1000 * 5/100)+(1050 * 5/100)+(1102.50*5/100)
= 1157.63
இவ்வாறு, நாம் முதலீடு செய்த 1000 ரூபாய் 10 வருடத்தில் 1629 ரூபாயாகவும், 25 வருடத்தில் 3386 ரூபாயாகவும் கூடுகிறது.
இதன் மூலம் ஆரம்பத்திலேயே 1000 ரூபாய் முதலீடு செய்வதற்கும், சிறிது வருடம் கழித்து முதலீடு செய்வதிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆக, ஆரம்பத்திலேயே முதலீடு செய்து, பணக் கூட்டு சக்தியை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி சிறிது சிறிதாக நம் பொருளாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள முடியும்.
இதுவரை, பணக்கூட்டு சக்தியின் பயன்களைப் பார்த்தோம். இப்போது, அதன் பாதகங்களையும் பார்ப்போம். வட்டி குட்டி போடும் என நாம் பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. பணக் கூட்டு சக்தியின் விளைவு தான் இதுவும்.
சரி, இதற்கான உதாரணத்தைப் பார்ப்போம்.
ஒரு வண்டி வாங்குவதற்காக ரூ.20,000 10 சதவிகித வட்டியில் 5 வருட கடன் காலத்தில் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதன்படி, நாம் திரும்பிச் செலுத்த வேண்டிய மாதத் தவணைத் தொகை ரூ. 424.94.
5 வருடத்திற்கு அதாவது 60 மாதங்கள் இந்தத் தொகையைச் செலுத்தும் போது, மொத்தம் ரூ.25496.4 (60 X 424.94). ஆக, நாம் கடன் பெற்ற தொகையை விட ரூ. 5496.46 அதிகமாக செலுத்துகிறோம்.
அதுமட்டுமல்ல, மாதத் தவணை ஆரம்ப காலத்தில் நாம் செலுத்தும் தவணையில் கிட்டதட்ட 40 சதவிகிதம் வட்டிக்காகவே செல்லும். இவ்வாறு, வங்கிகள் மற்றும் கடன் தரும் நிறுவனங்கள், காலம் மற்றும் பண மதிப்பை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதித் திட்டம், வைப்புத் தொகை திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள் பணக் கூட்டு சக்தியின் அருமையைப் புரிந்து கொண்டு, திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.


Click it and Unblock the Notifications