எடுத்துக்காட்டாக, ஒரு தனி மனிதர் தான் பார்த்து வரும் வேலையை இழந்துவிடும் போது, தான் வாங்கியக் கடனைக் கட்டுவதில் அவருக்கு சிக்கல் ஏற்படலாம். அதுபோல் கார்பரேட் நிறுவனங்களில் தொடர்ந்து தொழிலாளர் பிரச்சினைகள் நீடித்து வந்தால், உற்பத்தி குறைந்து, விற்பனை குறைந்து அந்த நிறுவனத்தின் வருமானம் குறைந்து, அந்த நிறுவனம் தான் வாங்கியக் கடனைக் கட்ட முடியாமல் போகலாம்.
இவ்வாறு தொடர்ந்து 90 நாள்கள் ஒரு தனி மனிதரோ அல்லது நிறுவனமோ தான் வாங்கிய கடனின் அசலையோ அல்லது வட்டியையோ வங்கிக்கு கட்டவில்லை என்றால் அந்த அசலும், வட்டியும், கடன் வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் ஆகியவற்றின் நான் பெர்பார்மிங் அசட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கடந்த பல காலாண்டுகளாக பெருகி வரும் நான் பெர்பார்மன்ஸ் அசட்ஸ்களை தேசிய மயமாகக்கப்பட்ட வங்கிகள் சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்தின் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு பெரிய அளவில் பாதிக்கப்பட்டதன் மூலம், இந்த நான் பெர்பார்மன்ஸ் அசட்ஸ்களின் விகிதம் 4 சதவீதம் அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மின் உற்பத்தித் துறை மற்றும் உட்கட்டமைப்புத் துறை போன்றவற்றிலிருந்துதான் நான் பெர்பார்மன்ஸ் அசட்ஸ்களின் விகிதம் அதிகரித்திருக்கிறது. மேலும் இந்த நான் பெர்பார்மன்ஸ் அசட்ஸ்கள் திரும்ப வராது என்று தெரிந்தால் அதை மறந்துவிட வேண்டியதுதான்.
சமீப காலமாக, தாங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிய கடன்களை வசூலிப்பதில் இந்திய வங்கிகள் எந்த அளவுக்கு அக்கறையுடன் இருக்கின்றன என்று இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கடி பரிசோதனை செய்து வருகின்றது. வங்கிகள் தாங்கள் வழங்கிய கடனை வசூலிப்பதில் தங்களால் முடிந்த அளவிற்கு அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றன. எனினும் ஒரு சில நேரங்களில் அந்த கடன்களை வசூலிக்க முடியாமல் போகிறது.
மேலும் கடன் கொடுத்த பின் அதை திரும்ப பெறுவதில் வங்கிகளுக்கு அதிகமான சிரமங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பல வங்கிகள் கடன்களை வழங்கி இருக்கின்றன. இந்த நிலையில் மூடுவிழா நடத்தப்பட வேண்டிய நிலையில் இந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் இருக்கிறது. எனவே தான் வாங்கிய கடன்களை இந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. இதன் மூலம் வங்கிகளின் நான் பெர்பார்மன்ஸ் அசட்ஸ்களின் விகிதம் அதிகரித்துவிடுகிறது.