வங்கி சேமிப்புக் கணக்கில் உபரியாக பணம் வைத்து, குறைந்த அளவு பரிமாற்றங்கள் செய்பவர்களுக்கு ஆட்டோ ஸ்வீப் அவுட் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
ஆட்டோ ஸ்வீப் அவுட் என்றால் என்ன?
ஒருமுறை இந்த வாய்ப்பை தேர்வு செய்தால் உங்கள் கணக்கில் மாறுநிலை வரம்புக்கு (Threshold) அதிகமாக உள்ள பணம் வைப்புத் தொகையாக கணக்கில் கொள்ளப்படுகிறது. பொதுவாக உங்களது சாதாரண வங்கிக் கணக்கிற்கு நீங்கள் 4 சதவீதம் வட்டி பெறுகிறீர்கள். ஆட்டோ ஸ்வீப் வசதியை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் உங்களது வங்கியைப் பொறுத்து 8 முதல் 9 சதவீதம் வரை வட்டி பெறலாம்.
இந்த வசதிக்கான பெயர் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆக்சிஸ் வங்கி தனது ஆட்டோ ஸ்வீப் கணக்கிற்கு "என்கேஷ் 24" என்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கி "சூப்பர் சேவர் வசதி" என்றும் பெயரிட்டுள்ளன.
உதாரணத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கிற்கான குறைந்தபட்ச வரம்பாக ரூ. 10,000 நீங்கள் தக்க வைக்க வேண்டும் என்று இருந்து, உங்களது கணக்கில் சில மாதங்களாக ரூ. 50,000 உபரியாக எந்த உபயோகமும் இல்லாமல் கிடந்தால், அது போன்ற சமயங்களில் நீங்கள் இந்த வாய்ப்பை உபயோகிக்கலாம்.
என்ன நடக்குமென்றால் அந்த உபரிப் பணமானது வைப்புத் தொகை கணக்கில் வைக்கப்படும். வங்கிக்கு வங்கி இந்தக் கணக்கில் வைக்கப்படும் காலம் மாறுபடும். உங்கள் பணத்தைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியது இல்லை.
நீங்கள் எந்நேரம் வேண்டுமானாலும் ஏ.டி.எம். மூலமாகவோ அல்லது செக் மூலமாகவோ பணத்தை எடுக்கலாம். அவ்வாறு நீங்கள் எடுக்கும் பணம் நிரந்தர வைப்புத் தொகையில் இருந்து எடுக்கப்பட்டுவிடும். இருப்பினும், முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற்றதற்கான அபராதம் வங்கிவிதிகளின்படி பொருந்தும்.
ஆட்டோ ஸ்வீப் இன்:
இது ஆட்டோ ஸ்வீப் அவுட்டிற்கு நேர் மாறான வசதியாகும். இங்கே உங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பைவிட பணம் குறையும் பட்சத்தில் வைப்புத் தொகை கணக்கு உடைக்கப்பட்டு பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். நீங்கள் ஒரு செக்கை வெளியிட்டு, உங்கள் கணக்கில் பணம் குறைவாக இருக்கும் சூழலில் இந்த வாய்ப்பு உபயோகமானதாக இருக்கும்.