டிடிசி என்பது வெளிப்படையாகவும், திறம்பெற்றதாகவும், மிகவும் எளிமையானதாகவும் இருக்கும்படி உருவாக்கப்பட்டு, வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாகக் கொண்டு வரப்படுகிறது.
டிடிசி ஒளிவு மறைவில்லாத வரி விதிகளைக் கொண்டதாகவும், பல்வேறு வருமான வரி விலக்குகள் நீக்கப்பட்டதாகவும் இருக்கிறது. எனினும், இந்த மசோதாவைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட தாமதங்கள் நேர்ந்து இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிடிசி இன்னும் மேம்படுத்தப்படுவதாகவும், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
டைரக்ட் டாக்சஸ் கோட் தாமதப்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் சர்ச்சைக்குரிய அதன் வரி விதிகள் தாம். உதாரணத்திற்கு, இதன் ரெட்ராஸ்பெக்டிவ் வரிகளைச் சொல்லலாம். அதனாலேயே இது நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. டிடிசி, வருமான வரிச் சட்டம் 1961-இன் திருத்தப்பட்ட பதிப்பாக இல்லாமல் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை பின்பற்றி வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சட்டம் என்று பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி நாடாளுமன்ற நிதி நிலைக்குழு இந்த மசோதவைப் பற்றிய தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், இக்குழுவின் பரிந்துரைகளுக்கு அரசு மிக்க மதிப்பளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர், "மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் எங்கள் குழு, தற்போது நிலைக்குழு பரிந்துரைகளை ஆராய்கிறார்கள். நான் நிலைக்குழு மற்றும் அதன் சேர்மனுடன் சேர்ந்து கலந்துரையாடி அதிகாரப்பூர்வமான திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்ய எண்ணியுள்ளேன். இந்த மசோதாவை இப்பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் முன் நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வர பெரும் முயற்சி செய்வேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
நிலைக்குழு வருமான வரிவிலக்கு வரையறையை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம் என்றும், சேமிப்பு விலக்கு வரையறையையும் உயர்த்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டைரக்ட் டாக்சஸ் கோட் எப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.