ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் என்றால் என்ன?
வீடு வாங்க மாதா மாதம் நாம் கடன் செலுத்திய காலம் போய், வீடு நமக்காக ஒவ்வொரு மாதமும் பணம் தருவது தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் அல்லது மறு அடமானக் கடன். சரி, இதனை கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.
60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற முடியும். இவ்வகை கடன் திட்டத்தில், தங்களுடைய வீட்டின் மதிப்பிற்கு உட்பட்ட தொகையை ஒட்டு மொத்தமாகவோ அல்லது மாதா மாதம் ஒரு தொகையாகவோ பெற முடியும். கடன் தொகையை திரும்பக் கட்ட வேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும் வீட்டை பாதுகாத்து, வரி முதலிய செலவுகளை ஏற்று பராமரித்தல் அவசியம்.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
* வில்லங்கம் இல்லாத தெளிவான பத்திரங்களைக் கொண்ட சொத்தாக இருத்தல் அவசியம்.
* கடன் பெறுவோரின் வயது, சொத்தின் சந்தை மதிப்பு, சந்தை வட்டி விகிதம் மற்றும் நாம் தேர்ந்தெடுக்கும் கடன் முறையின் அடிப்படையில் கடன் தொகை வேறுபடும்.
* கணவன் மனைவி இணைந்தும் மறு அடமானக் கடன் வசதியைப் பெற முடியும். அப்படி செய்யும் போது, இருவரின் வயது வரம்பு தொடர்பான விஷயங்களை அந்தந்த வங்கிகள் தீர்மானிக்கும். இருவரில் ஒருவராவது, 60 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியம்.
* கடன் பெற்றவர் இறந்த பிறகோ, அல்லது வீட்டை விற்க முற்படும் போதோ கடன் தொகையை திருப்பிச் செலுத்தினால் போதும்.
* அதிகப்பட்சமாக 15 வருடங்கள் வரை மாதா மாதம் கடன் தொகையை தொடர்ச்சியாக பெற முடியும். இதற்கு வீட்டின் ஆயுட்காலம் குறைந்தது 20 வருடங்களாவது இருத்தல் அவசியம். 15 வருடங்கள் கழிந்த பின் மாதத் தொகையை கடனாகப் பெற இயலாது.
இவ்வாறு கடன் பெற்றவர் இறந்த பிறகு, அடமான வீடு தொடர்பான விவரங்களை வாரிசுகள் முடிவு செய்யலாம். அவர்கள் சொத்தை விற்க வேண்டும் என்று விரும்பினால், அதனை விற்று கடன் மற்றும் அது தொடர்பான வட்டி தொகையை தவிர்த்து, மீதமுள்ள தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள முடிவு செய்தால் கடன் மற்றும் வட்டித் தொகையை வங்கிக்கு செலுத்திவிட்டு அதை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
கடன் தொகையை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
* வீட்டைப் பராமரிக்க, விரிவுபடுத்த பயன்படுத்தலாம்.
* வீட்டு காப்பீடு செலுத்த பயன்படுத்தலாம்.
* அவசர மருத்துவ செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
* ஓய்வூதியத்திற்கு துணையாக இத்தொகையை வைத்து தினசரி தேவைகளுக்கு செலவு செய்து கொள்ளலாம்.
* அத்தியாவசியமான பிற தேவைகளுக்கு இத்தொகையைப் பயன்படுத்தலாம்.
சூதாடுவதற்கோ, வணிகம் செய்வதற்கோ அல்லது பங்கு வர்த்தகத்தில் ஈடுபது போன்ற விஷயங்களுக்கோ இக்கடன் தொகையை செலவிட அனுமதி இல்லை.
மருத்துவச் செலவு, விலைவாசி உயர்வு, அடிப்படைத் தேவைக்கான செலவு என செலவுகளில் உழலும் மூத்த குடிமக்களுக்கு இது மிகச் சிறந்த கடன் திட்டம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.