மூத்த குடிமக்ககளுக்காக மருத்துவ காப்பீடு திட்டங்கள் என்றால் என்ன? இந்த காப்பீடு திட்டங்கள் மூத்த குடிமகன்களுக்காக மட்டுமே நடத்தப்படும் திட்டம். பெரும்பாலான காப்பீடு நிறுவனங்கள் மூத்த குடிமகன்களுக்கான வயது வரம்பை 60 ஆக நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் சேர அதிக பட்ச வயது வரம்பு இல்லை. இந்த காப்பீடு திட்டத்தில் நீங்கள் ஒரு முறை சேர்ந்து விட்டால், உங்களுடைய ஆயுள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இருப்பினும், பெரும்பாலான காப்பீட்டு நிறுவங்கள் 80 வயதை தாண்டியவர்கள் இந்த திட்டத்தில் புதிதாக சேருவதற்கு தடை விதித்துள்ளன. அதிகபட்ச காப்பீடு தொகை நீங்கள் செலுத்தும் பிரீமியத்தை பொறுத்து ரூ 1 லட்சம் முதல் ரூ 60 லட்சம் வரை மாறுபடுகிறது. சாதாரண மருத்துவ காப்பீட்டு திட்டங்களைப் போன்று, இந்த காப்பீடு திட்டங்களும் அவசர மருத்துவச் செலவுகள் மற்றும் கொடிய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன.
அத்தகைய காப்பீடு திட்டங்களின் நன்மைகள் சில:
கொடிய நோய்களுக்கான மருத்துவமனைச் செலவுகள் மற்றும் சிகிச்சை செலவுகள்.நீங்கள் மருத்துவமனையில் குறைந்த பட்சம் 24 மணி நேரவாவது தங்கியிருந்தால் மட்டுமே உங்களுடைய மருத்துவமனை செலவுகள் காப்பீடு நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படும். சிகிச்சைக்கான செலவுகளில் மருத்துவரின் கட்டணம், அறை கட்டணம், மருந்து செலவு, செவிலியர் கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் ஆகியன ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஒரு நாளைக்கான அதிகபட்ச செலவுகள் ஒவ்வொருவருடைய காப்பீட்டை பொருத்து மாறுபடுகிறது.
காப்பீடு நிறுவனத்தின் தொடர் மருத்துவமனைகளில் செலவில்லா மருத்துவ சிகிச்சை:காப்பீடு நிறுவனத்தின் அனைத்து தொடர் மருத்துவமனைகளிலும் பாலிசிதாரர்களுக்கு செலவில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் பாலிசி தொடங்கும் காலத்தில், அந்த நிறுவனத்தால் அங்கிகரிக்கபட்ட தொடர் மருத்துவமனைகளின் பட்டியலை பாலிசிதாரர்களுக்கு வழங்குகின்றன.
ஒரு நாள் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள்:
பெரும்பாலான காப்பீடுகள் ஒரு நாள் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கின்றன. இன்றைய நவீன மருத்துவத்தில் சில சிகிச்சைகளுக்கு மிகச் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றன. சிகிச்சை முடிந்து நோயாளிகள் ஒரே நாளில் வீட்டிற்கு திரும்பி விடலாம். உதாரணமாக கண்புரை, கீமோதெரபி, டயாலிசிஸ் போன்றவற்றிற்கு ஒரு நாள் சிகிச்சையே தேவைப் படுகின்றன.
ஆம்புலன்ஸ் கட்டணம்:
ஒரு முறை மருத்துவமனையில் சேர்வதற்கு நாம் அதிக பட்சமாக ரூ 1000 வரை பெற்றுக் கொள்ளலாம். .
முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ மனை செலவுகள்:
இது பொதுவாக மருத்துவமனையில் சேருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின்னும் உள்ள 2 மாதங்களுக்கான செலவுகளை குறிக்கும்.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
மருத்துவ காப்பீட்டை பற்றி ஆரம்ப காலத்திலேயே திட்டமிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் நீங்கள் செலுத்தும் பிரீமியம் உங்களுடைய வயதை பொருத்து அதிகரிக்கும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் பிரீமியம் சராசரியாக 20 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. மேலும் காப்பீடு நிறுவனம் மூத்த குடிமகனான உங்களுடைய காப்பீடை நிராகரிக்கலாம். ஏனெனில் வயதாகி விட்டதால் நோய் ஏற்படும் ஆபத்து மிக அதிகம் என நினைக்கலாம்.
காப்பீட்டை வாங்கும் முன் முந்தய நோய் வரலாறு, குடும்ப விபரம், மற்றும் உங்களுடைய பழக்க வழக்கங்களை தெரிவிப்பது மிகவும் முக்கியம். இது நீங்கள் உங்களுடைய மருத்துவச் செலவுகளை காப்பீடு நிறுவனத்தில் கோரும் பொழுது, அது நிராகரிக்கபடாமல் உங்களை பாதுகாக்கும்.
முன் இருக்கும் நோயைப் பற்றி தெரிவிக்கும் பொழுத் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பல காப்பீடு நிறுவனங்கள் முன் இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை கொண்டிருக்கின்றன. இது 1 வருடத்தில் இருந்து 4 ஆண்டுகள் வரை மாறுபடுகிறது. மேலும் சில காப்பீட்டு நிறுவனங்கள் முன் இருக்கும் நோய்களுக்காக இணை கட்டணத்தை வசூலிக்கின்றன. இணை கட்டணம் என்பது இழப்பு தொகையை பாலிசிதாரர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக வசூலிக்கும் கட்டணம் ஆகும்.
இது சுமார் 50 சதவீதம் வரை அதிகமாகவும் இருக்க கூடும். சில காப்பீட்டு நிறுவனங்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற முன் இருக்கும் நோய்களுக்காக சுமார் 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன.
சில காப்பீடுகள் நிறுவங்கள் எந்தெந்த நோய்களுக்கு அவர்களால் காப்பீடு அளிக்க முடியும் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு ஏற்படும் எல்லா விதமான நோய்களுக்கும் காப்பீடு அளிக்க முடியாது. மேலும் அவர்கள் ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு அதிக பட்ச வரம்பை வைத்திருப்பார்கள். அந்த உச்ச வரம்பிற்கு மேற்பட்ட செலவுகளை பாலிசிதாரர்களே ஏற்க வேண்டும்.
60 வயது என்கிற மைல்கல் கொண்டாட்டத்திற்கான முக்கிய நிகழ்வாகும். ஒரு மருத்துவ காப்பீடு என்பது உங்களை அவசர மருத்துவ செலவுகளில் இருந்து நிச்சயம் பாதுகாக்கும். நீங்கள் உங்களுடைய ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.