இடம் வாங்குவதற்கு கூட வங்கிகள் கடன் வழங்குமா? என்று கேட்டால். ஆம் நிச்சயம் உண்டு. ஆனால், அந்த இடத்தை வீடு அல்லது கடை கட்ட உபயோகிக்க வேண்டும். அதாவது, நிலம் வாங்கி விற்கும் வியாபாரத்திற்கு இந்தக் கடன் தரப்படமாட்டாது என்பதே பொருள். மாத வருமானம் பெறும் 21 வயது நிரம்பியவர்கள் இந்தக் கடன் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும்?
நிலத்தின் அரசாங்க விலையில் இருந்து 80 முதல் 85 சதவிகிதம் வரை கடன் பெறலாம். கடன் பெறுபவரின் வயது, வருமானம் மற்றும் கடனைத் திரும்பச் செலுத்தும் சக்தி போன்றவற்றை கணக்கில் கொண்டு கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
கடனுக்கு வரிச் சலுகை கிடைக்குமா?
நிலம் வாங்குவதற்காக பெறப்படும் கடனுக்கு எவ்வித வரிச் சலுகையையும் இல்லை. வீடு கட்டுவதற்கு கடன் வாங்கினால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
காலத்திற்கேற்ப சந்தைகளைப் பொருத்து வங்கிகளில் வட்டி விகிதம் நிர்ணையிக்கப்படுகிறது. நம் வசதிக்கு ஏற்றார் போல நிரந்தர வட்டி விகிதத்தையோ அல்லது ஃப்ளோட்டிங் வட்டி விகித முறையையோ தேர்ந்தெடுக்கலாம். பொதுவாக நிலம் வாங்குவதற்கான கடன்களில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஆகையால் மாதத் தவணையும் அதிகமாக இருக்கும்.
ப்ராசசிங் கட்டணம் இருக்கிறதா?
உண்டு. கடனுக்கான ப்ராசசிங் கட்டணம் ஒரு சதவிகிதத்தை வங்கிகள் வசூலிக்கும்.
நிலக் கடன் வாங்க தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?
மாத வருவாய் பெறும் ஊழியர்கள்
1. புகைப்படத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
2. அடையாள அட்டை மற்றும் இருப்பிட அடையாளச் சான்றிதழ்.
3. சமீபத்திய சம்பள ரசீது.
4. ஃபார்ம் 16.
5. கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு ஆவணம்.
6. ப்ராசசிங் கட்டணத் தொகைக்கான காசோலை.
நிலம் தொடர்பான ஆவணங்கள்:
1. நிலத்தினுடைய அசல் பத்திரங்கள்.
2. வில்லங்கச் சான்றிதழ்.
3. அங்கீகாரம் பெற்ற நிலத்தின் வரைபடம் மற்றும் நிலம் தொடர்பான ரசீதுகள் மற்றும் பதிவுகள்.
4. நிலத்திற்கு வரி செலுத்திய ரசீது. (நில உரிமையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியது)
எப்படியாவது ஒரு இடம் வாங்கி, வீடு கட்டணும் என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. சரியாக திட்டமிட்டு, முறையாக செயல்பட்டால் கனவு மெய்ப்படுவது நிச்சயம்!