சென்னை:உள்நாட்டில் பணபுழக்கத்தை ஆர்பிஐ இறுக்கிப் பிடித்துள்ளதனால் வங்கிகள் என்ஆர்இ மற்றும் எஃப்சிஎன்ஆர் (FCNR) டெபாசிட்களின் வட்டியை உயர்த்தியது, இந்த செயல் என்ஆர்ஐக்களை கவர துவங்கியுள்ளன. இந்த மாதம் என்ஆர்ஐக்களுக்கான எஃப்சிஎன்ஆர் (பி) விகிதங்களை எல்ஐபிஓஆர் (LIBOR) உடன் சேர்த்து சுமார் 4 சதவீதம் அதிகப்படுத்திக்கொள்ள வங்கிகளை ஆர்பிஐ அனுமதித்துள்ளது. எல்ஐபிஓஆர் என்பது லண்டன் இன்டர்பாங்க் ஆஃபர் ரேட் என்பதைக் குறிக்கிறது.
எஃப்சிஎன்ஆர்(பி) டெபாசிட்கள் என்றால் யு.எஸ். டாலர், யூரோ , ஸ்டெர்லிங் பவுண்ட் போன்ற அயல்நாட்டு கரன்ஸிகளில் வைத்துக் கொள்ளக்கூடிய டெபாசிட்கள் ஆகும். என்ஆர்இ டெபாசிட்கள் போன்றே ஃபாரீன் கரன்ஸி நான் ரெஸிடென்ட் (பாங்க்) திட்டம் என்பதன் சுருக்கமான எஃப்சிஎன்ஆர்(பி), என்ஆர்ஐக்கள் என்று அழைக்கப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும்.
சிண்டிகேட் வங்கி
சிண்டிகேட் வங்கி, சுமார் 3 முதல் 5 வருடங்கள் வரையிலான யு.எஸ். டாலர் டெபாசிட்கள் மீதான எஃப்சிஎன்ஆர் (பி) வட்டி விகிதத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதியிலிருந்து 1% உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிப்பிக்கப்பட்ட வட்டி விகிதம் மூன்று ஆண்டுகளுக்கு 4.78% ஆகவும், நான்கு ஆண்டுகளுக்கு 5.17% ஆகவும், ஐந்து ஆண்டுகளுக்கு 5.56% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசிபி வங்கி
டிசிபி வங்கியும் என்ஆர்இ ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வங்கியின் மூன்று வருடங்கள் வரையிலான பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் வருடத்திற்கு சுமார் 11.83% ஈட்டத்தைக் கொடுக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி இம்மாதத்தின் முற்பகுதியில் எஃப்சிஎன்ஆர் (பி) டெபாசிட்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
ஐடிபிஐ வங்கி
இதனைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் காலவரையறையுடன், ஒன்பது கரன்ஸி எஃப்சிஎன்ஆர் (பி) டெபாசிட்களுக்குண்டான வட்டி விகிதங்களை சுமார் 100 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை அதிகரித்துள்ளது.
என்ஆர்இ டெபாசிட்கள்
என்ஆர்இ டெபாசிட்களைப் பொறுத்தவரை, ஐடிபிஐ வங்கி மூன்று வருடங்களுக்கு மேல் ஏழு வருடங்கள் வரையிலான காலவரையறை கொண்ட டெபாசிட்களுக்கு சுமார் 25 பிபிஎஸ் முதல் 50 பிபிஎஸ் வரை அதிகரித்துள்ளது.
முதலீடு செய்ய பிரகாசமான வாய்ப்பு
என்ஆர்ஐக்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் இப்போதுள்ளது போல் பிரகாசமாக முன் எப்போதும் இருந்ததில்லை. முன்பிருந்த என்ஆர்இ டெபாசிட்கள் எல்ஐபிஓஆர் உடன் இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் சென்ற வருடம் நாட்டிற்குள் டாலர் வரத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த விதிமுறை தளர்த்தப்பட்டது.
என்ஆர்ஐகளுக்கு அதிர்ஷ்டம் தான்
டாலருக்கு எதிராக வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு ஏற்கெனவே என்ஆர்ஐக்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்து மிகுந்த லாபத்தைக் கொடுத்துள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறை அவர்கள் சம்பாதிக்கும் கரன்ஸியை மாற்றும் போதும் அதிகமான இந்திய ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும்.