உலக பொருளாதார சவால்கள் மற்றும் முதலீட்டில் ஏற்பட்டுள்ள மந்த நிலைகளுக்கு மத்தியில், நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளியல் வளர்ச்சி 5.5-6 விழுக்காடு அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2012-13ஆம் ஆண்டின் இந்திய பொருளாதார நிலைமைகளை பலப்படுத்தும் அதே வேளையில், அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசெல்வதில் உறுதியாக இருப்பதாகவும், 5.5-6 விழுக்காடு பொருளியல் வளர்ச்சி இலக்கை எட்ட அனைத்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்
"உலக பொருளாதாரம் சவால்களை சந்திக்கும் இக்கட்டத்தில், இந்திய பொருளாதாரமும் அந்த சவால்களை எதிர்நோக்கவேண்டியது இருக்கும். சவால்களே மக்களிடம் இருந்து திறமையை வெளிக்கொணரும், குறிப்பாக நம் விவசாயிகள்,உற்பத்தியாளர்கள், மற்றும் சேவை வழங்குனர்கள்." என்று கூறிய ப.சிதம்பரம் தன்னை "ஒரு முடிவிலா நம்பிக்கையாளன் " என்றும் கூறினார்.
மேலும் உள்நாட்டு முதலீடுகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என வங்கிகளை கேட்டுக்கொண்ட அவர், பெரிய துறைகள் கடன் வாங்குவதில் மந்தமான சூழலை கொண்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
https://www.goodreturns.in/news/2013/08/01/measures-achieve-growth-rate-chidambaram-194449.html