சென்னை: முதலீடு செய்வதற்கான சிறந்த திட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமும் ஒன்று, இவை அளிக்கக்கூடிய ஏராளமான நற்பயன்களினால் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால், கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய தீர்மானிக்கும் தறுவாயில், இத்திட்டங்கள் பற்றிய சில குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வது முதலீட்டாளர்களுக்கு நன்மையளிக்கும். இவற்றுள் ஒன்று என்ஏவி அறிவிப்புப்ே பற்றியதாகும்.
மியூச்சுவல் ஃபண்ட் என்ஏவி (NAV) அல்லது நிகர சொத்து மதிப்பு என்பது இத்திட்டத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டிகளின் சந்தை மதிப்பேயன்றி வேறொன்றுமில்லை. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட்கள் என்ஏவி மதிப்பை கணக்கிடுவதற்கு, செபியினால் (SEBI) பரிந்துரைக்கப்பட்டுள்ள என்ஏவி கணக்கீடு சூத்திரத்தை உபயோகித்து வருகின்றன.
என்ஏவி:
என்ஏவி என்பது ஃபண்டின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பில் இருந்து அதன் மொத்த கடன் தொகைகளைக் கழித்தது போக எஞ்சியுள்ள தொகையை, நிலுவையில் இருக்கக்கூடிய ஃபண்ட் யூனிட்களின் எண்ணிக்கையைக் கொண்டு வகுத்தால் வரக்கூடிய தொகையே என்ஏவி ஆகும்.
தினசரி விலைப்பட்டியல்
ஃபண்ட் மதிப்பு மற்றும் கடன்கள் தினப்படி மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை; அதனால், என்ஏவி மதிப்பும் அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கக் கூடியதாகும். இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான என்ஏவி தினந்தோறும் இரவு 9 மணியோடு மூடப்பட்டுவிடும் என்று மியூச்சுவல் ஃபண்ட்கள் அறிவித்துள்ளன.
இது எவ்வாறு உங்களை பாதிக்கக்கூடும்?
சாதாரணமாக, மியூச்சுவல் ஃபண்ட்கள் 10 ரூபாய் முக மதிப்புடன் கூடிய புதிய ஃபண்ட் ஆஃபரை வழங்குகின்றன. நீங்கள் 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட சுமார் 100 யூனிட்களுக்கு சப்ஸ்கிரைப் செய்திருக்கும் பட்சத்தில், நீங்கள் சுமார் 1000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஃபண்ட் திட்டமானது, பங்குகள் மற்றும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திருந்தால், அதன் என்ஏவி மதிப்பு உயரும் அல்லது சரியும். என்ஏவி மதிப்பு 11 ரூபாய்க்கு உயர்ந்தால், உங்கள் போர்ட்ஃபோலியோ மதிப்பானது 100 யூனிட்கள் x 11 = 1100 ரூபாய் ஆக இருக்கும். இதன் மூலம் நீங்கள் சுமார் 100 ரூபாய் லாபம் அடைவீர்கள்.
செபியின் விதிமுறைப்படி, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் என்ஏவி மதிப்பு, ஒரு வார காலத்திற்குள் கணக்கிடப்பட்டு, குறைந்தது இரண்டு தினப் பத்திரிக்கைகளிலாவது அறிவிக்கப்பட வேண்டும். மேலும் சில வரையறைக்குட்பட்ட திட்டங்கள் மற்றும் சில மாத வருவாய் திட்டங்கள் போன்றவை என்ஏவி மதிப்பை காலாண்டு அல்லது மாதாந்தர இடைவெளிகளில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.