சென்னை: வைப்பு நிதிகளில் முதலீடு செய்ய ஆசையா? அப்படியானால் ஒன்று அல்லது இரண்டு வாரம் காத்திருந்தால் நலம். காரணம் ஒன்றும் பெரிதல்ல. கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தை 0.25% உயர்த்தியுள்ளது. ரெப்போ விகிதம் என்பது ஆர்.பி.ஐ. மற்ற வங்கிகளுக்கு கடனளிக்கும் விகிதமாகும். இந்த விகிதம் அதிகரித்தால் கடனுக்கும் வைப்பு நிதிகளுக்கும் உண்டான வட்டி விகிதங்களும் அதிகரிக்கும்.
இப்போது வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் அவர்கள் கூறும் பதில்களை பார்க்கையில் கண்டிப்பாக உயர்த்துவார்கள் என்று தான் தோன்றுகிறது. வங்கியின் சொத்து இருப்பு கடப்பாடு குழு இன்னும் சிறுதி நாட்களில் ஒன்று கூடி வட்டி விகித அதிகரிப்பை பற்றி முடிவெடுக்கும் என்று ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதீப் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
கடன் அளிப்பதற்கு பணம் தேவை படுவதால் கடனுக்கு கூட்டுவதை போலவே வைப்பு நிதிகளுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று தெளிவாக கூறினார்.
இந்தியாவில் பெரிய அளவில் கடனளித்து வரும் பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தால் மற்ற வங்கிகளும் அதனை பின்பற்றியே ஆக வேண்டும்.
இதனால் கடைசியாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் வைப்பு நிதியில் முதலீடு செய்ய நினைத்தால், அதுவும் நீண்ட காலத்திற்கு, ஒரு வார காலத்திற்கு பொறுத்திருக்கவும். வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் கடன் அளிக்கும் அளவு அதிகமாக இருப்பதாலும் ஆர்.பி.ஐ ரெப்போ விகிதத்தை அதிகரித்து விட்டதாலும் தான்.
மேலும் இந்நேரத்தில் நீண்ட நாள் கணக்காக வைப்பு நிதி கணக்கை ஆரம்பித்தால் பல ஆண்டுகளுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் அல்லவா? வட்டி குறையும் நேரம் இது உங்களுக்கு கை கொடுக்கும்.