‘டெர்ம் பிளான்' மிகவும் பயனுள்ள திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த திட்டத்தை மட்டும் நம்பியிருப்பது அல்லது இதை மட்டும் சார்ந்திருப்பது ஒரு நல்ல யோசனையா என்பது பலருக்கும் ஒரு கேள்விகுறியாக உள்ளது. டெர்ம் பிளானில் பல நன்மைகள் உள்ளன, இவற்றுள் குறைந்த செலவு மற்றும் ஒரு முழுமையான ஆயுள் காப்பு ஆகிய இரண்டும் முதன்மையான நன்மைகள் ஆகும்.
டெர்ம் பிளான் ஒரு முழுமையான ஆயுள் காப்பீடு என்பதால், எதிர்பாராத விதமாக நீங்கள் இறக்க நேரிட்டால், உங்களால் நியமிக்கப்பட்ட நாமினிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இது ஒரு பெரிய நன்மையாக இருந்தாலும், டெர்ம் பிளானை மட்டும் சார்ந்திருப்பது ஒரு சிறந்த யோசனை அல்ல.
டெர்ம் பிளானுடன், மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள், குழந்தைக் காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவையும் இணைந்ததாக உங்கள் காப்பீட்டு திட்டம் இருக்க வேண்டும். இது எதிர்பாராமல் நேரிடக்கூடிய சம்பவங்களிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க உதவும்.
டெர்ம் பிளான் எவ்வாறு செயல்படுகிறது?
டெர்ம் பிளான் என்ற பெயரிலே இதன் முழு அர்த்தமும் அடங்கியுள்ளது, அதாவது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு உங்களுக்கு ஆயுள் காப்பு வழங்கப்படுகிறது. மேலும் அந்த குறிப்பிட்ட காலத்துக்கு பிரிமியம் செலுத்த வேண்டும், இந்த திட்டகாலம் முடிவடைந்த பின்னர் விண்ணப்பதாரர் உயிரோடு இருந்தால், உங்களுக்கு எதுவும் திரும்ப கிடைக்காது. இருப்பினும், நீங்கள் இறக்க நேரிட்டால், உங்கள் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். டெர்ம் பிளான் மூலம் எந்த வருவாயும் கிடைக்காவிட்டாலும், இதை எளிதாக பராமரிக்க முடிவதால், எல்லோருக்கும் தெரிந்த ஒரு திட்டமாக இது உள்ளது. 35 வயதான ஒருவர், ஆண்டுக்கு ரூ.5000 மட்டும் பிரிமியம் செலுத்துவதால், ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெற முடியும். இதன் காரணமாக டெர்ம் பிளான் எல்லோராலும் கவரப்படுகிறது.
டெர்ம் பிளானின் உண்மையான பயன்
இருப்பினும், டெர்ம் பிளான் மூலம் எந்த வருவாயும் இல்லை, ஆகவே திட்டகாலம் முடியும் வரை நீங்கள் உயிரோடு இருந்தால், உங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. இதன் காரணமாக, எதிர்கால மற்றும் அவசர தேவைகளுக்காக சில கூடுதல் திட்டங்களை வைத்துக்கொள்வது அவசியம்.
தேவையான கூடுதல் காப்பீட்டுத் திட்டங்கள்
மேலே குறிப்பிட்டது போல், ஒரு டெர்ம் பிளானில் மருத்துவம் மற்றும் பணிஓய்வு காப்புகள் இல்லை என்பதால், இவ்வாறான திட்டங்கள் உங்களுக்கு அவசியம். பின்வரும் திட்டங்கள் கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும்.
மெடிகிளைம்
மெடிகிளைம் அல்லது மருத்துவக் காப்பீடு மிக முக்கியமானதாகும். இந்த நவீன காலத்தில் மெடிகிளைம் இல்லாமல் வாழ முடியாது. பெருகிவரும் மருத்துவ செலவுகள் மற்றும் சுகாதாரக் கேடுகள் ஆகியவை காரணமாக மெடிகிளைம் தவிர்க்க முடியாத ஒரு திட்டமாக உள்ளது. நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது டெர்ம் பிளான் மூலம் எந்த பயனும் கிடைக்காது, ஆனால் மெடிகிளைம் மூலம் உங்கள் மருத்துவ செலவுகளை ஈடுசெய்ய முடியும்.
குழந்தை நலத் திட்டம்
மருத்துவ செலவைத் தவிர, சமீப ஆண்டுகாலமாக, கல்விச் செலவுகள் வானத்தை எட்டியுள்ளன. ஆகவே உங்கள் வருமானத்தை மட்டும் வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியாது. உங்கள் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு டெர்ம் பிளான் உதவி செய்யாது. எனவே குழந்தை நலத் திட்டம் மிகவும் அவசியம்.
ஓய்வூதிய திட்டம்
டெர்ம் பிளான்கள் குறுகியகால திட்டமாக இருப்பதால், பெரும்பாலும் இளம் வயதினர்களால் வாங்கப்படுகிறது. ஆகவே சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற ஒருவருக்கு டெர்ம் பிளான் மூலம் எந்தவொரு நன்மையும் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே பணி ஓய்வுக் காலத்தில், தேவையான தொகை கிடைப்பதற்கு, ஒருவர் டெர்ம் பிளானை நம்பி இருக்க முடியாது.
முடிவுரை
எனவே, ஒரு டெர்ம் பிளான் மட்டுமே உங்கள் அனைத்து காப்பீட்டுத் தேவைகளுக்குமான ஒரு தீர்வு அல்ல. டெர்ம் பிளான் வைத்திருக்கும் அதேவேளை, ஏனைய காப்பீட்டுத் திட்டங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது உங்களுக்கும். உங்கள் குடும்பத்துக்கும் ஒரு முழுமையான காப்பீட்டை வழங்கும்.