சென்னை: இன்றைய இளம் பருவத்தினருக்கு ஆலோசனை, அறிவுறை என்றாலே கடுப்பு ஆவார்கள். உண்மைதான், ஆனால் சற்று நிதானமாக யோசித்து பார்த்தால், நீங்கள் எவ்வளவு பெரிய நிதி சுமையிலும், பொறுப்புகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும் (புரியும்). மேலும் இன்றைய இளைஞர்கள் பண விஷயத்திலும் சரி, வாழ்கையை வழிநடத்துவும் சரி, சரியான முறையில் வழி நடத்துபவர்கள் மிகவும் குறைவு தான். ஆனால் அதில் சிலர் விதிவிலக்கு.
பணம் செலவழிப்பது வாழ்கையின் கட்டாயம். ஏன் அனைவருமே பணம் செலவு செய்கிறோம், அதில் சிலர் புத்திசாலிதனமாக சேமிக்கவும் செய்கின்றனர். ஆனால் இளம் வயதில் சேமிக்காமல் பிற்காலத்தில் தவிக்கும் பெரும்பாலானோரை இன்று நம்மால் பார்க்க முடிகிறது.
நீங்கள் சமீபத்தில் படிப்புகளை முடித்துவிட்டு வேலைக்குச் சேர்ந்தவராக இருப்பின், சேமிப்பை வாழ்கையின் ஒரு இன்றியமையாத விஷயமாகக் உணர்ந்திடுங்கள். அவ்வாறு செய்தால் வாழ்கையின் பிற்பகுதியில், சேமிக்க வில்லையே என வருந்த வேண்டியதில்லை. அதைவிட மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், கடன் தொல்லைகள் இல்லாமலும் வாழ முடியும்.
இத்தகைய சூழ்நிலையை உணர்ந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பமா??? தொடர்ந்து படியுங்கள் விடை கிடைக்கும்.
பகுதி நேர வேலை
நீங்கள் கல்லூரியில் படிக்கின்றபோதே பகுதிநேர வேலை ஒன்றை செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களுக்குக் கிடைக்கின்ற ஒய்வு நேரங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
உங்கள் பெற்றோர் உங்கள் கல்லூரிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றால் நீங்களே அதை செய்ய முடியும். பகுதிநேர சுய எழுத்தாளராகவோ அல்லது உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளராகவோ உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளலாம். அதே வேளையில் உங்கள் படிப்பில் கண்ணும் கருத்தோடு இருப்பது அவசியம்.
எதிர்காலத்தை திட்டமிடுதல்
எவ்வளவு முன்னதாக முடியுமோ அவ்வளவு முன்னதாகவே உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். எதை செய்யவேண்டும் என்பதில் குழப்பமிருந்தால், நன்கு உள்நோக்கி ஆராய்ந்திடுங்கள். உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தையும் நீங்கள் சிரமப்படும் விஷயத்தையும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். மேலும் பல திறமைகள் உங்களிடம் மறைந்து கிடக்கலாம். இதை நீங்கள் அறிந்து கொண்டவுடன் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை உங்களால் முடிவுசெய்ய இயலும். நீங்கள் விரும்பும் வேலையில் நீங்கள் வளர்வதற்கான வாய்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒய்வு காலம்....
ஆமாம், உங்கள் வயதான காலத்திற்காக இப்போதே சேமிக்கச் சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றலாம். அனால் அது வேடிக்கையல்ல, ஏனெனில் 50 வயதுகளில் அதிகம் சேமிக்கவேண்டும் என்ற அழுத்தத்திற்கும் அவஸ்தைகளுக்கும் ஆட்படாமல் முன்னதாகவே சேமிக்கத் துவங்குவது புத்திசாலித்தனம். நீங்கள் ஓய்வு பெற்றதும் உங்கள் வருமானம் நின்றுவிடும். இதனால் உங்கள் வாழ்கை பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதையே நீங்கள் விரும்புவீர்கள்.
பணத்தின் உண்மையான மதிப்பினை உணருங்கள்
பணம் மகிழ்ச்சியைத் தராது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அது வசதிகளை மட்டுமே தரும். எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன், அதை விரும்பியதால் மட்டுமே வாங்காமல், அது பயனுள்ள ஒன்றா அல்லது அதை வாங்கினால் நல்ல பயனைத் தருமா என்றும் மேலும் செலவழிக்கும் பணத்திற்கு அது சரியான மதிப்பை தருகிறதா என்று ஆராய்ந்து சரி என்றால் மட்டுமே வாங்குங்கள்.
கிரெடிட் கார்டை பாத்துத் தேய்ங்கப்பா...
மற்றவர்களைப் பார்த்து தாங்களும் கிரெடிட் கார்டை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் அதை உபயோகிக்கத் தெரியாமல் வங்கிகளுக்கு பெரும் கடனாளியாக ஆளாகிறார்கள்.
இதைத் தவிர்க்க கார்டில் செலவு மட்டுமே செய்யாமல், அதனை சரியான தேதிகளில் திரும்பி செலுத்தவும் வேண்டும். இதனால் அதிக வட்டியை தவிர்ப்பதுடன் உங்களுடைய கடன் மதிப்பீட்டுக் குறியீட்டையும் நல்ல முறையில் வைத்துக்கொள்ள இயலும்.
நேர்மறை சிந்தனை
பல தருணங்களில் நீங்கள் வேலையிலும் அங்கு இருப்பவர்களுடனும் மகிழ்ச்சியற்று இருக்கலாம். அத்தருணங்களில் அவர்களை புறக்கணிப்பதும் அல்லது அத்தருணங்களை கையாள முயற்சிப்பதும் நல்லது. வெட்டிப் பேச்சுகளிலிருந்து விலகியிருப்பதன் மூலம் பணியில் சிக்கலைத் தவிர்ப்பதுடன் நீங்கள் செய்யாத தவறுகளுக்கு மற்றவர்களால் இலக்காக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். மேலும், மற்றவர்களிடம் நேர்மையாக இருப்பது உங்களுடைய வளர்ச்சிப்பாதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வாழ்க்கைத்துணை தேர்வு
உங்களைப் புரிந்து கொண்டு உங்களுடைய மதிப்புகளுக்கு மரியாதை அளிக்கும் ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தேடுங்கள். முக்கியமாக, உங்கள் நிதி நிலைகளை புரிந்துகொள்ளும் துணையாக அவர் இருப்பது அவசியம். அவர் உங்களை செலவாளியாக ஆக்காமல் உங்கள் நிதி நிலைகளை நன்றாக திட்டமிடுபவராக இருக்கவேண்டும்.
எதிர்பாரதவைகளுக்குத் தயாராக இருங்கவும்
எதிர் காலத்தை கணிக்க உங்களால் முடியாது. உங்கள் வேலை பறிபோகலாம், அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் நோயுற்று அவருக்காக செலவுகள் செய்ய நேரிடலாம். அதனால், ஒரு அவசரகால நிதியை துவங்கி அதில் சேமிக்கத் தயாராகுங்கள். ஏனெனில் மேற்கூறிய சிக்கல்களில் நீங்கள் சிக்க விரும்ப மாட்டீர்கள். இது போன்ற தருணங்களில் நீங்கள் யாரையும் சார்ந்திராமல், நீங்களாகவே செலவுகளை சமாளிக்க வழி வகுக்கும்.
சேமிப்புத் திட்டங்கள்
சேமிப்பு அல்லது முதலீட்டுத் திட்டங்கள் நீங்கள் நினைப்பது போல் பெரிய விஞ்ஞானம் அல்ல. முயன்றால் அதில் புரிந்துகொள்ள முடியாதது ஒன்றுமில்லை.
சேமிப்புத் திட்ட வகைகள்
பரஸ்பர நிதிகள், பங்கு முதலீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு போன்றவை பொதுவாக உள்ள முதலீடுகள் அல்லது சேமிப்புத் திட்டங்களாகும். அவ்வாறு முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் செலவுகள் தானாகவே குறையும். முடிவில் நீங்கள் நினைத்திராத பெரும் பணத்தை சேமித்திருப்பீர்கள் என்பது நிச்சயம்.