சம்பள உயர்வை பெறுகிறீர்களா..? தாம் தூம் என்று செலவு செய்யாமல் நல்ல முறையில் சேமிப்பது மட்டும் இல்லாமல், முதலீடு செய்து மேலும் பணத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறீர்களா..?
சேமிப்பு என்பது மரம் வளர்ப்பது போல தான். நாம் இன்று மரம் வளர்க்க துவங்கினால் இன்னும் சில வருடங்கள் கழித்து காய், கணி, நிழல் என தந்து நமக்கு உதவும். அது போல உங்கள் சம்பள உயர்வைச் சிறந்த முதலீடாக்கும் 8 வழிகளை நாம் இங்குப் பார்ப்போம்.
இது அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
பிஎஃப் பங்களிப்பு
உங்கள் சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்கிறார்களா? அதில் கூடுதல் பங்களிப்பை நீங்கள் செலுத்தலாம்.
அதாவது தற்போது உங்கள் சம்பளத்தில் இருந்து 6 சதவீதம் பிஎஃப் தொகையை பிடித்தமும், உங்கள் நிறுவனத்தில் இருந்து 6 சதவீதம் அளிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதில் உள்ள உங்கள் பங்களிப்பன 6 சதவீதத்தில் இருந்து மேலும் உயர்த்தக் கோருவதன் மூலம் வரி இல்லாமல் உங்கள் முதலீடு சேமிப்பிற்கு செல்லும்.
இதன் மூலம் நீங்கள் மாதம் ரூ. 5,000 முதலீடு செய்து வந்தால் 8.75 சதவீத வட்டியுடன் 20 வருடங்கள் பின் ரூ. 32.25 லட்சம் பெறலாம்.
ஆர்டி (Recurring deposit)
உங்கள் முதலீடு குறுகிய கால இலக்காக இருந்தால் ஆர்டி ஒரு சிறந்த சேமிப்பு முறை ஆகும். வங்கிகளில் 1 வருடம் முதல் 10 வருடம் வரை முதலீடு செய்வதற்கான திட்டங்கள் உள்ளன.
இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது உங்கள் முதலீட்டின் முதிர்ச்சி காலம் முடியும் வரை வட்டி விகிதம் மட்டும் மாறாது.
ரூ.10,000 என மூன்று வருடங்கள் நீங்கள் முதலீடு செய்து வந்தால் வட்டி விகிதம் 7.5% என்றால் ரூ. 4.15 லட்சம் பெறலாம்.
அடல் பென்ஷன் யோஜனா
இது உங்கள் ஓய்வூதிய திட்டத்திற்கான கூடுதல் திட்டம் ஆகும். இதில் 40 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள் அனைவரும் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து வந்தால் 60 வயதை நிறைவு செய்தது முதல் இறக்கும் வரை ஓய்வூதியமாகப் பெறலாம். மேலும் இறக்கும் போது 8.5 லட்சம் வரை பெற வாய்ப்புள்ளது.
புதிய ஓய்வூதிய முறை (NPS)
புதிய ஓய்வூதிய முறையின் வாயிலாகக் கூடுதல் வரி விலக்கைப் பெறலாம். ரூ. 50,000 வரை இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாகப் பிரிவு 80சி CCD(1b)-இன் கீழ் இந்த வரிவிலக்கைப் பெற இயலும்.
மாதம் ரூ. 4,000 என 20 வருடங்களுக்கு முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 9 சதவீத லாபத்துடன் ரூ. 32.2 லட்சம் பெறலாம்.
ஆயுள் காப்புறுதி
குடும்பத்தைப் நிர்வகிப்பவர் இழக்கும் போது ஆயுள் காப்புறுதி திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அப்போது உங்கள் குடும்ப நிதி அழுத்தத்தைக் குறைக்கும்.
ஈக்விட்டி நிதிகள்
ஈக்விட்டி நிதிகளைப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். இந்த இஎல்எஸ்எஸ் (ELSS) முறை முதலீட்டாளர்களுக்கான சிறந்த தேர்வாகும். பிரிவு 80சியின் கீழ் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு உண்டு.
ரூ. 5,000 என 10 வருடங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்து வந்தால் 12 சதவீத லாபமாக ரூ. 11.20 லட்சம் வரைப் பெறலாம்.
லோ ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்
என்ன தான் லாபம் குறைவாக இருந்தாலும், லோ ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது ஆர்டி மற்றும் வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதை விடச் சிறந்த முதலீடாகும்.
ரூ.10,000 என 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் 9 சதவீத லாபத்துடன் ரூ. 7.5 லட்சம் வரை பெறலாம்.
சுகன்யா சமர்த்தி யோஜனா
சுகன்யா சமர்த்தி யோஜனா திட்டம் ஒரு சிறந்த சேமிப்புத் திட்டம் ஆகும். ஆனால் இது 10 வயதுக்கும் குறைவாக உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் ஒரு சிறப்பான திட்டம். இதுவும் பிரிவு 80சியின் கீழ் வரும் வரி விலக்கு உடைய ஒரு திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் 14 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 12,500 முதலீடு செய்து வந்தால் 8.6 சதவீத வட்டியுடன் ரூ. 40 லட்சம் பெறலாம்.