சமீபத்தில் இந்திய அரசு ரூ.2000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுக்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த ரூபாய் நோட்டுகளின் வரலாறு மற்றும் சில சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம் .
மிகப்பெரிய ரூபாய் நோட்டு எது தெரியுமா?
ரூபாய் நோட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமான அளவில் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு நாட்டின் நோட்டுக்களும் வித்தியாசமான அளவில் இருக்கும். இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கரன்ஸி என்று கூறப்படுவது பிலிப்பைன்ஸ் நாடு கடந்த 1998ஆம் ஆண்டு அச்சடித்த 100,000 peso என்ற கரன்சிதான்.
அதேபோல் ஸ்பானிஷ் தனது நூற்றாண்டு விழாவின் போது அச்சடித்த 180,000 நோட்டுக்களும் அளவில் பெரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் ஏ.டி.எம்
ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் கையால் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் உலகின் முதல் ஏ.டி.எம் மிஷினை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஷெப்பர்டு என்பவர் கண்டுபிடித்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு லண்டனில் முதல் ஏ.டி.எம் உருவாக்கப்பட்டது.
தற்போது உலகம் முழுவதும் 1.7 மில்லியன் மக்கள் உபயோகப்படுத்தும் எ.டி.எம், பணப்புழக்கத்தை அதிகரிக்க வைத்துள்ளது. முதலில் ஆறு இலக்க பின் நம்பர் இருந்தது. இந்த நம்பர்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்பட்டதால் பின்னர் அது 4 இலக்க எண்ணாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கரன்சியில் உள்ள டாலர் வடிவம்
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கரன்சிகளில் டாலர் வடிவங்கள் முதலில் P மற்றும் S போன்ற வடிவங்களில் உருவாகியது. P மேல் பகுதியிலும் S கீழ்ப்பகுதியில் இருந்தது. ஆனால் இந்த கரன்சிகள் 1875ஆம் ஆண்டுகளுக்கு முன்புதான் பயன்பாட்டில் இருந்தது. தற்போதைய அமெரிக்க டாலர்களில் இந்த வடிவம் கிடையாது.
இந்திய கரன்சிகளின் வாழ்நாள் எப்படி
இந்தியாவைப் பொறுத்தவரை 5, 10, 20, 50, 100, 500, 1000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இவற்றில் 5 ரூபாய் நோட்டுகள் அதிக புழக்கத்தில் இருந்தது. எனவே இதன் வாழ்நாள் ஒருவருடம் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் இந்த நோட்டுக்கள் டேமேஜ் ஆகி மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே வந்துவிடும். அதேபோல் 10 ரூபாய் நோட்டுக்களும் அதிக புழக்கத்தில் இருந்ததால் இரண்டு வருடங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும். அதேபோல் ரூ.100 நோட்டு 3 அல்லது 4 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கும். மிக அதிக மதிப்பான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை புழக்கத்தில் இருக்கும்
ரூபாய் நோட்டுக்களில் விஐபிகளின் படங்கள்
ராணி எலிசபெத் அவர்களின் படம் தான் சுமார் 33 நாடுகளின் கரன்சிகளில் உபயோகப்படுத்தப்பட்டது. இவர்தான் உலகின் அதிக கரன்சிகளில் இடம்பெற்றவர். கனடா 1935ஆம் ஆண்டு பிரிட்டனின் 9 வயது இளவரசி யின் படத்தைப் பயன்படுத்தி $20 கரன்சியை அச்சடித்தது.
பிரிட்டனில் ராணி எலிசபெத்தின் படத்தைப் பயன்படுத்தி 26 விதமான கரன்சிகள் அச்சடிக்கப்பட்டது. அவை பெரும்பாலும் இன்று வரை நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான நாடுகள் ராணியின் வயதான தோற்றத்தில் கரன்சிகளை அச்சடித்து வருகின்றன. ஒருசில நாடுகள் மட்டும் பழைய இளமையான ராணியின் புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறது.
அழுக்கடைந்த கரன்சிகள்
சட்டவிரோதமான நோட்டுக்களையும் அழுக்கடைந்த நோட்டுக்கள் என்று சொன்னாலும் உண்மையான நோட்டுக்களும் இந்தியாவின் பல இடங்களில் அழுக்காகி வருகின்றது. ஜீனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் கணிப்பின்படி இந்தியாவில் உள்ள பல கரன்சிகளில் வைரஸ், பாக்டீரியா உள்படப் பல ஆபத்தானவை ஒளிந்திருக்கின்றன.
பேப்பரில் தயாரான கரன்சிகளில் பெரும்பாலும் பாக்டீரியாக்கள் தங்கி அவை நோய் பரப்பியும் வருகின்றன. பல நபர்களின் கைகள் பட்டும், ஏ.டிஎம் களில் இருந்து பெறப்பட்டும் வருவதால் இது ஒரு நோய் பரப்பும் கருவியாகவும் உள்ளது.
100 மில்லியன் டாலர் நோட்டு உங்களுக்குத் தெரியுமா?
ஜிம்பாவே நாடு கடந்த ஜனவரி மாதத்தில் நூறு மில்லியன் டாலர் நோட்டுக்களை அறிமுகம் செய்தது. அதாவது ஒன்றுக்குப் பின்னர் 14 ஜீரோக்கள் அடங்கிய நோட்டு. ஆனால் ஒருசில வாரங்களில் அந்த நோட்டைத் திரும்ப பெற்ற ஜிம்பாவே, அதன் பின்னர் அந்நாட்டு மக்களை அமெரிக்க டாலர், தென்னாப்பிரிக்காவின் ரேண்ட், பிரிட்டிஷ் நாட்டின் பவுண்ட், இந்திய ரூபாய், ஜப்பான் யென், சீனாவின் யான் ஆகிய நோட்டுக்களை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதித்தது. பல நாடுகளின் கரன்சியை பயன்படுத்த அனுமதித்ததால் அந்நாட்டில் பொருளாதாரம் வலுவாகி பணவீக்கம் 0% வரை சென்றது.
உலகின் முதல் பேப்பர் கரன்சி எங்கு அறிமுகம் ஆனது என்று தெரியுமா?
சீனாவில் தான் முதன்முதலாகப் பேப்பர் கரன்சி பயன்படுத்தப்பட்டது. கி.மு 806ஆம் ஆண்டிலேயே அந்நாட்டில் பேப்பரிலான கரன்சி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ரூபாய் நோட்டுக்கள் 17ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் தோன்றியது. மேலும் 1023ஆம் ஆண்டு சீனா 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மங்கோலிய தலைவர் குப்லைகான் அவர்களின் புகைப்படத்துடன் கரன்சியை வெளியிட்டது.